சிலை கடத்தல் வழக்கு.. உரிமை கோரக்கூடாது.. விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு உயர் நீதிமன்றம் "வார்னிங்"..
சென்னை: சிலை கடத்தல் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட காரணத்திற்காக, கடத்தபட்டு மீட்கப்பட்ட சிலைகளுக்கு உரிமை கோரக்கூடாது என விடுதலை செய்யப்பட்டவர்களை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சென்னை அடையாறில் உள்ள ஒரு வீட்டின் கார் ஷெட்டில் 1994-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் 24 கற்சிலைகள்,10 கல் பீடங்கள், 5 பாவை விளக்குகள் என 40 பழங்காலப் பொருட்கள் கைபற்றப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சி.கே.மோகன், ரிக்கி லம்பா, சௌந்தரபாண்டியன், கந்தசாமி உள்ளிட்ட 35 பேர் சேர்க்கப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம், குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை, சாட்சியங்கள் முறையாக இல்லை, சிலைகள் பழங்கால பொருட்கள் என நிரூபிக்கப்படவில்லை போன்ற காரணங்களை கூறி, அனைவரையும் 2012-ம் ஆண்டு விடுதலை செய்தது.
அந்த தீர்ப்பை எதிர்த்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தி மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், சாட்சியங்களை முறையாக விசாரிக்கவில்லை என்றும், கோயில் நிர்வாகத்தால் உடனடியாக புகார் அளிக்கப்படவில்லை என்பதற்காக திருடியவர்களை தப்பிக்க விடக் கூடாது என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆர்.கிஷோர்குமார் ஆஜராகி, "இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளித்த தகவல் மூலமாக 91 சிலைகள் பல்வேறு நாடுகளில் இருந்து மீட்கப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நீதிமன்றம் மேம்போக்காக விசாரித்து அனைவரையும் விடுதலை செய்துள்ளது" என வாதிட்டார்.
ஏழ்மையிலும் மகிழ்ச்சி, இதுதான் என் குடும்பம்... முதல் முறையாக வெளிகாட்டிய சுந்தரி சீரியல் கேப்ரில்லா
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "மீட்கபட்ட சிலைகள் அனைத்தும் கோயில்களில் இருந்துதான் மீட்கப்பட்டது என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கத் தவறியதன் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்படுகிறது" என உத்தரவிட்டார். அதே சமயத்தில், வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவால் மீட்கப்பட்ட பொருட்களுக்கு உரிமை கோரக் கூடாது எனவும் நீதிபதி எச்சரித்தார்.