சாராய வருமானத்தையே நம்பாதீங்க… வேறு ஏதாவது இருக்கான்னு பாருங்க.. ஹைகோர்ட்
Recommended Video
சென்னை: வருவாய்க்காக டாஸ்மாக் மதுபானக் கடைகளையே நம்பிக் கொண்டிருக்காமல், மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்துங்கள் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:தமிழகத்தில் கடந்த ஆண்டில் ரூ. 31,244 கோடிக்கு மதுபானம் விற்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் மது அருந்தும் பழக்கம் 36 சதவீதமாகவும், தமிழகத்தில் மது அருந்தும் பழக்கம் 46.7 சதவீதமாகவும் உள்ளது. மது அருந்தும் பழக்கத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
உடல்நலக்கோளாறு
மதுவால் மனமுறிவு, நிம்மதியின்மை, உடல் நலக்குறைவு உள்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் மதுக்கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணிவரை செயல்படுகின்றன. இரவில் போதையில் வாகனத்தில் செல்வோரால் விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகளவு ஏற்படுகின்றன.
மதுவுக்கு தடை வேண்டும்
எனவே தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்க தடை விதிக்க வேண்டும். மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்த அறிவிப்புகளை பொது மக்களுக்கு தெரியும் வகையில் வைக்கவும், டாஸ்மாக் கடைகளில் மது பானங்களின் விலைப்பட்டியல் வைக்க வேண்டும்.
புகார் எண்
மது விற்பனைக்கு ரசீது வழங்கவும், கூடுதல் விற்பனைக்கு மது விற்றால் புகார் அளிக்க உயர் அதிகாரிகளின் தொடர்பு எண் மற்றும் விவரங்களை டாஸ்மாக் கடைகளில் எழுதி வைக்க வேண்டும். மதுபானங்களில் கலந்துள்ள பொருள்கள் மற்றும் தயாரிப்பாளர் விவரங்களை தமிழில் குறிப்பிட வேண்டும்.
மனுவை விசாரித்த நீதிமன்றம்
டாஸ்மாக் விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: மதுவால் தமிழகத்தில் ஒருதலைமுறையே சீரழிந்து விட்டது.
மாற்று ஏற்பாடு
இனியாவது தமிழக அரசு இந்த நிலையை மாற்ற வேண்டும். தமிழக அரசு வருவாய்க்காக டாஸ்மாக் மதுக்கடைகளையே நம்பிக் கொண்டிருக்காமல், மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
சிசிடிவி கேமிரா
மதுக்கடைகளில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. அதனால் தமிழகத்தில் பல குற்றங்கள் டாஸ்மாக் கடைகளால்தான் நிகழ்கின்றன. எனவே, டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதால் பல சிக்கல்களை தவிர்க்கலாம்.
தீர்மானம் நிறைவேற்றலாம்
அனைத்து ஊர்களிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்தி கிராமங்களில டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றலாம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த வழக்கில் பிப்ரவரி 28ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையையும் அன்றைக்கு ஒத்திவைத்தது.