போலீசுக்கே கடுமையாக டோஸ்விட்ட ஐகோர்ட்.. இனிமேல் ஹெல்மெட் போடாட்டி ஆபத்து உங்க மண்டைக்கு மட்டுமல்ல
சென்னை: இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்ய கூடாது என்றும், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்றும் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் விதி இருப்பதாகவும், ஆனால் இந்த விதியை அரசு முறையாக பின்பற்றுவதில்லை என்றும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் காவல் துறை போக்குவரத்து இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி இன்று வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிராத் ஆகியோர் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
100 நாட்களுக்கு முன் காணாமல் போன முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளது.. சிபிசிஐடி பரபரப்பு தகவல்
நீதிமன்றத்தில் அறிக்கை
அப்போது போக்குவரத்து துறை இணை ஆணையர் சுதாகர் நேரில் ஆஜராகி இருந்தார். இதேபோல் போக்குவரத்து காவல்துறை உயர் அதிகாரி ஸ்ரீஅம்பீசும் ஆஜராகினார். போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர்கள் என்பது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கையை சமர்பித்தனர். அந்த அறிக்கையில் மாநிலம் முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், அபாரதம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஹெல்மெட் அணிவதில்லையே
அப்போது இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களில் ஒருவர் கூட ஹெல்மெட் அணிவதில்லையே என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் அமல்படுத்துவது போன்று ஏன் போக்குவரத்து விதிகளை ஏன் தமிழகத்தில் கடுமையாக அமல்படுத்த முடியவில்லை என்றும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அரசு தலைமை கூடுதல் வழக்கறிஞர், கடந்த 6 மாதங்களில் ஹெல்மெட் அணியாதது தொடர்பாக 4 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அபராதம் உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஒட்டுனர் உரிமம் ரத்து
தற்போது ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு 100 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்படுவதாகவும் இந்த அபராதத்தை அதிகரிப்பது தொடர்பான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது, ஹெல்மெட் அணியால் இருசக்கர வாகனம் ஓட்டுவோரின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்ய கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இது போன்று குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவோரின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்றும் கேள்வி எழுப்பினர்.
போலீசுக்கும் எச்சரிக்கை
மேலும் தமிழகத்தில் மோட்டார் வாகன விதிகள் கண்டிப்பாக அமல்படுத்தப்படுகிறதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், தமிழகத்தில் மோட்டார் வாகன விதிகள் கண்டிப்புடன் அமல்படுத்தப்படுவதாக தெரிவித்தார். இதனிடையே காவல்துறையினர் ஹெல்மெட் அணிவதில்லை என்றும் அவர்கள் மீது என்னநடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் பொதுமக்களை போல் காவல்துறையினரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும்,அவர்கள் அணியாமல் செல்வதை பார்க்க முடிகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த வழக்கை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.