ஆவடி-கூடுவாஞ்சேரி, சென்னை- மாமல்லபுரம் உள்பட 5 ரயில் திட்டங்களை கைவிட்ட ரயில்வே... அன்புமணி தகவல்
சென்னை: திண்டிவனம்-திருவண்ணாமலை, ஈரோடு-பழனி, அத்திப்பட்டு-புத்தூர், ஆவடி-கூடுவாஞ்சேரி, சென்னை- மாமல்லபுரம்- கடலூர் உள்ளிட்ட ஐந்து ரயில் பாதை திட்டங்களை கைவிடும் முடிவில் இருப்பதை இந்திய ரயில்வே திரும்ப பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை-மாமல்லபுரம்- புதுச்சேரி- கடலூர், சென்னை ஆவடி-கூடுவாஞ்சேரி, திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை, ஈரோடு-பழனி, அத்திப்பட்டு-புத்தூர் ஆகிய 5 ரயில்திட்டங்களுக்கு எந்தவித செலவும் மேற்கொள்ளக்கூடாது என்று இந்திய ரயில்வே வாரியம் தென்னக ரயில்வே துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இதன் காரணமாக இந்த திட்டங்கள் அனைத்தும் கைவிடப்படும் நிலை உள்ளது.
இந்திய ரயில்வே வாரியம் கைவிடும்படி அறிவுறுத்தி உள்ள 5 திட்டங்களுமே பா.ம.க.வைச் சேர்ந்த வேலு, மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்த போது தமிழகத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஆகும்.
கடலூர் பாதை
2008-2009-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி சென்னை பெருங்குடியில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி, கடலூர் வரை 178 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அந்த திட்டத்திற்காக ரூ.523 கோடி ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு கிழக்கு கடற்கரைச் சாலைக்கு இணையாக ரயில்பாதை அமைக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தான் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.
463 கிலோ மீட்டர் பாதை
கிழக்கு கடற்கரை ரயில்பாதை திட்டத்திற்காக சென்னையில் இருந்து கடலூர் வரை புதிய பாதை அமைக்கப்படும்பட்சத்தில், கடலூர் முதல் காரைக்குடி வரை இப்போதுள்ள பாதையை மேம்படுத்தி பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், காரைக்குடியில் இருந்து ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரிக்கு 463 கிலோ மீட்டர் புதிய பாதை அமைக்கலாம் என்றும் அப்போது முடிவு செய்யப்பட்டு ஆய்வுகளும் நடத்தப்பட்டன.
நிதி ஒதுக்கவில்லை
இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு 2009-ம் ஆண்டில் அமைந்த புதிய அரசில் பா.ம.க. பங்கேற்காத நிலையில், தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அழுத்தம் கொடுக்காததால் இந்த திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. அதனால், காரைக்குடி, கன்னியாகுமரி புதிய ரயில்பாதை திட்டத்தை முதலில் கைவிட்ட ரயில்வே வாரியம், இப்போது அடுத்தக்கட்டமாக சென்னை- மாமல்லபுரம்- கடலூர் திட்டத்தையும் கைவிட்டிருக்கிறது.
புகழ்பெற்ற மாமல்லபுரம்
பிரதமர் நரேந்திரமோடி, சீன அதிபர் ஜின்பிங் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பால் மாமல்லபுரம் உலகப்புகழ் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, சென்னை முதல் புதுச்சேரி வரையிலான கிழக்கு கடற்கரைச் சாலையை பொழுதுபோக்கு சாலையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தென்மாவட்டங்களுக்கு
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் கடுமையான நெரிசல் நிலவுகிறது. இத்தகைய சூழலில் கிழக்கு கடற்கரை ரயில்பாதை அமைக்கப்பட்டால் அது சுற்றுலா வளர்ச்சிக்கும், தென் மாவட்டங்களுக்கும் கூடுதல் ரெயில்களை இயக்குவதற்கும் பெரும் உதவியாக இருக்கும்.
தொழிற்பேட்டை
ஆவடி-கூடுவாஞ்சேரி இடையிலான ரயில்பாதை ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை கொண்டு செல்லவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்லவும் உதவும்.
நெரிசல் குறையும்
அத்திப்பட்டு-புத்தூர் ரயில்பாதை அமைக்கப்படும் பட்சத்தில் சென்னை-திருவள்ளூர் வழித்தடத்தில் நெரிசல் குறைவதுடன், எண்ணூர் துறைமுகத்துக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்கும் பயனுள்ளதாக அமையும்.
திண்டிவனம்-திருவண்ணாமலை
திண்டிவனம்-திருவண்ணாமலை ரயில்பாதையும், ஈரோடு-பழனி ரயில்பாதையும் ஆன்மிகப் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். அந்த பகுதிகளின் தொழில் வளர்ச்சிக்கும் இந்த திட்டங்கள் வழிவகுக்கும். எனவே, தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய இந்த 5 ரயில்திட்டங்களையும் ரத்து செய்யும் முடிவை ரயில்வே வாரியம் கைவிட வேண்டும். மாறாக, மாநில அரசுடன் இணைந்து இந்த 5 திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.