'அலட்சியம் வேண்டாம்.. மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்ப்பந்திக்காதீர்கள்..' முதல்வர் ஸ்டாலின்
சென்னை: பொதுமக்கள் மாஸ்க்கள் அணியாமலும் தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் பொது இடங்களில் ஒன்று கூடுவது வேதனை தருவதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் சூழலை அரசுக்கு நிர்ப்பந்தித்திட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் சுமார் 68 நாட்களாகக் குறைந்து வந்த வைரஸ் பாதிப்பு, கடந்த நான்கு நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1990 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வைரஸ் பரவல் கையை மீறிச் செல்லாமல் இருக்கக் கூடுதலாக சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா பரவல் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
|
கொரோனா 2ஆம் அலை
அந்த விழிப்புணர்வு வீடியோவில் முதல்வர் ஸ்டாலின், "அனைவருக்கும் வணக்கம். கொரோனா பெருந்தொற்று கடந்த 18 மாதங்களாக நாட்டையும், நாட்டு மக்களையும் வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, அரசின் நடவடிக்கைகள், மருத்துவர்கள், செவிலியர்களின் தன்னலமற்ற சேவை உள்ளிட்டவை மூலம் கொரோனா 2ஆம் அலையை நாம் கட்டுப்படுத்தியுள்ளோம். கொரோனா 2ஆம் அலையை நாம் கட்டுப்படுத்தியுள்ளோமே தவிர முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கவில்லை. கொரோனா என்பது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் தொற்று நோயாக இருப்பதால், அதை எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.
அரசு நடவடிக்கை
முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகக் கருதப்படும் நாடுகளில்கூட மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கேரளா, கர்நாடகா போன்ற நமது அண்டை மாநிலங்களில் மீண்டும் தொற்று பரவல் அதிகமாகி வருகிறது. மக்கள் தொகை அதிகமாகவும், நெரிசலாக உள்ள சூழல் உள்ள நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருந்தாலும் மக்களைக் காக்கும் பெரும் பொறுப்பு அரசின் கையில் இருக்கிறது என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். அதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறோம்.
வேதனை தருகிறது
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது வைரஸ் பாதிப்பு மாநிலத்தில் குறையத் தொடங்கியது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு வைரஸ் பாதிப்பு மீண்டும் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு மக்கள் செயல்பட வேண்டும் என மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகக் கடைகளைத் திறக்க அனுமதி அளித்துள்ளோம். ஆனால், அங்கு வரும் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றத் தவறிவிடுகிறார்கள். பொதுமக்கள் மாஸ்க்குகளை அணியாமலும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருப்பது எனக்கு வேதனை தருகிறது.
மக்களே காரணமாகிவிடக்கூடாது
அதனால் தான் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். சென்னையிலும் அப்படி சில பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகக் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் கொரோனா பரவலுக்கு மக்களே காரணமாகிவிடக்கூடாது என்பதை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
மீண்டும் ஊரடங்கு
மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க வேண்டாம் என்று நான் கடுமையாகவே சொல்கிறேன். மூன்றாவது அலையை மட்டுமில்லை, எந்த அலை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வல்லமையும், உட்கட்டமைப்பும் தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. ஆனால், அதற்காக கொரோனாவை நாம் விலை கொடுத்து வாங்கிவிடக் கூடாது. முதல் அலையைவிட மாறுபட்டதாக இரண்டாம் அலை இருந்தது. அதேபோல இரண்டாம் அலையைவிட மாறுபட்டதாக மூன்றாம் அலை இருக்கலாம். கொரோனா இப்படி தான் பரவும், இந்த பாதிப்புகளைத் தான் ஏற்படுத்தும் என நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது என்பதால் மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது.
கொரோனா தடுப்பூசி
கொரோனாவை தடுக்க தடுப்பூசி தான் தலைசிறந்த ஆயுதம் என்பது உலகமே ஒப்புக் கொண்ட ஒரு உண்மையாகும். தமிழ்நாட்டிற்கு ஒன்றி அரசு வழங்கியுள்ள வேக்சின்களை, நாம் முழுமையாகச் செலுத்தியுள்ளோம். ஆனால் ஒன்றிய அரசு வழங்கும் தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை. 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கான வேக்சின் குறித்தும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த சூழலில் நாம் எந்தளவு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. எனவே, வேக்சின் போட்டுக் கொள்ளாதவர்கள் விரைவாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.
கொரோனா 3ஆம் அலை
முதல் இரண்டு அலையைக் காட்டிலும் மூன்றாவது அலை ஸ்பேனிஷ் காய்ச்சலைப் போல மோசமானதாக இருக்கும் என் வல்லுநர்கள் சொல்வதை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு செயல்படுங்கள். மிக அவசியமான தேவைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வாருங்கள். அப்போது இரட்டை மாஸ்க் அணிந்தே வெளியே வாருங்கள். வெளியே இருக்கும் போது மாஸ்க்குகளை கழட்டக் கூடாது. கைகளைக் கிருமி நாசினியைக் கொண்டு சுத்தப்படுத்துங்கள். சத்தான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். நமக்கு நாமே தான் காவல் என்பதை உணருங்கள். கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். கொரோனாவிலிருந்து நம்மையும், நாட்டையும் காப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.