மஸ்கோத்து அல்வாவே சாப்பிட்டவங்க நாங்க.. கர்நாடகத்துக்கு ஜெயக்குமார் நெத்தியடி
Recommended Video
சென்னை : மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடக அமைச்சர், தமிழகத்திற்கு அல்வா தர முயற்சிக்க வேண்டாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக கூறியுள்ளார்.
மூதறிஞர் ராஜாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பாரிமுனையில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விரைவில் முடிவு எடுப்பார் என்றார்.
இந்த விவகாரத்தில் அவரை கட்டாயப்படுத்த முடியாது என்றும், விரைவில் ஆளுநர் நல்ல முடிவை கொடுப்பார் என்று தாம் நம்புவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும். செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், திருநெல்வேலி அல்வா முதல் மஸ்கோத்து அல்வா வரை சாப்பிட்டு தாங்கள் வலிமையாக உள்ளோம்.
எனவே, மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார், எங்களுக்கு அல்வா தர முயற்சிக்க வேண்டாம் என நகைச்சுவையாக கூறினார்.
இதனிடையே, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற ஈஸ்வரன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடக அமைச்சரை சந்திப்பதை தமிழக முதலமைச்சர் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கர்நாடக அரசை எதிர்த்து, முதலமைச்சர் சட்டரீதியாக போராட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.