பேச கூடாத நேரத்தில் பேச வேண்டாம்.. சினிமாவை விமர்சிப்பதை தவிர்ப்போம்- பாஜகவினருக்கு அண்ணாமலை உத்தரவு
சென்னை: திரைப்படத் துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள் விவாதங்கள் கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என்று பாஜகவினருக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
கோலிவுட்டில் சமீபத்தில் வெளியான ஜெய் பீம், மாநாடு ஆகிய இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட காரணத்தால் இரண்டு படங்களும் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. அதே சமயம் ஜெய் பீம் படத்தின் சில காட்சிகள் பாமகவினர் இடையே எதிர்ப்பை சம்பாதித்தது. வன்னியர் தொடர்பாக அவதூறு பரப்பப்படுவதாக பாமக குற்றஞ்சாட்டி உள்ளது.
கோவையில் ரயில் மோதி.. 3 யானைகள் உயிரிழந்த விவகாரம்.. ரயில் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
பாமக மட்டுமின்றி பாஜகவின் காயத்திரி ரகுராம் போன்றவர்களும் ஜெய் பீம் படத்தை விமர்சனம் செய்து இருந்தனர். இதனால் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பெரும் விவாதம் நிலவி வந்தது.
விவாதம்
இன்னொரு பக்கம் தற்போது மாநாடு படத்திலும் சில காட்சிகள் காரணமாக பாஜக தரப்பினர் அந்த படத்தை எதிர்க்க தொடங்கி உள்ளனர். மாநாடு படத்தில் வரும் வசனம் ஒன்றில், அமெரிக்காவில் குண்டு வெடிச்சா தீவிரவாதி என்கிறோம். அதுவே இந்தியான்னா முஸ்லீம் தீவிரவாதிங்கிறோம். தீவிரவாதிக்கு ஏது சாதி, மதம் என்று காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.
காட்சி
இந்த படமும், படத்தில் வரும் சவனங்களும் இந்து - முஸ்லீம் ஒற்றுமையை சீர் குலைக்கும் விதமாக மாநாடு படம் அமைந்துள்ளது. இதனால் படத்திற்கு உடனே தடை விதிக்க வேண்டும் என்று பாஜகவின் சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜெய் பீம் படத்தை தொடர்ந்து மாநாடு படத்திற்கும் பாஜக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கண்டிப்பு
இந்த நிலையில் திரைப்படத் துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள் விவாதங்கள் கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என்று பாஜகவினருக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாறு மற்றும் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு வரும் திரைப்படங்களில் உண்மைக்கு புறம்பானக் கருத்துக்கள் வந்தால் அதை மக்களுக்கு எடுத்துரைப்பதில் எந்த தவறும் இல்லை.
பாஜக
சில இடத்திலே பாரதிய ஜனதா கட்சி, நம்முடைய கண்டனங்களை கடுமையாக பதிவும் செய்திருக்கின்றது.திரைப்படம் என்பது பெரும்பாலும் இயக்குநரின் கற்பனையின் வெளிப்பாடு. அவர்கள் பார்த்த, படித்த மற்றும் கேள்விப்பட்ட சம்பங்களின் அடிப்படையில் ஒரு திரைப்படம் உருவாகிறது. நமது கட்சியின் சகோதர சகோதரிகள், சிலநேரங்களில் பொழுதுபோக்கு திரைப்படங்களையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
அரசியல் நயம்
கட்சியில் முக்கிய பதவியில் இருக்கும் யார் சொல்லும் கருத்தும் கட்சியின் கருத்தாக மாறுகின்ற சூழல் இருக்கிறது. அது நிறைய நேரத்தில் நமது கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது. எப்பொழுது, எதற்காக பேச வேண்டுமோ அப்பொழுது பேச வேண்டும். பேசக்கூடாத நேரத்தில், பேசுவதை தவிர்க்க வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நயம்!
நமது இலக்கு
நமது இலக்கு, நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு, நமக்கு முன் இருக்கும் சவால்கள் இவற்றை மனதில் கொண்டு கவனமாகச் செயல்படுங்கள்! எனவே திரைப்படத் துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள் விவாதங்கள் கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.