கோவில் விழாக்களில் ஆடல் பாடல்.. நேரடியாக இங்கு அனுமதி கேட்கக் கூடாது.. ஹைகோர்ட்
சென்னை: கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி நேரடியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
கோவில்களில் திருவிழாக்களின் போது, ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிடக் கோரி ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிட முடியுமா என்ற கேள்விக்கு தீர்வு காணும்படி, வழக்குகளை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.
அதன்படி, இந்த வழக்குகளை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கார்த்திகேயன் அடங்கிய அமர்வுக்கு பரிந்துரைத்தார், தலைமை நீதிபதி. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கார்த்திகேயன் அடங்கிய அமர்வு, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி இரண்டு வாரங்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், விண்ணப்பித்த இரு நாட்களில் அதன் மீது முடிவெடுக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டி, நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி அளிக்கும் விண்ணப்பங்களை இரண்டு வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரித்து காவல் துறை உத்தரவிட்டால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், காவல் துறைக்கு விண்ணப்பித்து விட்டு, நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கும்படி உத்தரவிடக் கோரி நேரடியாக வழக்கு தொடர முடியாது எனவும் தெளிவுபடுத்தியுள்ளனர்.