ராமதாசுக்கு வன்மம் இருக்கிறது.. சதி திட்டம் வைத்துள்ளார்.. திருமாவளவன் சரமாரி குற்றச்சாட்டு
சென்னை: தமிழகத்தில் எங்கே காதல் பிரச்சனைகள் இருந்தாலும், எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியோடு இணைத்து பேசுவது மருத்துவர் ராமதாஸின் வாடிக்கையாக இருக்கிறது என்று தொல். திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசியது:
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே குரவம் குப்பம் கிராமத்தை சார்ந்த கல்லூரி மாணவி ராதிகா மற்றும் அவரது உறவினர் விக்னேஷ் ஆகியோர் இருவரும் கடந்த 10ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையயும் அளிக்கிறது.
இதற்கு சமூக வலைத்தளங்கள் மற்றும் ஆபாச வலைத்தளங்கள் இளம் தலைமுறையினரை பாழ்ப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. எளிதில் அதை யாரும் பயன்படுத்த முடியும் என்கிற வகையில், உள்ளது என்பதை அனைவரும் கடுமையாக எதிர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
ஏஎன் 32 விமானப்படை விமான விபத்து.. பலியான 13 பேரின் உடல்களும் மீட்பு!
சமூக வலைத்தளங்கள்
மத்திய, மாநில அரசுகள் இந்திய அளவில் ஆபாச வலைத்தளங்களை தடை செய்ய வேண்டும். சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். எனவே இதற்கு தனியே சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.
ராமதாஸ் வன்மம்
தமிழகத்தில் எங்கே காதல் பிரச்சனைகள் இருந்தாலும், எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியோடு இணைத்து பேசுவது மருத்துவர் ராமதாஸின் வாடிக்கையாக இருக்கிறது. நெய்வேலி ராதிகா மற்றும் விக்னேஷ் தற்கொலையில் வேண்டும் என்றே விடுதலை சிறுத்தைகளை இணைத்து பேசி தனது வன்மத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சதி திட்டம்
சமூக பதற்றத்தை உருவாக்கி சட்டத்தை சீர்க்குலைக்க வேண்டும் என்பது அவருடைய சதி திட்டமாக இருக்கிறது. இத்தகைய போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தனி நபர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளில் விடுதலை சிறுத்தைகளுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆகவே தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் மீது அவதூறு பரப்பி வருகிற இந்த போக்கை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விரைவில் வழக்கு தொடுக்க உள்ளோம்.
சட்டசபை கூட்டம்
தமிழக சட்டசபை, உரிய காலத்தில் கூட்ட வேண்டும், அதற்கான அறிவிப்பை விரைவாக வெளியிட வேண்டும், என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால் சட்டசபையை கூட்டுவதிலும் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது. உட்கட்சி பிரச்சனைகளை சீர்செய்வது சரி செய்வது அவர்களின் கடமை. ஆனால் ஆட்சி நிர்வாக கடமைகளை உரிய காலத்தில் முறைப்படி சட்டபேரவையை கூட்டி அவற்றை செவ்வனே செய்ய வேண்டும். எனவே சட்டசபையை, உடனே கூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.