ஒரே நாளில் 2... அதிமுகவுக்கு "ஹேப்பி நியூஸ்"... சசிகலாவுக்கு "ஐடி ஷாக்".. டெல்லி ஸ்டிராங் சிக்னல்!
சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்ட அதே நாளில்.. மற்றொரு அதிர்ச்சி சசிகலா தரப்புக்கு வருமான வரி துறையின் சார்பில் போயுள்ளது.
பினாமி தடுப்பு சட்டத்தின்கீழ், சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட சொத்துக்களை முடக்கி உள்ளது வருமான வரித்துறை. ஆகமொத்தம் சசிகலா தொடர்புடைய 65 சொத்துக்களை வருமான வரித்துறை இதுவரை முடக்கியுள்ளது.
1600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கடந்த ஆண்டு முடக்கப்பட்ட நிலையில் முடக்கப்பட்ட சொத்துக்கள் மதிப்பு 2 ஆயிரம் கோடி அளவிற்கு சென்றுள்ளது.
சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ.2000 கோடி சொத்துக்களை முடக்கியது வருமான வரித்துறை
முதல்வர் பதவி ஆசை
ஒருபக்கம் சசிகலா தரப்பின் நிதி ஆதாரம் இவ்வாறு முடக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு, தமிழக சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்பாக அவர் சிறையிலிருந்து வெளியாக உள்ளார். அதிமுக தனது கட்டுப்பாட்டில் வர வேண்டும் என்று விரும்பியவர் சசிகலா. சிறை செல்லும் முன்பாக முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்தார். எனவே அவர் சிறையில் இருந்து திரும்பியதும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் அதிமுக செயற்குழு கூடி முதல்வர் யார் என்பதை முடிவு செய்து இன்று முறைப்படி அறிவித்து விட்டது.
ரிலீசுக்கு பிறகு
அரசியல் ரீதியாக சசிகலாவுக்கு மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்ட அவரது ஆதரவு தரப்புக்கு இது மிகப்பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அடுத்த வருடம் சசிகலா சிறையில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டது அதிமுகவில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சசிகலாவின் பின்புறத்தில் உள்ள ஜாதி வாக்குகள் மற்றும் பண பலம் போன்றவை அதிமுகவை அசைத்துப் பார்க்கும் வாய்ப்பு உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கூறிவந்தனர்.
டெல்லி சென்ற டிடிவி தினகரன்
இந்த நிலையில்தான் சசிகலா சொத்துக்கள், அதுவும் முக்கியமான சிறுதாவூர் பங்களா மற்றும் கொடநாடு எஸ்டேட் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், டெல்லிக்கு தனி விமானத்தில் பயணித்ததாக கூறப்பட்டது. ஆனால் அவ்வாறு அவர் டெல்லி சென்றும் கூட எந்த பலனும் கிடைக்கவில்லை என்பதை அதிமுகவில் நடைபெறும் அதிகார மாற்றங்கள் உறுதி செய்வதாக அமைந்துள்ளன.
டெல்லி சிக்னல்
சசிகலா தரப்பு பக்கம் டெல்லி சாய்ந்திருக்கவில்லை என்பது இன்றைய முதல்வர் வேட்பாளர் தேர்வின் மூலமாக தெளிவாக தெரிந்து போய்விட்டது. இந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவருவதற்குள் சசிகலாவை 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன குறிப்பிடத்தக்கது.