கால் டாக்சி டிரைவருடன் மோகம்.. கணவர் கொலை.. 3 குழந்தைகள் தவிப்பு.. உதயலேகாவுக்கு இரட்டை ஆயுள்!
சென்னை: கால் டாக்சி டிரைவருடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது. மோகத்துக்கு ஆசைப்பட்டு, கணவனை பறிகொடுத்து, 3 பெண் குழந்தைகளையும் தவிக்கவிட்டு ஆயுள் முழுக்க ஜெயிலில் கழிக்க போகும் பெண் உதயலேகாவின் சம்பவம் இது!
கடந்த 2017ம் ஆண்டு ஜுன் 4-ம் தேதி.. தமிழகத்தை உலுக்கிய சம்பவம் இது. சென்னை கிண்டி ஜோதி நகர் பகுதியை சேர்ந்தவர் உதயபாலன். இவர் ஒரு என்ஜினியர்.
தன்னுடைய அப்பாவின் எலக்ட்ரிகல் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக வேலை பார்த்து வந்தார். உதயலேகா என்ற பெண்ணுடன் கல்யாணம் ஆகி 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
படுகொலை
இவர்கள் இருவரின் தந்தையும் 25 வருட நண்பர்கள். அதனால்தான் தங்கள் பிள்ளைகளுக்கு "உதய" என்றே பெயர் வைத்து, கல்யாணமும் செய்து வைத்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது உதயபாலன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது வீட்டில் 5 சவரன் நகை, 30 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது.
உதயலேகா
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, கால்டாக்சி டிரைவர் பிரபாகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விரைவில் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டதையடுத்து, போலீசாரின் சந்தேகம் மொத்தமும் உதயலேகா பக்கம் விழுந்தது. கிடுக்கிப்பிடி விசாரணை உதயலேகாவிடம் நடத்தப்பட்டதில், பிரபாகரனுடன் கள்ளக்காதல் இருந்ததும், சொத்துக்களை அபகரிக்க இருவரும் சேர்ந்து திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.
கள்ளக்காதல்
வழக்கமாக, உதயபாலன், வேலை விஷயமாக வெளியூர் செல்வார். சொந்தமாகவே கார் இருந்தாலும், அடிக்கடி கால் டாக்ஸியிலும் போவார். அப்போதுதான் டிரைவர் பிரபாகரன் என்பவருடன் அறிமுகமானார். உதயபாலன் இல்லாத சமயத்தில், உதயலேகாவும் கால் டாக்ஸியில் செல்லும்போதுதான் கள்ளக்காதல் தொத்தி கொண்டுள்ளது.
ஜாமீன்
இந்த தீவிர கள்ளக்காதல்தான் கூலிப்படையை ஏவி பிரபாகரனை கொல்லும்வரை சென்றுவிட்டது. அதாவது உதயபாலனை நகை பணத்துக்காக கொன்றுவிட்டு சிறைக்கு செல்வது என்றும், பிறகு ஜாமீனில் வெளியே வந்து 2 பேரும் சந்தோஷமாக வாழலாம் என்றும் பிளான் போட்டது போலீசாருக்கு தெரியவந்தது. தீவிர விசாரணைக்கு பிறகு இருவரையும் கிண்டி போலீசார் கைது செய்தனர்.
விசாரணை
இந்த சம்பவம் அந்த சமயத்தில் தமிழகம் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டது. வழக்கு விசாரணையின் போது பிரபாகரன் இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து உதயலேகா மீதான வழக்கு விசாரணை சென்னை 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் தொடர்ந்து நடந்து வந்தது.
இரட்டை ஆயுள்
இந்நிலையில், நீதிபதி டி.வி.ஆனந்த், வழக்கை விசாரித்து, தற்போது தீர்ப்பு சொல்லி உள்ளார். உதயலேகா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு கூட்டு சதி, கொலை ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் இரட்டை ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்' என்று நீதிபதி தீர்ப்பு கூறினார்.