அடுத்த இடி.. ரயில்வே பிளாட்ஃபார்ம் டிக்கெட் இன்று முதல் டபுள் மடங்காக உயர்வு.. கொந்தளிக்கும் பயணிகள்
பிளாட்பார்ம் டிக்கெட் இன்று முதல் 20 ரூபாயாக உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: இன்று முதல், 2023 ஜனவரி 31-ம் தேதி வரையில் 4 மாதங்களுக்கு ரயில்வே நடைமேடை கட்டணத்தை 10 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தி தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பண்டிகை காலம் தொடங்கிவிட்டது.. அந்தவகையில், இன்று முதல், 5-ம் தேதி வரையில் சனி, ஞாயிறு, ஆயுத பூஜை என்று தொடர்ச்சியாகப் பண்டிகை வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால், சென்னையிலிருந்து பஸ், ரயில்களில் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குப் பயணப்பட்டு வருகிறார்கள்.
பச்சைக்கொடி அசைத்த மோடி! சீறி பாய்ந்து கிளம்பிய காந்திநகர்-மும்பை வந்தே பாரத் ரயில்! டாப் ஸ்பீட் 160
ரயில்வே அதிரடி
பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. எப்போதுமே, இதுபோன்ற விழா நாள்களில், சென்னையிலிருந்து ரயில்கள் மூலம் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு கிளம்பி செல்வார்கள்.. இவர்களை வழியனுப்ப, அவர்களுடன் சொந்தக்காரர்களும், நண்பர்களும் செல்வார்கள்... இவர்களுக்காக நடைமேடை கட்டணம், அதாவது பிளாட்பார்ம் டிக்கெட் 10 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.
டபுள் மடங்கு
அந்த கட்டணம்தான் இதுவரை வசூலிக்கப்பட்டும் வருகிறது.. வழியனுப்ப வருபவர்களுக்கு 10 ரூபாய் என்பது அதிக கட்டணம் என்று பரவலான கருத்து கூறப்பட்டு வந்தது.. ஆனால், இன்று முதல் அந்த கட்டணம் டபுள் மடங்காக உயர்கிறது.. அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து 2023 ஜனவரி 31-ஆம் தேதி வரையில் 4 மாதங்களுக்கு ரயில்வே நடைமேடை கட்டணத்தை 10 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தி தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டிருந்தது..
கூட்ட நெரிசல்
அந்த அறிவிப்பில், "விழாக் காலங்களில் கூட்டத்தை தவிர்க்க, சென்னை கோட்டத்திற்குட்பட்ட டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில் நடைமேடை டிக்கெட் கட்டணம் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வானது அக்டோபர் 1 -ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 31- ஆம் தேதி வரை அமலில் இருக்கும்" என்று கூறப்பட்டிருந்தது.
கிறிஸ்துமஸ்
பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி பயணிகள் இடையூறு இல்லாமல் பயணிக்கவே நடைமேடை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா தெரிவித்திருந்தார். எனினும், தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில் பிளாட்பாரம் கட்டண உயர்வுக்கு பயணிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எரிச்சல்
"பண்டிகை காலங்களில் பயணிகளுக்கு எரிச்சல் உண்டாக்கும், இந்த கட்டண உயர்வு உள்ளது.. பல ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்க நடைமேடையை கடந்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இதை சரிசெய்யாமல்., ஏதேதோ காரணத்தை சொல்லி கட்டணத்தை உயர்த்துவது சரியல்ல.. 10 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுக்கவே பலர் சிரமப்படும் நிலையில், இப்போது டபுள் மடங்காக உயர்த்தியிருப்பது சரியல்ல.. பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி அதிக வருவாய் ஈட்டுவதை விட்டுவிட்டு, கூடுதல் ரயில்கள் இயக்கி அதன் மூலம் வருவாயை அதிகரிக்கலாம்" என்று பரவலான கருத்துக்கள் எழுந்து வருகின்றன.