எச்.ராஜா ஒன்று பேச.. சி.பி ராதாகிருஷ்ணன் வேறு ஒன்று சொல்கிறார்.. ஸ்டாலினால் பாஜகவில் வெடித்த பூசல்!
திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து தமிழக பாஜக தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களில் நிறைய முரண்பாடு நிலவி வருகிறது.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து தமிழக பாஜக தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களில் நிறைய முரண்பாடு நிலவி வருகிறது. இதனால் தமிழக பாஜகவில் பூசல் நிலவி வருவதாக பேசிக்கொள்கிறார்கள்.
தமிழக பாஜக தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் இருந்த வரை அவர் மற்ற கட்சித் தலைவர்களுடன் நெருக்கமாகவே இருந்தார். முக்கியமாக திமுகவை தமிழிசை விமர்சனம் செய்தாலும் மோசமாக தாக்கியது கிடையாது.
திமுக - தமிழிசை இடையே ஒரு இணக்கம் இருந்து கொண்டேதான் இருந்தது. இதனால்தான் தமிழிசை தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்ட போது கூட ஸ்டாலின் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்தார்.
அரை குறை ஆடை.. ஆபாச குத்து பாட்டு.. அதுக்கு கெட்ட ஆட்டம்.. எதிர்க்க முடியாமல் தவித்த விநாயகர் சிலை
ஆனால் என்ன
ஆனால் திமுக தலைவர் ஸ்டாலினை தமிழக பாஜக இனியும் அப்படி அணுகுமா என்று தெரியவில்லை. தமிழக பாஜகவிற்கு புதிய தலைவராக வரப்போகும் நபர், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் எப்படி நட்பு கொள்வார். என்ன மாதிரியான உறவை பேணுவார் என்று கேள்வி எழுந்துள்ளது. ஸ்டாலினால் தற்போது தமிழக பாஜவிற்குள்ளேயே புதிய குழப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
ஸ்டாலின் எப்படி
திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து பாஜக தேசிய தலைவர் எச். ராஜா இரண்டு நாள் முன் அளித்த பேட்டியில், ப.சிதம்பரம் போலவே தமிழக எதிர்க்கட்சித் தலைவர் சிறை செல்வார். தவறு செய்தவர்கள் எல்லோரும் தண்டிக்கப்பட போகிறார்கள். ஸ்டாலின் விரைவில் ப. சிதம்பரம் போல தண்டிக்கப்படுவார் என்று மிக கடுமையாக குறிப்பிட்டார். அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையானது.
ஆனால் என்ன
ஆனால் திருப்பூரில் திருமண விழா ஒன்றில் பேசிய பாஜக மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக திமுக தலைவர் ஸ்டாலின் திகழ்கிறார். தமிழக அரசியலில் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் இருக்கிறார். மு.க.ஸ்டாலினின் உழைப்பு எங்களை இன்னும் உழைக்க வேண்டும் என உணர்த்தியுள்ளது. ஸ்டாலினிடம் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது, என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
என்ன நிலைப்பாடு
பாஜகவின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஸ்டாலின் குறித்து இப்படி வேறு வேறு நிலைப்பாடு எடுத்து இருப்பது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இரண்டுமே தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு வந்த கருத்துதான் என்று கூறுகிறார்கள். ஆம் ஸ்டாலினை குறித்து இவர்கள் இருவரும் பேசியதற்கு, தமிழக பாஜக தலைவர் பதவிக்கும் பெரிய தொடர்பு உள்ளது.
ஸ்டாலினை எதிர்ப்பது எப்படி
தமிழகத்தில் பாஜக அல்லது பாஜக கூட்டணி காலூன்ற பெரிய தடையாக இருப்பதும் ஸ்டாலினும், திமுகவும்தான். பாஜகவின் பெரிய போட்டி தற்போது காங்கிரஸ் அல்ல, திமுகதான். அதனால் ஸ்டாலினை கடுமையாக எதிர்த்தால் தனக்கு தலைவர் பதவி கிடைக்கும் என்று எச். ராஜா நினைப்பதாக பேசிக்கொள்கிறார்கள்.
இன்னொரு பக்கம்
அதே சமயம் ஸ்டாலினை புகழ்ந்தால் எதிர்காலத்தில் கூட்டணி அமைக்க வசதியாக இருக்கும். இதை வைத்தே தலைவர் பதவியை அடையலாம் என்று சி.பி ராதாகிருஷ்னன் நினைப்பதாக கூறப்படுகிறது. எதிர்கட்சியுடன் இணக்கமாக செல்வது பாஜகவிற்கு எதிர்காலத்தில் உதவும் என்று ராதாகிருஷ்ணன் நினைக்கிறார். இதனால்தான் அவர் ஸ்டாலின் குறித்து அப்படி புகழ்ந்து பேசினார் என்கிறார்கள்.
பூசல்
ஆனால் தமிழக பாஜகவின் இரண்டு பெரும் புள்ளிகள் இப்படி மாறி மாறி பேசுவது தொண்டர்களை குழப்பி உள்ளனர். இப்போது ஸ்டாலினை பாராட்ட வேண்டுமா, இகழ வேண்டுமா என்று தெரியாமல் கட்சியின் தொண்டர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கு கூட இதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் தெரியவில்லை.
உறுதி
ஆனால் ஒன்று மட்டும் இதில் உறுதியாகி உள்ளது. எச். ராஜா தமிழக பாஜக தலைவரானால் கண்டிப்பாக திமுகவிற்கு எதிராக கடுமையான அரசியல் பாதையை தேர்வு செய்வார். அதே சமயம் சி பி ராதாகிருஷ்ணன் தேர்வானால் திமுகவுடன் இணக்கமாக செல்ல முயற்சி செய்வார் என்கிறார்கள்.