விட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக
டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது
Recommended Video
சென்னை: கனவுகளை விதைத்த நாயகன்.. மறைந்த டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள் இன்று!
பண்டித நேருவுக்கு பிறகு நாட்டு மக்கள் அனைவராலும் குறிப்பாக மாணவர்களாலும் மற்றும் குழந்தைகளாலும் பெரிதும் நேசிக்கப்பட்டவர் டாக்டர் அப்துல் கலாம்.
எந்தவித ஜாதீய பலமோ, மதத்தின் பின்பலமோ - கோடீஸ்வர பின்னணியோ இல்லாமல்.. சாதாரண குடும்பத்தில் இந்தியாவின் கடைகோடியில் பிறந்து - குடியரசு தலைவர் வரை தன்னுடைய சொந்த உழைப்பாலும், திறமையாலும் உயர்ந்தவர் டாக்டர் கலாம்.
படித்தவர்... பண்பாளர்.. உடம்பில் ஓடும் ஒவ்வொரு ரத்த துளியிலும் தேச பக்தி உணர்வை இழைத்து கொண்டவர். அதேபோல, தத்துவத்துறையில் தேர்ச்சி பெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கும், கல்வித்துறையில் பண்டித்துவம் பெற்ற டாக்டர் ஜாகீர் உசேனுக்கு பிறகு விஞ்ஞானத்துறையில் சாதனை புரிந்த அப்துல்கலாம் இந்த நாட்டின் முதல் குடிமகனாக வந்ததை நாம் என்றென்றும் பாராட்டப்பட வேண்டியதும், பெருமை பட வேண்டியதும் ஆகும்.
கோவை- பழனி புதிய ரயில் உள்பட தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் இன்று தொடக்கம்
அணுசக்தி துறை
விஞ்ஞான தொழில் நுட்பத்தின் மூலம் இந்த ராக்கெட் விஞ்ஞானி இந்தியவின் பெருமையை விண்ணை தாண்டி நிலைநாட்டியவர். உலக நாடுகளை தனது சிந்தனை மிக்க உரைகளால் வியக்க வைத்தவர். சிறந்த விஞ்ஞானியாக - குறிப்பாக அணுசக்தி துறையின் ஆற்றல் மிக்க வல்லுனராக - தேசத்தின் திறமைமிக்க நிர்வாகியாக - எதிர்காலத்தின் எழிலார்ந்த இந்தியாவிற்காக தினம் தினம் கனவு காணும் தேசபக்தராக திகழ்ந்தவர் டாக்டர் கலாம்.
மக்கள் மாளிகை
100 கோடி மக்களின் அதிகாரப்பூர்வ அதிபர் என்ற உயர் பதவியில், இவர் இருந்த காலத்தில், எளிமையாகவும், இயல்பாகவும், நேசப்பூர்வமாகவும் மாணவர்களோடும், குழந்தைகளோடும் உரையாடும் அவரது உயர்ந்த உள்ளம் பாராட்டுக்குரியது. குடியரசு தலைவர் மாளிகையை மக்கள் மாளிகையாக மாற்றியவர்.
விகே. கிருஷ்ணமேனன்
குடியரசு தலைவராய் திகழ்ந்த காலத்தில் உலக நாடுகளிலும், அனைத்துலக அமைப்புகளிலும் அபாரமான சிந்தனைகளுடன் அற்புதமாய் உரையாற்றி அறிஞர் பெருமக்களையே அசத்தியவர். தனது ஆற்றல் மிக்க உரைகளால் மறைந்த வி.கே.கிருஷ்ணமேனனுக்கு பிறகு இந்தியாவை தலைநிமிர வைத்தவர் கலாம். இதுவரை எல்லா குடியரசு தலைவர்களும் ஓய்வுபெற்ற பிறகு, உண்மையாகவே ஓய்வு பெற்று பொதுவாழ்விலிருந்து ஒதுங்கியே வாழ்ந்தாலும் ஓய்வு பெறாமல் பொதுவாழ்விற்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்து கொண்டவர் டாக்டர் கலாம்.
முல்லை பெரியாறு
தேசத்தின் மிக முக்கிய இரண்டு பிரச்சனையான முல்லை பெரியாறு அணை விவகாரம், கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சனைக்கு மிக முக்கிய ஆலோசனைகளையும் மகத்தான தீர்வுகளையும் முன்வைத்தை நம்மால் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. யார்மீதும் இல்லாத அபரிமித நம்பிக்கையை இளைஞர்கள் மீது வைத்து, அவர்களிடம் தனது தேசம் குறித்த கனவினையும் நிறைவேற்ற சொல்லிட்டு சென்றார்.
மாணவர்கள்
அதனால்தான், இளைஞர்களும், மாணவர்களும் தடுமாறி விழும்போதெல்லாம்.. அவரது பொன்மொழிகளே ஊன்றுகோலாக அவர்களை இன்றுவரை தாங்கி பிடித்து வருகிறது.. அவர் இறந்து வருடங்கள் கடந்தாலும், அவரை பற்றியோ அல்லது அவரை பற்றின செய்திகளையோ, நாம் பேசாமலும், நினைக்காமலும் நாட்களை கடத்த முடியாதுதான் இன்னும் பல காலம் கடந்தாலும், கல்லாக, சிலையாக, ஓவியமாக, புத்தகமாக, கலாம் நம்மிடையே வலம் வந்துகொண்டுதான் இருப்பார்.
காத்திருக்கிறோம்..
அது மட்டுமல்ல.. லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை ஒரு துரும்பளவுகூட இவர் சுமத்த முடியாது. ஏனெனில் இவர் அரசியல்வாதி கிடையாது. இப்பப்பட்ட அப்பழுக்கற்ற - தேச பக்தியை மூச்சாக கொண்ட - நடுநிலை தவறாத - கறைபடாத கைகளையுடைய அரசியல்வாதியை நாம் பார்க்க முடியுமா? இமயம் முதல் குமரி தேடிக் கொண்டுதான் இருக்கிறாம். கால்கள் கடுத்ததும், கண்கள் பூத்ததும்தான் மிச்சம்!