2 வருஷமா கோவா எம்எல்ஏக்களை பொத்திப் பொத்தி பாதுகாத்தேன்.. செல்லக்குமார் எம்பி
சென்னை: கோவாவில் 2 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.க்களை பாதுகாத்தேன் என்று கூறியுள்ளார் கிருஷ்ணகிரி எம்பியும், கோவா மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான டாக்டர் செல்லக்குமார்.
கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் பாஜகவுக்கு அணி தாவிய நிலையில் அது குறித்து அம்மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் செல்லக்குமார் எம்.பி. ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் கோவா காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாதுகாத்தது குறித்து அவர் மனம் திறந்து கூறியுள்ளார். பேட்டியிலிருந்து...
கேள்வி: கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் பாஜகவுக்கு சென்றதற்கான காரணம் என்ன? அவர்கள் ஏன் அதிருப்தி அடைந்தார்கள்?
பதில்: பாஜகவை பொறுத்தவரை பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற ஆணவப்போக்கில் அரசியல் செய்து வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. பலவீனமான எம்.எல்.ஏ.க்களை கோடிகளில் விலைபேசி இழுத்துள்ளார்கள். பாஜக கோடிகளில் தங்களை விலை பேசி அழைப்பதாக இப்போது கட்சி மாறியுள்ள எம்.எல்.ஏக்களே என்னிடம் பலமுறை சொல்லி இருக்கிறார்கள். கட்சி தாவுவதற்கு முதல் நாள் வரை கூட பாஜகவை விமர்சித்து பேசிய எம்.எல்.ஏ.க்கள் உண்டு..அதாவது, பாஜக தன்னை எதிர்த்து குரல் கொடுக்க ஆள் இருக்கக் கூடாது என நினைக்கிறது.
கேள்வி: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாஜக அழைத்தது தெரிந்தும், அதை தடுத்து நிறுத்தி எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்காதது ஏன்?
பதில்: நான் பேச்சுவார்த்தை நடத்தாமல் இல்லை. கடந்த 2 ஆண்டுகளாகவே எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வந்தது. நான் மேலிடப் பொறுப்பாளர் என்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்தி எம்.எல்.ஏ.க்களை பாதுகாத்து வந்தேன். எப்போதும், எந்நேரமும் ஒருவரை சந்தேகித்துக் கொண்டே இருக்கக் கூடாது அல்லவா. தொடர்ந்து கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எம்.எல்.ஏக்களை சந்தித்து பேசித்தான் வந்தேன், மக்களவை தேர்தலில் நான் போட்டியிட்டதால் கடந்த ஒரு மாதம் மட்டும் தான் நான் அங்கு செல்லவில்லை.
கேள்வி: கோவாவில் எஞ்சியிருக்கக் கூடிய 5 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பாஜகவுக்கு செல்லமாட்டார்கள் என என்ன உறுதி?
பதில்: இது போன்ற கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது. இப்போது நான் உங்களிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறேன், எனது மனதில் என்ன இருக்கிறது என உங்களுக்கு தெரியுமா..அதுபோலத் தான், காங்கிரஸ் என்பது 120 ஆண்டுகால கட்சி. பலர் வருவதும், வெளியேறுவதும் நடக்கும். அதற்காக காங்கிரஸ் பலவீனம் அடையாது. கட்சி மாறும் எம்.எல்.ஏ.க்கள் தான் பாவம், இன்று அவர்களது சொந்த தொகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்படுள்ளது. தொகுதி மக்கள் கட்சி மாறிய 10 எம்.எல்.ஏ.க்கள்.மீதும் கோபத்தில் உள்ளார்கள்...
கேள்வி: காங்கிரஸ் கட்சியின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?
பதில்: கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவோம். எதிர்காலத்தில் மனதை அலைபாயவிடும் நபர்களுக்கு சீட் வழங்காமல் கவனமுடன் செயல்படுவோம். இதைத் தான் நிர்வாகிகளும் வலியுறுத்துகின்றனர்.
கேள்வி: கோவா முற்போக்கு கட்சி பாஜக அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளார்கள்.. அதைப் பற்றி தங்கள் கருத்து என்ன?
பதில்: கோவாவில் பாஜக அரசு அமைய காரணமே கோவா முற்போக்கு கட்சி தான். இந்துத்துவாவை எதிர்ப்பதாக பிரச்சாரம் செய்து வெற்றிபெற்றுவிட்டு பாஜகவுக்கு கோவா முற்போக்கு கட்சி ஆதரவு அளித்தது. கோவாவில் பாஜகவை விட காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றும் எங்களை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்துவிட்டு இப்போது அந்தக் கட்சி நீலிக்கண்ணீர் வடிக்கிறது என்றார் டாக்டர் செல்லக்குமார்.