ஆண்களுக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருக்கு.. ஆனா ஈஸியா தீர்க்கலாம்.. டாக்டர் கவுதமன்
சென்னை: ஆண்களுக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருக்கிறது. இதற்கு முதல் காரணம் உடல் பருமன் என ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் கவுதமன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஆயுர்வேத மருத்துவத்தின் டாக்டர் கே கவுதமன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் பொதுவாக குழந்தையின்மை என்ற பிரச்சினை நிறைய பெண்களுக்கு ஏற்படுவதை நாம் பார்த்துள்ளோம்.
ஆனால் ஆண்களுக்கும் சரிசமமான அளவில் குழந்தையின்மை பிரச்சினையை நாம் பார்க்கிறோம். என்னிடம் சிகிச்சைக்கு வருவோர் முதலில் கூறுகையில் சார் நான் குழந்தையின்மை சிகிச்சைக்கு சென்றேன். அப்போது எனது உடல் எடையை குறைக்குமாறு மருத்துவர் கூறினார்.
இது மிகவும் ஆபத்தானது.. மோடி அரசின் அடக்குமுறை.. சொல்வது ஒன்று செய்வது வேறா.. ராகுல் கேள்வி
சம்பந்தம்
உடல் எடைக்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா என கேட்டார். 17, 18 வயதுகளில் ஆண் பிள்ளைகள் உடல் வலிமையாக இருக்க சைவம் முதல் அசைவம் வரை உண்கிறார்கள். இன்னும் சிலர் பாடி பில்டிங்கிற்காக ஊசியையும் போட்டுக் கொள்கிறார்கள்.
உடற்பயிற்சி
வேலைக்கு செல்லும் வரை உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்த அவர்களால் வேலைக்கு சென்றவுடன் உடற்பயிற்சி செய்ய நேரமில்லாமல் உடல் எடை கூடி விடுகிறது. அவர்களால் நடக்க முடியாத நிலையையும் நாம் பார்க்கிறோம். இது ஒரு வகையான உடல் எடை பிரச்சினை. அடுத்தது , வொர்க் பிரம் ஹோம் , முன்பு இளைஞர்கள் ரயில்வே ஸ்டேஷனுக்கோ அல்லது அலுவலகத்தில் பார்க்கிங்கிலிருந்து தங்கள் துறைக்கோ நடந்து செல்வர்.
15 மணி நேரம்
ஆனால் இன்று அதெல்லாம் கிடையாது. 12 மணி நேரம், 15 மணி நேரம் , 18 மணி நேரம் உட்கார்ந்த இடத்திலேயே பணியாற்றுகிறார்கள். இதுவும் உடல் பருமனுக்கு காரணம், ஒரு காலத்தில் பெண்களுக்கு மட்டுமே தைராய்டு நோய் வரும் என்ற நிலை போய் தற்போது ஆண்களுக்கும் தைராய்டு சுரப்பி செயல் குறைபாடு எனும் நோய் ஏற்படுகிறது.
உயிரணுக்கள் பிரச்சினை
100-இல் 65 ஆண்களுக்கு உயிர் அணுக்களின் எண்ணிக்கை குறைபாடு பிரச்சினை ஏற்படுவதற்கு பெரிய பிரச்சினையாக இந்த உடல் எடை உள்ளது. சர்க்கரை நோய், பிபி, இதய நோய், புகைப்பழக்கம், மது பழக்கம் ஆகிய எல்லாம் சேர்ந்து கட்டுக்கோப்பாக இருக்க வேண்டிய ஆண்களின் எடை இன்று புளி மூட்டை போல் மாறி வருகிறது.
ஆண்கள்
குழந்தையின்மைக்கும் ஆண்களுக்கும் நிச்சயம் சம்பந்தமிருக்கிறது. பொதுவாக தாம்பத்தியத்தின்போது என்னவாகும் எனில் இதயம் இரு மடங்கு வேகமாக துடிக்கும். உடலில் முக்கிய உறுப்புகளுக்கு செல்லக் கூடிய ரத்தத்தின் அளவில் மாற்றம் ஏற்பட்டு ஆண்குறிக்கு செல்லக் கூடிய ரத்தத்தின் அளவு அதிகமாகும்போதுதான் ஒரு திறனுள்ள தாம்பத்தியம் நடைபெறும்.
எழுச்சியற்ற ஆண்குறியாகிவிடும்
அப்படியில்லாவிட்டால் எழுச்சியற்ற ஆண்குறியாக போய்விடும். நீங்கள் ஐந்தரை அடி இருக்கக் கூடிய ஆணாக இருக்கிறீர்கள், உங்கள் எடை 65 கிலோ இருக்கிறது என்றால் உங்கள் இதயம் சிரமப்படாமல் உங்களை செயல்பட வைக்கும். இதே அவர் 85 கிலோ அல்லது 90 கிலோவாக இருப்பீர்களேயானால் உங்களால் இல்லறத்தில் திருப்திகரமாக ஈடுபட முடியாது.
மூளை
சீக்கிரமாக விந்து முந்துதல் ஏற்பட்டால் நீங்கள் ரிலாக்ஸ் செய்வீர்கள் என்பதால் உடனே மூளையானது விந்து முந்துதலை கொண்டு வந்துவிடும். அப்போது இல்லறம் நிச்சயமாக ஆரோக்கியமான இல்லறமாக இருக்காது. அடுத்தது உடலின் வளர்சிதை மாற்றம் குறித்து பார்ப்போம். ஆயுர்வேத கோட்பாடுகளின் படி உண்ணும் உணவில் இருக்கும் சத்து ரசதாதுவாக மாறுகிறது.
வளர்சிதை மாற்றம் எப்படி
ரசத்தில் இருந்து ரத்தம், ரத்தத்திலிருந்து மாம்சம் (தசைகள்) , மாம்சத்திலிருந்து மேதஸ் (கொழுப்பு), கொழுப்பிலிருந்து அஸ்தி (எலும்பு), எலும்புகளிலிருந்து மஜ்ஜை , இந்த எலும்பு மஜ்ஜையிலிருந்து உருவாவதுதான் சுக்ரம் என சொல்லக் கூடிய ஆண்களின் உயிரணுக்கள் மற்றும் அதன் திறன். உடற்பயிற்சி இல்லாவிட்டால் மாம்சத்திலிருந்து கொழுப்பாக மாறி அங்கேயே நின்று விடுகிறது.
சுக்ரம்
அது எலும்பாகவே எலும்பு மஜ்ஜையாகவோ அல்லது சுக்ரமாகவோ மாறாமல் போகும்போது உங்களுக்கு இனப்பெருக்கம் மண்டலம் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் ஏற்படுகின்றன. நாம் என்ன செய்கிறோம் என்றால் குழந்தையில்லை என்பதால் உயிரணுக்களை அதிகரிக்க மருந்து சாப்பிடுகிறோம். அப்போது உயிரணுக்களின் எண்ணிக்கை நிறைய இருக்கும். ஆனால் அதில் திறனுள்ள உயிர்கள் குறைவாக இருக்கும். அதாவது தலையில்லாத அணுக்கள், வால் இல்லாத அணுக்கள் நிறைய இருக்கும்.
குழந்தைகள்
நீந்த முடியாதது நிறைய இருக்கும். குறைபாடுடைய விந்தணுக்கள் நிறைய இருக்கும். எனவே உயிரணுக்களை அதிகரிக்க மருந்து எடுத்துக் கொள்வது முழுமை பெற்ற சிகிச்சையாக இருக்காது. எனவே நமது உடல் எடைக்கும், திறனுள்ள உயிர் அணுக்களுக்கும் குழந்தையின்மைக்கும் சம்பந்தம் இருக்கிறது.
பித்தம்
வாதம், பித்தம், கபம் சம்பந்தப்பட்டவர்களாக இருந்தாலும் கூட இன்றைக்கு குழந்தையின்மை ஏற்படுவதற்கு குறிப்பாக ஆண்களுக்கு ஏற்படுவதற்கு அவர்களுடைய விந்து முந்துதல், எழுச்சியின்மை ஆகியவை ஏற்படுவதற்கு எடை ஒரு முக்கியமான காரணம். யாருக்கெல்லாம் புளி மூட்டை போல வயிறு வெளியே தொங்கிக் கொண்டிருக்கிறதோ அவர்களுக்கு குழந்தை இயற்கையாக ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.
ஆயுர்வேதம்
எனவே உடல் எடையை குறைக்க நிறைய முயற்சி செய்ய வேண்டும். ஜீரகம், சோம்பு, மஞ்சள் அல்லது வெந்தயம், கறிவேப்பிலை, ஆளி விதை, கடுக்காய். ஒவ்வொன்றும் 2 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளர் சுடுநீரில் கலந்து ஒரு சிட்டிகை உப்பு, பெருங்காயம் சேர்த்து காலை ஒரு வேளை, மதியம் ஒரு வேளை, இரவு ஒரு வேளை என உணவுக்கு முன்பு சாப்பிட வேண்டும். இதனுடன் ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ள உடலை சுத்தப்படுத்தக் கூடிய வழிமுறைகளையும் சேர்த்து செய்தால் உடல் எடை குறைவது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்கும் என்றார்.