கரையும் கட்சி... காண முடியாத தினகரன்... அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த டாக்டர் ஜெமீலா..!
சென்னை: அமமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளராக இருந்த டாக்டர் ஜெமீலா இரண்டு நாட்களுக்கு முன்னர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துவிட்டார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்.ஆகியோர் முன்னிலையில் அவர் தன்னை அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக்கி கொண்டார்.
இதனிடையே அதிமுக சிறுபான்மை பிரிவிலோ அல்லது ஐடி விங்கிலோ இவருக்கு மாநில அளவிலான பதவி ஒன்று தரப்படும் எனத் தெரிகிறது.
அழுத்தம் மட்டும் போதாது.. ஆக்கப்பூர்வமான அறிக்கை தேவை.. திமுகவுக்கு சபாஷ் சொன்ன டாக்டர் ஷர்மிளா
பொதுவாழ்வு
சென்னையில் உள்ள சிறந்த மகப்பேறு மருத்துவர்களில் டாக்டர் ஜெமீலாவும் ஒருவர். சமூக செயற்பாட்டாளராக இருந்த அவர் பொதுவாழ்வு மீது கொண்ட விருப்பம் காரணமாக அரசியலுக்கு வந்தவர். பாஜக சார்பில் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின் போது ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட இவர், அதற்கு பிறகு கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமமுகவில் இணைந்தார்.
ஐடி விங்
அங்கு அவருக்கு தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் டூர் அடித்து கட்சிப் பொதுக்கூட்டங்கள், ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொள்ளத் தொடங்கினார். மேலும், நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ராயபுரம் தொகுதியிலோ, அல்லது ஸ்ரீ வைகுண்டம் தொகுதியிலோ டிடிவி தினகரன் தன்னை வேட்பாளராக நிறுத்துவார் என எதிர்பார்த்தார்.
சீட் இல்லை
ஆனால் இவருக்கு தினகரன் சீட் கொடுக்கவில்லை. இருப்பினும் இதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமமுக வேட்பாளர்களுக்கு தென் மாவட்டங்கள் முழுவதும் திறந்தவெளி ஜீப்பில் நின்றவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனிடையே தேர்தல் முடிந்த பிறகாவது தோல்விக்கான காரணங்களை தினகரன் ஆராய்வார் தங்களை போன்றவர்களை அழைத்து இது குறித்து ஆலோசிப்பார் என எதிர்பார்த்தார். ஆனால் அதுவும் நடக்கவில்லை.
ஜெமீலா
டாக்டர் ஜெமீலாவை அமமுகவிற்கு அழைத்து வந்தவர் மறைந்த வெற்றிவேல். அவர் உயிருடன் இருந்தவரை சிக்கலின்றி கட்சிப்பணிகள் சென்ற நிலையில், இப்போது ஓரங்கட்டப்படுகிறோமோ என்ற எண்ணம் ஜெமீலாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே அதிமுக மாவட்டச் செயலாளர் தி.நகர் சத்யா, டாக்டர் ஜெமீலாவை அதிமுகவில் இணைத்துவிட்டார்.
சரியான தருணம்
டாக்டர் ஜெமீலாவின் வருகையை சரியான தருணமாக பார்க்கிறது அதிமுக தலைமை. எப்படியென்றால் முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் அதிமுகவிலிருந்து வெளியேறிய சூழலில், உடனடியாக அவரது சமூகத்தை சேர்ந்த முக்கியப் பிரமுகரான ஜெமீலாவை கட்சியில் இணைத்து அரசியல் ஆடு புலி ஆட்டம் ஆடி வருகிறது அதிமுக தலைமை.
விளக்கம்
இதனிடையே அதிமுகவில் இணைந்தது குறித்து ஜெமிலாவிடம் நாம் பேசிய போது,''தினகரன் எங்கிருக்கிறார் என்றே யாருக்கும் தெரியாது. தேர்தல் முடிந்து இத்தனை நாட்கள் ஆனதே, ஒரு தடவையாவது தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்திருப்பாரா. பிரச்சாரத்துக்கு நான் சென்ற போது, பல இடங்களில் அமமுக வேட்பாளர்களே திமுக வேட்பாளர்களை தாக்கி பேசாதீர்கள் என என்னிடம் கூறியிருக்கிறார்கள். இப்படியிருந்தால் கட்சி எப்படி வளரும். அதிமுகவை பொறுத்தவரை யார் உண்மையாக உழைத்தாலும் அவர்கள் முன்னேறி கரை சேர்ந்துவிடலாம் '' என்றார்.