டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ரொம்பத்தான் குசும்பு... கூட்டணி குறித்து முடிவே பண்ணலையாம்!
எம்பி தேர்தலில் போட்டியிடுவது குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி பதிலளித்துள்ளார்.
-கோயா
சென்னை: 'கூட்டணி பற்றி முடிவு இல்லை' என்று முழு பூசணிக்காயை மூடி மறைத்து பேசியுள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி.
இந்த கட்சி என்றில்லாமல் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கட்சி என எல்லாவற்றிலுமே நுழைந்து தனி தொகுதி சீட்டை பெற்றுவிடுவார் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி. இவரது சீட் விஷயத்தில் கருணாநிதி எப்பவுமே கொஞ்சம் தாராளமாகவே இருந்திருக்கிறார்.
வருகிற எம்பி தேர்தலில் போட்டியிடுவது குறித்துசெய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை, மேலும், தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வந்தால் தான், முடிவு அறிவிக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார். கூடவே நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
புதிய தமிழகம்
கடந்த 2 மாசமாகவே அதிமுக-பாஜக கூட்டணியில் புதிய தமிழகம் சார்பில் துண்டை போட்டு ஒரு சீட்டையும் வாங்கிவிட்டதாக ஏற்கனவே தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
தென்காசி
அது மட்டுமில்லை, கிருஷ்ணசாமி, போட்டியிடுவதற்கு தென்காசி தொகுதியை கிட்டத்தட்ட உறுதிசெய்துவிட்டு செய்தியாளர்களிடம் இப்படி எதற்கு மறைக்கிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ளனவாம்.
அரசியல் லாபம்
அதிமுக-பாஜக தரப்பினரிடையே தன் மகனுக்கும் சேர்த்து ஏதாவது அரசியல் லாபம் கிடைக்குமா என்பது குறித்து நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு இன்னும் கிட்டாததே கிருஷ்ணசாமி இப்படி பேசுவதற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
தேர்தல் தேதி
எது எப்படியோ, அதிமுக-பாஜக 2 நாளில் கூட்டணி அறிவிப்பதாகவே வைத்து கொண்டாலும், அதில் தென்காசி தொகுதி புதிய தமிழகத்துக்கு என்று ஒதுக்கினால் கிருஷ்ணசாமியின் முடிவு என்ன?, போட்டியிடாமலேயே ஒதுங்கிவிடுவாரா? அல்லது தேர்தல் தேதி வரட்டும், பிறகு பார்க்கலாம் என்று அதிமுக-பாஜக தரப்புக்கு பதில் அளிப்பாரா? என்பதை பார்க்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் முணுமுணுக்கிறார்கள்.