தேவேந்திர குல வேளாளர்கள் பெயர் மாற்றம்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு டாக்டர் கிருஷ்ணசாமி வரவேற்பு
திமுக தலைவர் முக ஸ்டாலினை டாக்டர் கிருஷ்ணசாமி பாராட்டி உள்ளார்.
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் தேவேந்திர குல வேளாளர்கள் என்று அரசுப்பட்டியலில் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளதற்கு டாக்டர் கிருஷ்ணசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக, திமுகவின் கீழ் கட்சிகள் அணிதிரண்டு வருகின்றன. இதில், புதியத் தமிழகம் கட்சி பாஜகவோடுக் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் இதுவரையில் எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என சமீபத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியிருந்தார்.
செய்தியாளர்களிடம் பேசும்போதுகூட, "எங்களுடைய பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய, மாநில அரசை இதுவரை வலியுறுத்தி வந்தோம். ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்காமலேயே உள்ளன. இருந்தாலும் ஆனாலும் வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் புதிய தமிழகம் கட்சி உள்ளது" என்று சொல்லி இருந்தார்.
இழுபறி
7 சமூகத்தை சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர்கள் என்று அறிவிப்பதில் அரசுக்கு ஒரு பிரச்சனையும் ஏற்பட போவதில்லை, குறிப்பாக எந்த நிதிச்சுமையும் வரப்போவதில்லை என்பதுதான் கிருஷ்ணசாமியின் வாதம். அதனால்தான் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தியில் அவர் உள்ளதாகவும், இதன்காரணமாகவே கூட்டணி இழுபறியும் நீடிப்பதாக சொல்லப்படுகிறது.
தேர்தல் அறிக்கை
பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை வேறு கட்சிகள் யாராவது அவர்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டால் அவர்களுடன் கூட்டணி அமைப்பது குறித்து பரிசீலிப்பது என்றும் கிருஷ்ணசாமி முடிவு செய்து வைத்திருந்தார்.
அரசுபட்டியல்
இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் தேவேந்திர குல வேளாளர்கள் என்று அரசுப்பட்டியலில் பெயர் மாற்றம் செய்யபடும் என்று தெரிவித்துள்ளது. இப்போது இதனை கிருஷ்ணசாமி வரவேற்றுள்ளார். இத்தனை காலமாக பாஜக-அதிமுகவிடம் காத்துக்கிடந்தது புதிய தமிழகம்.
கிருஷ்ணசாமி
ஆனால் இப்படி ஒரு அறிவிப்பு திமுக தரப்பிலிருந்து வரவும் அதனை மனப்பூர்வமாக வரவேற்றுள்ளார் கிருஷ்ணசாமி. தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
சமுதாய அமைப்புகள்
இதனால் கூட்டணியில் இழுபறி நீடித்து வரும் நிலையில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கவும் வாய்ப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. ஒருவேளை கூட்டணி அமையாவிட்டாலும் சமுதாய அமைப்புகளை ஒன்றிணைத்து 20 தொகுதிகளில் போட்டியிடவும் கிருஷ்ணசாமி முடிவெடுக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.