ஏன்.. என்னை விட்டு இவ்வளவு சீக்கிரம் போனீங்க அருண் ஜேட்லி.. டாக்டர் மைத்ரேயன் கண்ணீர்
Recommended Video
சென்னை: அன்பு சகோதரரே, அருண் ஜெட்லி அவர்களே! ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டு சென்றீர்கள்? என்று முன்னாள் அதிமுக ராஜ்யசபா எம்பி டாக்டர் மைத்ரேயன் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அருண் ஜேட்லி குறித்து பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக மைத்ரேயன் போட்டுள்ள பதிவு:-
முன்னாள் மத்திய நிதியமைச்சர் எனது அன்பு சகோதரர் அருண் ஜெட்லி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும் மனவேதனையையும் தருகிறது. அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு. அவரை இழந்ததன் மூலம் நான் என்னையே இழந்ததாக உணர்கிறேன்.
பாசம் கொண்டவர்
என் மீது தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர். கடந்த 28ஆண்டுகளாக அவரோடு நெருங்கிப் பழகியவன். 2002ல் நான் மாநிலங்களவை உறுப்பினரான பிறகு அவையில் ஒவ்வொரு நிகழ்விலும் எனக்கு அறிவுரையும் ஆலோசனையும் கூறி எனக்கு வழிகாட்டியவர்.
மார்க்கெட்டில் கூடுவோம்
2007 - 2014 காலங்களில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது டெல்லி பெங்காலி மார்க்கெட்டில் ஜெட்லியின் இல்லத்தில் நண்பர்கள் வாரத்திற்கு குறைந்தது ஒரு முறையாவது கூடுவோம். ஜெட்லி, நான், பத்திரிகையாளர் ராஜகோபாலன், சேகர் ஐயர், டைம்ஸ் நௌ நவிகா குமார், என்.டி. டிவி வைத்தியநாதன், கூமி கபூர், ஷீலா பட், புதிய தலைமுறை கணபதி மற்றும் பலர் இந்த டிக்கி க்ளப்பின் உறுப்பினர்கள். ஆலு டிக்கி, சமோசா, சன்னா, காஃபி, தேநீர் ஆகியவற்றோடு அரசியல் அலசல் களைகட்டும். மறக்க முடியாத சுவையான, சுவாரஸ்யமான நாட்கள் அவை.
ஜெயலலிதா மீது பாசம்
மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் பாசம் கொண்டவர். அம்மா அவர்களும் அருண் ஜெட்லி மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். கர்நாடக நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, பெயிலில் வந்த அம்மா தனக்கென ஒரு வேலி அமைத்துக்கொண்டு யாரையும் சந்திக்கவில்லை.
ஜெ.வை சந்தித்தார்
அப்போது கூட 2015 ஜனவரி 18 ம் தேதி அம்மா அவர்களை சந்தித்த ஒரே அரசியல் தலைவர் அருண் ஜெட்லி தான். 40 நிமிடங்கள் நீடித்த அந்த சந்தர்ப்பத்தில் கூட அம்மா அவர்களிடம் என்னைப் பற்றி முழுதாக 5 நிமிடங்கள் பேசியதை என்னால் என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. மிகச் சிறந்த பாராளுமன்றவாதி. தலைசிறந்த பேச்சாளர். மறக்க முடியாத மனிதர்.
ஒவ்வொரு தலைவராக மரணம்
பாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி அவர்களால் வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் ஒவ்வொருவராக மறைந்து வருகின்றனர். முதலில் பிரமோத் மகாஜன், பிறகு அனந்தகுமார், சுஷ்மா சுவராஜ், இப்போது அருண் ஜெட்லி. அருண் ஜெட்லி அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன்திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு சகோதரரே, அருண் ஜெட்லி அவர்களே! ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டு சென்றீர்கள்?