எதிர்ப்பு சக்தி ஏற்படாமல் மனித இனத்திற்கு தண்ணீர் காட்டும் கொரோனாவின் புரதங்கள்!.. Dr செல்லக்குமார்
சென்னை: எதிர்ப்பு சக்தி ஏற்படாமல் மனித இனத்திற்குத் தண்ணீர் காட்டும் கொரோனா வைரஸின் புரதங்கள் பற்றி பேராசிரியர் மருத்துவர் முத்துச் செல்லக்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேராசிரியர் மருத்துவர் முத்துச் செல்லக் குமார், ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் கொரோனா வைரஸ் உடலில் 29 வகையான புரதங்கள் உள்ளன. இதில் நான்கு புரதங்கள் தான் அமைப்பு கொண்ட புரதங்கள்.மற்றவை அமைப்பு இல்லாமல் உருவாகும் புரதங்களும்,. சில துணை புரதங்களும் ஆகும்.
அமைப்பு கொண்ட புரதங்கள் என்றால் என்ன என்பதை பார்ப்போம். (E, M, N, and S) -நான்கு புரதங்கள் உள்ளன. E புரதம், வைரஸ் உறையில் உள்ளதாகும். M புரதம்,சவ்விலுள்ள புரதமாகும், N புரதம் வைரஸின் ஆர்.என்.ஏ.மூலக்கூறுடன் இணைந்திருக்கும். S புரதம்தான் வைரஸின் உடலில் நீட்டிக் கொண்டிருக்கும் கொம்பு போன்ற பகுதியில் இருக்கும்.இந்த புரதம் தான் மனித உடல் செல்லில் ஏற்பிகளின் (ACE2 receptor) மூலமாக உள்ளே நுழைகிறது.
பாலி பெப்டைட்
அமைப்பு சாரா புரதங்கள் (Nonstructural proteins) என்பது குறித்து பார்ப்போம். அதற்கு உதாரணம் (Nsp1 to Nsp16)
அமைப்பு சாரா புரதங்கள் நீண்ட பாலி பெப்டைட் அமைப்புகளாக இருக்கும். இதனை வைரஸின் புரோட்டியேஸ் நொதி தேவைக்கு ஏற்ப நறுக்கும். இவை 16 சிறிய புரதங்களாக பிரிக்கப்படும்.
துணை புரதங்கள்
துணை புரதங்களான orf3a, orf3b, orf6, orf7a, orf7b, orf8, orf9b, orf9c, and orf10 ஆகியவை இந்த வைரஸ்களிடம் காணப்படும் மூன்றாவது வகை புரதமாகும். வைரஸ்களின் அமைப்பு சாரா புரதங்கள் மற்றும் துணை புரதங்கள் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெற்ற போதும், இவை குறித்தும், இவற்றின் செயல்பாடுகள் குறித்தும் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை.
வைரஸ் போர்
பரிணாம மாற்றத்தின் போது,புதிதாக உருவெடுத்த வைரஸ்களுக்கும் மனித செல்களுக்குமிடையே ஒரு மிகப் பெரிய போராட்டம் நடக்கும். மனித உடல் எதிர்ப்பு செல்களும், எதிர்ப்பு புரதங்களும் வைரஸை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும். ஆனால், அதனை எப்படியாவது முறியடிக்க தங்களது மூலக்கூறுகளையும், புரதங்களையும் மாற்றிக் கொண்டே இருக்கும். இப்படி கண்ணுக்குத் தெரியாத ஒரு யுத்தம் தான்,சத்தமின்றி உலகில் கோவிட் தொற்று ஏற்பட்ட ஒவ்வொரு மனித உடலிலும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
மரபணு
மனித செல் கருவில்தான், குரோமோசோம் இருக்கும். அதில் டி.என்.ஏ. அமைப்பு உள்ளது. இதில் தான் மரபணுக்கூறுகள் உள்ளன. இதில் மிகப் பெரிய கையேடு உள்ளது. அதில் பல்வேறு அத்தியாயங்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு திறன் என்ற அத்தியாயமும் இருக்கிறது. வைரஸ் தொற்று உடலில் ஏற்பட்டால் உடல் எதிர்ப்பாற்றல் எவ்வாறு செயல்பட வேண்டுமென்ற செய்தியும் அதில் அடங்கி இருக்கும்.
வைரஸ் நுழைந்தால்..
இந்தச் செய்தியை செயலாற்ற முறையான சிக்னல்கள் மனிதத் தொற்று ஏற்பட்ட செல்களில் இருந்து வெளிப்பட வேண்டும்.
அது மூன்று கட்டமாக நடக்க வேண்டும்.அப்போது தான்
இன்டர்ஃபெரான் வெளிப்பட்டு உடலின் எதிர்ப்பாற்றலை கொண்டு வர முடியும். ஆனால், இந்த மூன்று கட்டங்களையுமே கோவிட் வைரஸ் நடக்க விடாமல் தடுப்பது சமீப ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
டிரான்ஸ்கிரிப்ஷன்
முதல் கட்டம் டிரான்ஸ்கிரிப்ஷன் (Transcription),எனப்படும். இதன்படி மரபணு செய்தி கருவை விட்டு,எம்.ஆர்.என்.ஏ எனப்படும் ஒரு மூலக்கூறு( mRNA) மூலமாக வெளி வருவது. இது ஆர்.என்.ஏ. படியெடுப்பு என்றும் அழைக்கப்படும். வெளி வந்து ஒருங்கிணைந்து முதிர்ச்சி அடையும்.ஸ்பிலைஸிங் (splicing), என்று இது அழைக்கப்படுகிறது.
இரண்டாவது கட்டம் டிரான்ஸ்லேஷன்
இரண்டாவது கட்டத்தில், இவ்வாறு சைட்டோபிளாசத்திற்கு வந்த எம்.ஆர்.என்.ஏ, புரதத் தொகுப்பின் தளமான ரைபோசோம்
என்ற பகுதியோடு இணைந்து செய்தியைப் படித்து உறுதியாக்கி ,இது தொடர்பான புரதத்தை உருவாக்கும். இதனை டிரான்ஸ்லேஷன்( Translation)என்பார்கள்.
புரதக் கடத்தல்
மூன்றாவது கட்டத்தில், உருவான புரதங்கள் சைட்டோபிளாசத்தை விட்டு, செல்லுக்கு வெளியே வர வேண்டும். இதனை புரதக் கடத்தல் (Protein trafficking)என்று சொல்கிறார்கள். அப்போது தான் ஏற்பட்ட வைரஸ் தொற்றை பிற செல்களுக்கும் கொண்டு போக முடியும். இந்த மூன்று கட்டத்தையுமே கோவிட் வைரஸ் நடக்கவிடாமல் தடுப்பதால்,உடல் எதிர்ப்புத் திறன் ஏற்படாமல் போகிறது.நமது உடல் எதிர்ப்பாற்றலுக்கு இந்த வைரஸ் ஆரம்பத்திலிருந்தே தண்ணீர் காட்டுகிறது.
கோவிட் வைரஸால் சிக்னல்களில் ஏற்படும் சிக்கல்கள்
என்ன சிக்கல்கள்
முதல் கட்டம்- NSP16 என்ற வைரஸ் புரதம்,முதல் கட்டம் நடைபெறாமல் தடுக்கிறது.
இரண்டாவது கட்டம்- NSP1.என்ற வைரஸ் புரதம்,
இரண்டாவது கட்டத்தில், எம்.ஆர்.என்.ஏ மூலக்கூறு, ரைபோசோம் உடன் சேருவதைத் தடுக்கிறது.
அதே வேளை, கோவிட் வைரஸின் எம்.ஆர்.என்.ஏ, நமது ரைபோசோம் உடன் சேர்ந்துவிடுவதால் ,வைரஸ் புரதங்கள் உருவாகின்றன.
மூன்றாம் கட்டம்- NSP9 மற்றும்NSP8 ஆகிய வைரஸ் புரதங்கள்,மூன்றாம் கட்டம் நடைபெறாமல் தடுக்கிறது.
துணை புரதம்
மேலும் ,orf3b, என்ற கோவிட் வைரஸின் துணை புரதம், வைரஸிற்கு எதிராக ஏற்படும் இன்டர்ஃபெரான்-1,என்ற எதிர்ப்பாற்றல் புரதத்தின் செயல்பாட்டைத் தடுக்கக் கூடியது என்று ஜப்பான் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். ஆராய்ச்சி தான் ஒரே வழி!
திருடன் நுழையும் போது அலாரம் அடித்தால் எல்லோரும் உஷாராகி திருடனை பிடிக்க முடியும்.
பயிற்சி
ஆனால்,கோவிட் வைரஸ் எங்கு பயிற்சி பெற்றதோ தெரியவில்லை! அலாரத்தை மட்டுமில்லை சிசிடிவி கேமிராவையும் அணைத்து விட்டு மனிதர்களை குறி வைத்து வந்துள்ளது. எனவே,மனித செல்களின் ஆரம்ப அலாரத்தை ஆப் பண்ணி, தடுத்திடும் வைரஸ் புரதங்களின் செயல்பாட்டைத் தடுத்திடும் மருந்துகளை உருவாக்க ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் எதிர்ப்புத் திறன் ஆரம்பத்திலேயே தடைபட்டு போவதைத் தடுத்து வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபட முனையலாம் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.