டாக்டர் ராமதாஸும், திருமாவளவனும் கை கோர்க்க வேண்டும்.. தமிழகத்துக்கு அதுதான் நல்லது.. செய்வார்களா?
திருமாவளவனும், ராமதாசும் ஒன்றிணைய வேண்டும் என்பதே பிரதான விருப்பமாக உள்ளது.
சென்னை: முன்பொருமுறை அது நடந்தது. இணைந்து செயல்பட்டனர் இருவரும். ஒருவர் மீது ஒருவர் பாசம் பொழிந்தனர். தமிழ்க் குடிதாங்கி என்ற பட்டத்தை இவர் கொடுக்க, என் தம்பி என்று இவர் பாசமுடன் அழைக்க அருமையான காலம் அது. ஆனால் இன்று கொதி நிலையில் உள்ளனர் இருவரும்.. அவர்கள் டாக்டர் ராமதாஸ், தொல். திருமாவளவன்.
இவர்களைத் தவிர்த்து தமிழகத்தின் வரலாறை எழுதி விட முடியாது. இந்த இருவரும் இன்று எதிரும் புதிருமாக நிற்பதால் பல பாதகங்கள்.. இரு சாராருக்கும்.
திருமாவின் வரலாறும் சரி, ராமதாஸின் வளர்ச்சியும் சரி. சாதாரணமாக வந்ததல்ல. அவரவர் சார்ந்த சமூகத்தின் அடையாளமாக, அசைக்க முடியாத விருட்சமாக இருவரும் மாறி நிற்கின்றனர். தலித் சமுதாயத்தின் மாபெரும் தலைவராக மாறி நிற்கும் திருமாவளவன், வன்னிய சமுதாயத்தின் காவல் தெய்வமாக விளங்கி வரும் டாக்டர் ராமதாஸ்.. இந்த இருவருமே மிக மிக வித்தியாசமானவர்கள், ஆனால் தமிழ் சமுதாயத்திற்கு இவர்கள் இருவருமே மிக மிக முக்கியமானவர்கள்.
என்னாது.. செந்தில் பாலாஜி பொதுப்பணித்துறை அமைச்சரா.. அப்ப துரைமுருகன்.. பரபரக்கும் திமுக!
சாதிக் கட்சி
பாமகவை ஜாதிக் கட்சி என்று சாதாரணமாக முத்திரை குத்தி விட்டுப் போய் விடலாம். ஆனால் ராமதாஸ் ஜாதியை மட்டும் கையில் வைத்துக் கொண்டிருந்ததில்லை. தமிழுக்காக, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக உரத்துக் குரல் கொடுத்த வெகு சில தலைவர்களில் இவர் முதன்மையானவர். எனவே இவரை வெறும் ஜாதிக் கட்சித் தலைவராக பார்க்கலாமா என்றால் அது விவாதத்துக்குரியது.
வியாபித்து நிற்கிறார்
அதேபோலத்தான் திருமாவளவனும்! தலித் என்ற அடையாளம், தலித் தலைவர் என்ற முகவரி, தலித்துகளின் பிரதிநிதி என்ற பலம் என்று தலித் சமுதாயத்தோடு இவர் பின்னிப் பிணைந்திருந்தாலும், தமிழகம் பெற்ற மிகச் சிறந்த தமிழ்த் தலைவர்களில் இவரும் ஒருவர். தமிழ் நாட்டின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கத் தயங்காதவர். தமிழகம் முழுவதும் வேரூன்றி வியாபித்து நிற்கும் வெகு சில தலைவர்களில் இவரும் ஒருவர்.
பிரிந்தனர்
இப்படி தங்களுக்கென தனித் தளத்தில் இயங்கி வந்தாலும், தமிழ்நாடு, தமிழர் பிரச்சினை என்று வரும்போது ஜாதியைத் தூக்கிப் போட்டு விட்டு முதல் ஆளாக வந்து நிற்கும் இந்த இருவரும் ஆரம்பத்தில் இணைந்தே இருந்தனர். பாசம் காட்டி ஆரத் தழுவிக் கொண்டிருந்தவர்கள்தான். ஆனால் இவர்களின் ஜாதி இவர்களைப் பிரித்தது என்பதே உண்மை. இணைந்திருந்தால் அரசியல் செய்ய முடியாது, பிரிந்திருப்பதே சாலச் சிறந்தது என்று இருவரும் பிரிந்து போயினர்.
நிம்மதியில்லாத வாழ்க்கை
இதனால் யாருக்கு நஷ்டம் என்றால்.. இவர்கள் சார்ந்த இரு சமூகங்களுக்கும்தான். காலம் காலமாக நீடித்து வரும் பகை, மோதல் என்று எப்போதுமே ஒரு நிம்மதியில்லாத வாழ்க்கை. எத்தனை உயிர்ப்பலிகள், எத்தனை பொருளாதார சேதங்கள், எத்தனை வழக்குகள், எத்தனை கஷ்டங்கள்.. பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. ஆனால் இந்த இரு தலைவர்களும் இணைந்து செயல்பட்டால், இந்த இரு சமூகங்களும் இணைந்து செயல்பட்டால்.. எத்தனை எத்தனை பலன்கள் தெரியுமா.. இவர்களுக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாடுமே வளம் பெறும், அமைதி பெறும்.
இரு சமுதாய மக்கள்
வன்னியர் சமுதாயமும், தலித் சமூகமும் இணைந்தால் தமிழகத்தின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகைக்கு வரும். சமுதாய ஒற்றுமை, வளர்ச்சி, பிரச்சினைகளைத் தீர்ப்பது என்று பல கோணங்களில் யோசித்துப் பார்த்தால் இவர்கள் கை கோர்த்து செயல்படுவது உண்மையிலேயே மிகப் பெரிய நன்மையாகவே முடியும். இரு சமுதாயமும் இணைந்து செயல்பட, பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க ராமதாஸும், திருமாவளவனும் மீண்டும் கை கோர்க்க வேண்டும்.. மனதார இணைய வேண்டும். தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு இதை இவர்கள் செய்ய முன்வர வேண்டும்.
அதிமுக
இவர்கள் இருவருக்குமே வாக்கு வங்கி அதிகமாக உள்ளதால் அவர்களை இரு திராவிட கட்சிகளுமே வளைத்து போட்டு கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. ஒரு திராவிட கட்சி பாமகவை தன்னிடம் இழுத்து கொண்டால, அதற்கு எதிர்தரப்பில் விசிகவை நிறுத்துமாறு செய்யும் இன்னொரு திராவிட கட்சி. அதேசமயம் இவர்கள் இருவரையும் ஒன்றுசேர விடாமலும் கவனமாக பார்த்து கொள்வதுதான் அதன் நுணுக்க அரசியலும்கூட!
வேல்முருகன்
எந்த ஒரு கருத்தொற்றுமையும் இல்லாமலேயே திராவிட கட்சிகளுடன் பாமக இணைகிறது.. பாமகவுடன் பாஜக இணைகிறது.. என்றால், விசிக-பாமக ஏன் இணைய முடியாது? குறிப்பாக அவர்களை நம்பி இருக்கும் லட்சோப இளைஞர்களுக்காக இணைய வேண்டும் என்பதைதான் வேல்முருகன் மிக அழகாக சொல்லி இருந்தார். எதிர்கால இளைஞர்களை கருத்தில் கொண்டு பாமக, விசிகவும் உட்கார்ந்து பேசி பிரச்சனைகளை தீர்த்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது நாசூக்கான, பக்குவமான பேச்சு!
தம்பி திருமா
டாக்டர் ராமதாஸுக்கு தமிழ்க்குடிதாங்கி என்ற பட்டம் கொடுத்து அழகு பார்த்தவர் திருமாவளவன். அதேபோல என் தம்பி என்று திருமா மீது பாசம் காட்டியவர் டாக்டர் ராமதாஸ். அதேபோல 2008ம் ஆண்டுதேசிய அளவில் தலித் அமைப்புகள் ஒன்று கூடி டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு பாராட்டு விழா நடத்தின. அதில் முதன்மையாக கலந்து கொண்டவர் திருமாவளவன். இத்தனை மன நல்லிணக்கத்துடன் இருந்து வந்தவர்கள்தான் இவர்கள். தமிழகத்தின் அமைதி, வளர்ச்சிக்காக, சில பிணக்குகளை விட்டுக் கொடுத்து சமூகங்களுக்குள் அமைதியை ஏற்படுத்தி இருவரும் கை கோர்ப்பது என்பது பெரிய விஷயமே இல்லை.
முற்றுப்புள்ளி
ஜாதி ரீதியாக தமிழர்கள் பிரிந்து கிடக்கிறார்கள் என்ற அவலத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க இவர்கள் முதலில் கை கோர்த்து இணைப்புக்கு வழி காண வேண்டும். அதேபோல தமிழகம் முழுவதும் ஜாதி ரீதியாக பிரிந்து கிடக்கும் அனைவரும் இணைந்து செயல்படும்போது, தமிழ்நாட்டின் நலனே நமக்கு முக்கியம் என்ற கருத்தோடு மனமார கலந்து செயல்பட முன்வந்தால் ஜாதியாவது பிரச்சினையாவது கலவரமாவது.. தமிழகத்தின் பெரும் தலைவர்கள்.. இவர்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை.. இது மக்களின் ஆசையும் கூட.. செய்வார்களா.