என்ன நடக்குது இங்கே.. ஆளுநர் ஆட்சியா நடக்குது.. மக்கள் அரசுக்கு என்ன மரியாதை.. ராமதாஸ் கடும் ஆவேசம்!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 2 ட்வீட்களை பதிவிட்டுள்ளார்
சென்னை: "சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஆளுனரால் தடுக்க முடியும் என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு என்ன தான் மரியாதை? தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா?.... ஆளுனர் ஆட்சியா? என்ற வினாவுக்கு உடனடியாக விடை காணப்பட வேண்டும்!" என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காட்டமாக ட்வீட் பதிவிட்டுள்ளார்.
அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்காக பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளது..
தமிழக சட்டப்பேரவையில் செப்டம்பர் 15-ஆம் தேதியே சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதே நாளில் ஆளுனரின் ஒப்புதலுக்காக ஆளுனர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. ஆனால், இதுவரை ஆளுனர் இன்று வரை ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால், கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில், ஒரு சட்டத்திற்கு ஒப்புதலும் அளிக்காமல், திருப்பியும் அனுப்பாமல் வைத்திருக்கலாம் என்ற ஒற்றை அதிகாரத்தை வைத்துக் கொண்டு, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கக் கூடிய சட்டத்திற்கு ஆளுனர் முட்டுக்கட்டை போடுவது எந்த வகையிலும் நியாயமல்ல என்றும், கொரோனா ஊரடங்கு மட்டும் இல்லை என்றால், 7.5% இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்க தாமதிப்பதைக் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி ஆளுநர் மாளிகை முன் மாபெரும் போராட்டம் நடத்தியிருப்பேன்" என்றும் கூறியிருந்தார்.
அத்துடன், எந்தெந்த வகைகளில் எல்லாம் ஆளுநருக்கு அழுத்தம் தர முடியுமோ, அந்தந்த வகைகளில் எல்லாம் அழுத்தம் கொடுத்து 7.5% இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கையும் வைத்திருந்தார்.
இந்நிலையில், இன்று 2 ட்வீட்களை ராமதாஸ் பதிவிட்டுள்ளார்... அதில் நேரடியாகவே ஆளுநரை அட்டாக் செய்திருப்பதுபோல கருத்துக்களையும் கூறியுள்ளார்.. அந்த ட்வீட்டில், "மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி 32 நாட்களாகியும் இன்னும் தமிழக ஆளுனர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது தானாக ஏற்பட்ட தாமதம் அல்ல.... திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் தாமதம்!
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஆளுனரால் தடுக்க முடியும் என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு என்ன தான் மரியாதை? தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா?.... ஆளுனர் ஆட்சியா? என்ற வினாவுக்கு உடனடியாக விடை காணப்பட வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.
டாக்டரின் இந்த ட்வீட், வழக்கமான கண்டனம் போல் இல்லாமல் சற்று வீரியம் மிக்கதாகவே உள்ளது.. காரணம், ஆளுநர்கள் பொதுவாக மத்திய அரசின் கீழ்தான் செயல்பட்டு வருகிறார்கள்.. அந்த வகையில் கூட்டணியில் உள்ள பாஜக என்றும் பாராமல், நேரடியாகவே ஆளுநர ஆட்சியா? மக்களாட்சியா? என்று ராமதாஸ் கேள்வி எழுப்பி இருப்பது மாணவர்கள் மீதான அவரது அக்கறையையே வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.
எனினும் ட்விட்டர்வாசிகள் இந்த ட்வீட்களுக்கு கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.. "வெறும் டிவிட்டரில் எதிர்ப்பது மட்டும்தான் உங்கள் நிலைப்பாடு என்று மாறி போய் வருசங்கள் பல ஆச்சு என்றும், மத்திய அரசு சொல்வதை அப்படியே மாநில அரசு கேட்கின்றது அய்யா" என்றும் பதிலளித்து வருகிறார்கள்.