எம்.பி.சி. பிரிவில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கோரிக்கை ஏன்? டாக்டர் ராமதாஸ் விளக்கம்
சென்னை: மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு ஏன் என்பதற்கான விரிவான விளக்கத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்திருக்கிறார்.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளதாவது:
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து பெரும்பான்மையினருக்கு சரியான புரிதல் இல்லை. ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் எப்படி உள் ஒதுக்கீடு வழங்கமுடியும்? என்றெல்லாம் வினாக்கள் எழுப்பப்படுகின்றன. அவ்வாறு வினா எழுப்புபவர்களின் புரிதலுக்காகவும், உள் ஒதுக்கீடு குறித்த தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காகவும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை குறித்த சில விளக்கங்களை தெரிவிக்க விரும்புகிறேன்.
தொகுப்பாக இடஒதுக்கீடு
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எந்த ஒரு சாதிக்கும் இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு சட்டம் நிர்ணயித்துள்ள முதன்மைக் கூறு, அந்த சாதி சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கியிருக்கிறது என்பதை கணக்கிடக் கூடிய புள்ளிவிவரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்பது தான். ஒரு தொகுப்பாகத் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.... தனித்தனி சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என்று அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை. இந்த அடிப்படை உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
கேரளாவில் இடஒதுக்கீடு
கேரளத்தில் ஈழவர்களுக்கு 14%, இஸ்லாமியர்களுக்கு 12%, லத்தீன் கிறித்தவர்களுக்கு 4%, நாடார்களுக்கு 2%, கிறித்தவ மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு 1%, தீரவர்களுக்கு 1%, OBCக்கு 3%, விஸ்வகர்மாக்களுக்கு 3% என BC ஒதுக்கீடு சாதி அடிப்படையில் தான் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 40% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவர்களில் ஏதேனும் ஒரு சமுதாயம் 1% இட ஒதுக்கீடு பெற தகுதியுடையதாக இருந்தால், அந்த சாதிக்கு 1% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. உதாரணம் தீரவர்கள், கிறித்தவ மதத்திற்கு மாறிய தலித்துகள் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாக இட ஒதுக்கீடு பெறும் நிலையில் இருக்கும் சாதிகளை மட்டும் தான் தொகுப்பாக மாற்றி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
|
கேரளா பிற்படுத்தப்பட்டோர்
கேரளத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் மொத்தம் 77 சாதிகள் உள்ளன. அவர்களில் மேற்குறிப்பிடப்பட்ட சாதிகள் தவிர மற்ற சாதிகளின் மக்கள் தொகை ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாக இருப்பதால் தான் அவர்களுக்கு 3% கொண்ட தொகுப்பாக வழங்கப்படுகிறது. இல்லாவிட்டால் அந்த சாதிகளுக்கும் கூட குறைந்தபட்சம் ஒரு விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கும். கேரளத்தில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை அந்த அளவுக்கு தெளிவாக இருக்கிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். கேரளம் ஏன்.... தமிழகத்தில் கூட பட்டியலின மக்களில் அருந்ததியர் சமூகத்தின் சமூக, கல்வி நிலை மோசமாக இருப்பதால் அந்த சாதிக்கு 3% உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவ்வாறு உள் ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்திருக்கிறது.
உள்ஒதுக்கீடு தேவை
சமநிலையில் உள்ள சமூகங்களுக்கிடையே போட்டியை உருவாக்கி, அவர்களில் திறமையானவர்களை தேர்வு செய்வது தான் உண்மையான #சமூகநீதி. அதற்காக எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு உள் ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும்! இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.