"வேலுச்சாமி போன் பண்ணினார்.. நானும் என்னப்பான்னு கேட்டேன்".. நொந்து போய் ட்வீட் போட்ட ராமதாஸ்!
டாக்டர் ராமதாஸ் விரக்தியுடன் மற்றொரு ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: டாக்டர் ஐயாவுக்கு என்ன ஆச்சு என்றே தெரியவில்லை.. காலையில் இருந்து செம டென்ஷனில் இருக்கிறார்.. மனவேதனையில் இருக்கிறார்.. உச்சக்கட்ட விரக்திக்கே சென்றுவிட்டதாக தெரிகிறது.. ஒரே நாளில் 3 ட்வீட்களை பதிவிட்டுள்ளதை பார்த்தால், சொல்லமுடியாத அதிருப்தியுடன் இருப்பதாகவே புரிகிறது..!
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனையை கையில் எடுத்து உள்ளார் ராமதாஸ்.. இந்நேரம் கூட்டணி பேசி முடிவாகி, தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்றிருக்க வேண்டிய நிலையில், பாமக பிடிவாதத்துடன் இருக்கிறது.
வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி இதுவரை பாமக 6 கட்ட போராட்டங்களை நடத்தியிருக்கும் நிலையில், அதிமுக அமைச்சர்களுடன் பாமக நிர்வாகிகள் மூன்று கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தி இருக்கிறது. இதுவரை எந்த உடன்பாடும் எட்டவில்லை.
ராமதாஸ்
பேச்சுவார்த்தையில் கிட்டத்தட்ட சுமூகம் ஏற்பட்டு நேற்று ராமதாஸ் முதல்வரை சந்திக்கிறார் என்று தகவல் வந்தது... ஆனால் இந்த சந்திப்பு நிகழவில்லை... அதனால்தான் இன்றைக்கு காலையில், "விதியே விதியே என்செய நினைத்தாய் வன்னிய சாதியை எனக்குரை யாயோ?" என்று டாக்டர் ராமதாஸ் நொந்து போய் ஒரு ட்விட் போட்டிருந்தார்.
எம்எல்ஏ
அதற்குள் இப்போது இன்னொரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், "தருமபுரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலுச்சாமி சற்று முன் என்னிடம் பேச வேண்டும் என்று கூறினார்... நானும் என்னப்பா? என்று கேட்டேன். "அய்யா... நாங்களெல்லாம் இந்தியாவின் இரும்பு மனிதர் மருத்துவர் அய்யா வாழ்க என்று அப்போது முழக்கமிடுவோம். ஆனால், இப்போது உங்கள் டுவிட்டர் பதிவைப் பார்த்து அழுது கொண்டிருக்கிறோம்" என்றார் அவர்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆறுதல்
டாக்டர் ராமதாஸ் எப்போதுமே இவ்வளவு வேதனையை வெளிப்படுத்தியது இல்லை.. பாமக என்ற கட்சியை ஆரம்பித்ததே எதற்காக என்பது இந்த தமிழகத்துக்கே தெரிந்த நிலையில், வன்னியர் நலனில் ராமதாஸ் தொடர்ந்து மேற்கொண்டு வரும் அக்கறையும் உறுதிப்பிடிப்பும் மக்களை விக்கித்து போக வைத்து வருகிறது.. அதனால்தானோ என்னவோ, பாமகவினர் திரண்டு வந்து டாக்டர் ஐயாவுக்கு ட்விட்டரில் ஆறுதல் சொல்லி கொண்டிருக்கிறார்கள்.
ஜாதி வெறியன்
"அய்யா கடுமையான போராட்டத்தை அறிவியுங்கள் அய்யா... வென்றே ஆக வேண்டும் இட பங்கீட்டை.. நம்ம நல்லது செய்தாலும், ஜாதி வெறியன், கலவரக்காரர்கள் என்று தான் கூறுவார்கள்...நமது உரிமையை மீட்டெடுக்க கடுமையான போராட்டம் நடத்த வேண்டும், வெற்றி கிட்டும் வரை வட தமிழகம் ஊரடங்கில் இருக்க வேண்டும்" என்று சிலர் பதிவிட்டுள்ளனர்.
காத்திருக்கிறோம்
மேலும் பலரோ, "எங்களின் தைரியம் நீங்கள் இருந்தாலும் மூன்று நாட்களாக நடப்பதை பார்த்து உண்மையில் கண்கள் கலங்குது அய்யா.. என்னைபோல் எத்தனையோ தொண்டர்கள் உங்கள் முடிவை எதிர்பார்த்துள்ளோம் .. எந்த போராட்டமாக இருந்தாலும் சொல்லுங்கள் நாங்கள் பார்த்துகொள்கிறோம் நீங்கள் மனம் வருந்தாதீர்கள் ஐயா. எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறோம். இதுவரை நடந்த போராட்டமெல்லாம் ஆரம்பம் தான். இனி நடக்க இருக்கும் போராட்டம், 87களில் நடந்ததை விட, பன்மடங்கு வீரியத்துடன் இருக்கும் என்பதை உலகிற்கு உணர்த்துவோம்... பழைய ராமதாசு ஆளுங்கள இனிதான் பார்க்கப்போறாங்க.. உங்களின் ஒரு பதிவுக்காக காத்திருக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.