"8.. 6.. 5".. ஆஹா ஆரம்பிச்சுட்டாருய்யா.. "அய்யா".. ஆரம்பிச்சுட்டாருய்யா.. அல்லோகல்லப்படும் டிவிட்டர்
டாக்டர் ராமதாஸ் புதிர் போட்டு ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மறுபடியும் புதிர் போட ஆரம்பிச்சிட்டாரு.. வழக்கம்போல அவரது ட்விட்டருக்குள் நுழைபவர்கள் எல்லாரும் தலையை பிய்த்து கொண்டு, வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள்.
டாக்டர் ராமதாஸ் ட்வீட்கள் என்றாலே சற்று காரசார நெடியுடன் தூக்கலாக இருக்கும்.. இவரது ட்வீட்கள் பலவித தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை மறுப்பதற்கில்லை.. பல சமயங்களில் சீரியஸ் ட்வீட்களை பதிவிட்டாலும், சில சமயங்களில் மண்டை காய விட்டுவிடுகிறார் ராமதாஸ்.
இவர் மனசில் என்ன வைத்து கொண்டு பேசுகிறார் என்றே யாருக்கும் புரிவது இல்லை.. அதுபோன்ற புதிர் நிறைந்த ட்வீட்களை பதிவிட்டு விடுவார்.. இப்போதும் அப்படித்தான் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
இருந்தாலும் தேர்தல் நெருங்கும் சமயத்தில், கூட்டணி முடிவாகாத நிலையில், சீட் எவ்வளவு என்று தெரியாத நிலையில், முதல்வர் ஒரு பக்கம் பிரச்சாரத்தில் இறங்கி வரும் நிலையில், ராமதாஸ் இப்படி புதிர் போட்டு கொண்டிருப்பது சரியா? என்று தெரியவில்லை. அந்த ட்வீட்டில், "8...6...5. இங்கு மட்டும் ஒன்றே ஒன்று? இந்த புதிருக்கு விடை சொல்லுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
வழக்கம்போல இதுவும் புரியவில்லை.. ஒரே ஒரு வித்தியாசம், முன்பெல்லாம் ட்வீட் மட்டும் போட்டு விட்டுவிடுவார்.. இப்போதுதான் முதல்முறையாக புதிருக்கு விடை சொல்லுங்கள் என்று நேரடியாகவே கேட்டுள்ளார்.. அப்போதும் இந்த ட்வீட் புரியவில்லை என்பதுதான் ஹைலைட்டே!
ட்விட்டர்வாசிகளும் தங்கள் வசதிக்கேற்றபடி யூகித்து கொண்டு, ஒவ்வொரு கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.. "15% குறைவாக கொடுத்தால் ஏற்க வேண்டாம் அய்யா... திராவிட கட்சிகள் அவ்வளவு ஒற்றுமையாக இருப்பதால்... இனி அவர்களுக்குள்ளே கூட்டணி வைத்து ஆட்சி பிடிக்கட்டும். 80 தொகுதி மட்டும் வேலை செய்வோம்.. 60 ஐ உறுதி படுத்துவோம்.. போராடி பெறுவதை விட அதிகாரத்தில் அமர்ந்து உரிமையை நிலை நாட்டுவோம்' என்று சிலர் இந்த புதிருக்கு விளக்கம் சொல்கிறார்கள்.
மேலும் சிலரோ, "கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் பிற்பட்டோர் இட ஒதுக்கீடு 8 ,6 ,5 பிரிவுகளாக உள்ளது ,ஆனால் தமிழகத்தில் அது ஒரே பிரிவாக உள்ளது, சரியா ஐயா?" என்று ராமதாஸிடமே சந்தேகத்தை கேட்டுள்ளனர். மேலும் சிலர் சந்தேகமே இல்லாமல், "பெட்டிதான ஐயா" என்று நறுக்கென சொல்லிவிட்டனர்.. இன்னும் சிலரோ, ராமதாஸ் ட்விட்டருக்குள் நுழைந்ததுமே, இந்த ட்வீட்டை பார்த்ததும், உள்ளே போன வேகத்திலயே வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள்... ஆக, வழக்கம் போல, டாக்டர் ஐயாவே இதற்கு விடை சொன்னால்தான் உண்டு.