"அதையெல்லாம் விடுங்க.. ஜான் பாண்டியன் கல்யாணத்தை நடத்தி வச்சதே நான்தானே".. எமோஷனல் ஆன ராமதாஸ்..!
டாக்டர் ராமதாஸ் ஜான் பாண்டியன் குறித்து உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்
சென்னை: "ஜான்பாண்டியன் கல்யாணத்தை நடத்தி வைத்ததே நான் தான்" என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று பிரதமர் சென்னை வந்திருந்தார்.. அப்போது, 'தேவேந்திர குல வேளாளர்' என்று அழைப்பதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்தது குறித்து அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். இதற்கு டாக்டர் ராமதாஸ் உட்பட பல தலைவர்கள் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
"பள்ளர், குடும்பன், காலாடி உள்ளிட்ட 7 சமுதாயங்களை தேவேந்திர குல வேளாளர் என்று அழைப்பதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்திருப்பது குறித்தும், தேவேந்திர குல வேளாளர் சமுதாய பண்பாடு குறித்தும் சென்னை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி 10 நிமிடங்கள் பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்று நேற்று ஒரு ட்வீட் போட்டிருந்தார்..
தேவேந்திர குல வேளாளர்
இந்நிலையில், ராமதாஸ் இன்று மீண்டும் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டுள்ளார். தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஜான்பாண்டியன்.. அவரது பயணம் பாமகவில்தான் ஆரம்பித்தது என்பது முதல் அவருக்கு கல்யாணம் செய்துவைத்து வாழ்த்தியது தான் தான் என்று டாக்டர் ராமதாஸ் அந்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். இதுதான் அந்த பதிவு:
ஜான் பாண்டியன்
"தேவேந்திரர் குல வேளாளர் சமுதாயத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜான்பாண்டியனின் அரசியல் பயணம் பாட்டாளி மக்கள் கட்சியில் தான் தொடங்கியது. 1989-ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய போது, அவர் அக்கட்சியின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை சிறப்புகள் குறித்து மக்களிடம் முழங்கினார்.
தேர்தல்
பாட்டாளி மக்கள் கட்சி 1989-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், அந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே, அதாவது கட்சி தொடங்கிய ஐந்தாவது மாதத்தில், நடைபெற்ற மக்களவைத் தேர்தல் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் தேர்தல் ஆகும். அந்த தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக ஜான்பாண்டியன் நிறுத்தப்பட்டார். அந்தத் தேர்தலில் அவர் 83,933 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
கல்யாணம்
1991-ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்த அதன் முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜான் பாண்டியன் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்தத் தேர்தலில் அவர் 29,021 (30.24%) வாக்குகள் பெற்று 2வது இடத்தைப் பிடித்தார். திமுக கூட்டணி வேட்பாளர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதற்கெல்லாம் மேலாக ஜான்பாண்டியன் - பிரிசில்லா பாண்டியன் இணையர் திருமணத்தை நடத்தி வைத்தி வாழ்த்தியதும் நான் தான்' என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.