இடஒதுக்கீடு, கூட்டணி... முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனான டாக்டர் ராமதாஸ் சந்திப்பு திடீர் ரத்து!
சென்னை: சட்டசபை தேர்தல் கூட்டணி, வன்னியர் உள்ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனான பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறுவது உறுதியாகி உள்ளது. அதிமுக அணியில் பாமகவும் இடம்பெறுகிறது. இருப்பினும் பாமக முன்வைத்த வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம்தான் கூட்டணியில் சேருவதற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.
வன்னியர் இடஒதுக்கீடு
வன்னியருக்கு 20% தனி இடஒதுக்கீடு கோரியது பாமக. இதற்கான போராட்டங்களையும் பாமக நடத்தியது. இதனையடுத்து அதிமுக அமைச்சர்கள், பாமக தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பாமக- அதிமுக பேச்சுவார்த்தை
இப்பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து எம்பிசி கோட்டாவில் வன்னியருக்கு உள்ஒதுக்கீடு என இறங்கி வந்தது பாமக. இதையாவது அரசு செய்ய வேண்டும் என்பது பாமகவின் நிலை. ஆனால் இதனை உடனடியாக செய்ய முடியாது. தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்கிறோம். அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் போது இதனை நிறைவேற்றுகிறோம் என்பது அமைச்சர்கள் குழுவின் நிலைப்பாடு.
அதிருப்தியில் பாமக?
இது தொடர்பாக 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக தரப்பு, பாமகவினருக்கு விளக்கம் அளித்திருந்தது. இருப்பினும் இதில் அதிருப்தி அடைந்து இருப்பதாகவே தெரிகிறது. இதனை தொடர்ந்து இன்று 4-ம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
ஈபிஎஸ்-ராமதாஸ் சந்திப்பு ரத்து
மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு திடீர் என ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இடஒதுக்கீடு, கூட்டணி தொடர்பாக பாமக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.