Delhi சுவரா.. மசூதியெல்லாம் இடிச்சுதானே செங்கல் வரனும்.. ராமதாஸ் டுவீட்டுக்கு..நெட்டிசன்கள் பதிலடி!
எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து டாக்டர் ராமதாஸ் ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: டாக்டர் ராமதாஸ் ட்வீட் போடவில்லை என்றாலும் பரவாயில்லை.. அங்கே டெல்லி பற்றி எரியும் நேரத்தில் சம்பந்தமே இல்லாமல் மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி குறித்து ஒரு கேள்வியை கேட்கவும், மொத்த ட்விட்டர்வாசிகளும் கொந்தளித்து போய் உள்ளனர். அது சம்பந்தமான தங்கள் கண்டனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
வண்ணாரப்பேட்டை கலவரம் நடக்கும்போதே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசிடம் இருந்து அதிரடியான கருத்துக்கள் எதிர்பார்க்கப்பட்டன.
இதற்கு காரணம் தன் வீட்டுக்கு வந்து ஆதரவு கேட்ட தமிழக முஸ்லிம் இயக்கத்தினரிடம் டாக்டர் சொன்ன நம்பிக்கை வார்த்தைகள்தான்.
ஆதரவு
"உங்களில் ஒருவன்... உங்களை சிறுபான்மை என்று சொல்லிக்கொள்ளாதீர்கள். சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பாகுபாடு எல்லாம் இங்கு கிடையாது.. தமிழகத்தில் எல்லா உரிமைகளோடு நாம் வாழ்வோம்... அதற்கு எல்லா விதமான பாதுகாப்புகளையும் பாமக நிச்சயம் அளிக்கும். குடியுரிமை சட்டம் குறித்து நானும் கவனித்து வருகிறேன்" என்றார். அதனால்தான் ராமதாசின் ட்விட்டர் பக்கத்தை வண்ணாரப்பேட்டை கலவர நிகழ்வின்போதே பொதுமக்கள் ஆர்வமுடன் சென்று கவனித்தனர்.
பதிவுகள்
ஆனால் அதில் கலவரம் குறித்து எந்தவித பதிவுகளையும் காணோம்.. சம்பந்தமே இல்லாமல் 2 பூக்களின் படத்தினை போட்டு வைத்திருந்தார்.. இதை பார்த்ததுமே "குல்லா அணியாத முஸ்லீமுன்னு சொன்னீங்களே ஐயா, அறிக்கைகூட காணோமே" என்று ட்விட்டர்வாசிகளே கேள்வி எழுப்பி இருந்தனர்.. இதே கேள்வியை இப்போது டெல்லி வன்முறை நிகழ்வின்போதும் டாக்டர் செந்தில்குமார் நேற்றைய தினம் ராமதாஸை பார்த்து கேட்டிருந்தார்.
|
ட்வீட்டர் பதிவு
இந்நிலையில், பல உயிரை காவு வாங்கி வரும் டெல்லி வன்முறை குறித்து இன்று ஏதேனும் டாக்டர் கருத்து ட்வீட் பதிவிட்டிருப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.. எதிர்பார்த்தபடியே ட்வீட் இருந்தது.. ஆனால் அது ஏமாற்றத்தையே தந்துள்ளது... "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டு ஐந்தரை ஆண்டுகள் ஆகி விட்டன. அடிக்கல் நாட்டப்பட்டு ஓராண்டு நிறைவடைந்து விட்டது. ஆனால், சுற்றுச்சுவர் அமைப்பதைத் தவிர வேறு எந்த பணியும் நடைபெறவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வருவது எந்த நாளோ?"என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
கண்டனங்கள்
டெல்லி பற்றி எரிகிறபோது, மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான தேவை என்ன? அதற்கான உடனடி அவசியம் என்ன என்று தெரியவில்லை.. இதற்குதான் கமெண்ட்கள் ஏராளமான குவிந்து வருகின்றன... "டெல்லியிலிருந்து மசூதியெல்லாம் இடுச்சு தானே செங்கல் எல்லாம் கொண்டுவரனும்... கொஞ்சம் டைம் ஆகும் அய்யா....." என்று ஒருவர் பதில் அளித்துள்ளார். "அய்யா இன்று வண்ண வண்ண மலர்கள் பற்றி போட்டோ ஷூட் போடுவார். பார்த்து ரசிக்கவும்" என்றும் "Delhi சுவரை சொல்றீங்களா சார்?"என்றும் காட்டமான கேள்வி எழுப்பி உள்ளனர்.
வேதனை
பொதுவாக, தமிழகத்துக்கு ஒன்று என்றால், தமிழக மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், ஓடோடி வருபவர் டாக்டர் ராமதாஸ்.. மத்திய அரசின் எத்தனையோ வெறுப்புவாத அரசியலை பகிரங்கமாக கேள்வி எழுப்பி சாடியவரும்கூட.. இப்போது ஐயாவின் மவுனம் பெருத்த வேதனையாக உள்ளது.. குடியுரிமை திருத்தசட்டத்தை முழு மனதோடு ஏற்றுக்கொள்கிறாரா? வரவேற்கிறாரா? எதுவுமே விளங்கவில்லை.
கவலை
வண்ணாரப்பேட்டை விவகாரத்துக்கே வந்திருக்க வேண்டியவர், இன்று டெல்லி விவகாரத்துக்கும் குரல் தராமலும் கருத்து சொல்லாமலும் உள்ளது கவலையாக உள்ளது.. நிச்சயம் டாக்டர் ஐயா இது சம்பந்தமான தனது கருத்தை பதிவிடுவார் என்றே நாம் நம்புவோம்!