எப்போது உங்களால் பரவச நிலையை உணர முடியும்.. டாக்டர் ராமதாஸ் சொல்வதைக் கேளுங்க
சென்னை: இன்னும் தேர்தல் ஆரம்பிக்கவே இல்லை.. ஆனால் அதற்குள் பரவச நிலைக்கே போய்விட்டார் டாக்டர் ராமதாஸ்!
வேறு யாரையும் விமர்சிப்பது, பதில் சொல்வது என்று நேரத்தை இப்போதெல்லாம் செலவிடுவதில்லை டாக்டர் ராமதாஸ்.
7+1 கிடைத்ததில் இருந்தே ராமதாஸ் உற்சாகமாக இருக்கிறார். அவரது ஒவ்வொரு ட்வீட்டும் அடுத்த அடியை எடுத்து வைத்து பயணிப்பது போலவே இருக்கிறது.
பொன்மொழிகள்
அந்த உற்சாகத்தை தினந்தோறும் தன்னுடைய தொண்டர்களுக்கும் தந்து வருகிறார். கடின உழைப்பு, முயற்சி என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்தையும் பொன்மொழிகள் மூலம் அதுவும் இரண்டே வரிகளில் புகுத்தி வருகிறார்.
|
பரவசம்
இந்த வகையில் இன்றைக்கு தந்திருக்கும் அட்வைஸ், "சவால்களை ஏற்றுக் கொள். அப்போது தான் உனது வாழ்வில் வெற்றியால் கிடைக்கும் பரவசத்தை உணர முடியும்.- ஜார்ஜ் பேட்டன்" என்று பதிவிட்டுள்ளார். சவால்கள் சரி.. ஆனால் யாருக்கு இந்த சவால்கள் என்று தெரியவில்லை.
விமர்சனங்கள்
ஏற்கனவே கடந்த 5 வருடங்களாக தமிழக வளங்கள் உள்ளிட்டவை பாஜக அரசால் சூறையாடப்பட்டு வருகிறது. நாளையும் இதே நிலை நீடித்தால், கூட்டணிக்குள்ளேயே இருக்கும் பாஜகவை பாமக எப்படி எதிர்கொள்ள போகிறது என்பது சவாலாக இருக்கும் என்று டாக்டர் சொல்கிறாரா அல்லது அதிமுக-பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிருப்திகளும், விமர்சனங்களும் தொடர்ந்து பல தரப்பிலிருந்து எழுந்து வருவதால் அதனை சவாலாக எடுத்து தொண்டர்களை சமாளிக்க சொல்கிறாரா என தெரியவில்லை.
பரவச நிலை
ஆனால் நேற்று நடந்த பிரஸ்மீட்டையே அன்புமணியால் சவாலாக எடுத்து கொண்டு சமாளிக்க முடியவில்லையே என்று கமெண்ட்கள் ஒரு பக்கம் பதிவாகி வருகின்றன. எப்படி பார்த்தாலும் டாக்டர் இப்போதைக்கு பரவச நிலையை உணர்ந்தே விட்டார் போலும்!