ஆஹா.. மறுபடியும் ராமதாஸ் டிவீட்.. இந்த முறை.. ஒரே எதிரியுடன் மீண்டும் மீண்டும் மோதாதே!
டாக்டர் ராமதாஸ் நெப்போலியன் பொன்மொழியுடன் ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
சென்னை: கூட்டணி சமாச்சாரம், ஸ்டெர்லைட் வழக்கு, திமுக-மநீம காரசார விமர்சனங்களிடையே புத்தம் புதிய பொலிவுடன் இன்று மீண்டும் பொன்மொழியை பதிவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்!
கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் இறுதி கட்டத்தை தொட்டுவிட்டன. இன்னும் ஓரிரு நாளில் பாஜக கூட்டணியை அறிவிக்கும் என தெரிகிறது. அதேபோல அதிமுகவும் ஒரு வாரத்திற்குள் தன் இறுதி முடிவை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதுவரை பாமக யாருடன் கூட்டணி என்பது பூடகமாகவே இருக்கிறது. ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோது பகிரங்கமாக நடத்தப்பட்ட பாமகவின் கூட்டணி மற்றும் பேச்சுவார்த்தை இந்த முறை சைலன்ட்டாகி உள்ளது.
மக்கள் குழப்பம்
பாமக யாருடன் கூட்டணி வைக்கும்? எந்த தொகுதிகளில் போட்டியிட போகிறது என்பதை அக்கட்சி நிறுவனர் எப்போது அறிவிப்பார் என்ற ஆவல் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் இதைபற்றி எதையாவது சூசகமாக தெரிவிப்பார் என்று அவரது ட்விட்டரில் உள்ள பதிவுகளை ஆர்வமாக படிக்க வருகின்றனர். ஆனால் வழக்கம்போல் பொன்மொழிகள் பதிவிட்டுள்ளதை பார்த்ததும், குழம்பி வந்த வேகத்திலேயே போய்விடுகின்றனர்.
|
நெப்போலியன்
இன்றைய பதிவில், "ஒரே எதிரியுடன் நீங்கள் அடிக்கடி சண்டையிடக்கூடாது. அவ்வாறு சண்டையிட்டால் உங்களின் போர் தந்திரங்கள் அனைத்தையும் நீங்கள் உங்கள் எதிரிக்கு கற்றுக் கொடுத்து விடுவீர்கள்!- மாவீரன் நெப்போலியன்" என்று பதிவிட்டுள்ளார்.
மாறி மாறி கூட்டணி
இப்போது இருக்கும் கூட்டணியிலேயே தொடர வேண்டும் என்று ராமதாசை யாராவது நிர்ப்பந்திக்கிறார்களா? அல்லது ஒரே கூட்டணியுடன் சேரக்கூடாது, மாறி மாறி கூட்டணி வைக்க ராமதாசே விரும்புகிறாரா என்று தெரியவில்லை.
ஒரே எதிரி யார்?
அப்படிப் பார்த்தாலும் இரு தரப்பிலும் இதுவரை மாறி மாறி கூட்டணி வைத்தாயிற்று, 3-வது அணியாகவும் உருமாறி தேர்தலையும் சந்தித்தாயிற்று. அப்படி இருக்கும்போது "ஒரே எதிரியுடன் அடிக்கடி சண்டை போடக்கூடாது" என்கிறாரே.. டாக்டர் சொல்றது இந்த முறையும் புரியலையே!.. இருக்கட்டும் இருக்கட்டும்.. அடுத்த டிவீட்டுக்கு காத்திருப்போம்.. சப்பாணிக்காக காத்திருந்த மயிலு போல!