"இப்போதாவது திமுகவுக்கு அக்கறை வந்ததே".. ட்வீட்களை போட்டு.. அதிமுகவுக்கு முட்டு கொடுக்கும் ராமதாஸ்!
திமுகவை விமர்சித்து டாக்டர் ராமதாஸ் 2 ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: "அன்று வேடிக்கை பார்த்த திமுக, அண்ணா பல்கலைக்கழக சீரழிவுகள் தொடங்கி விட்ட நிலையில் இப்போது தான் போராட்டம் நடத்துகிறது... இப்போதாவது திமுகவுக்கு அக்கறை வந்ததே... அது வரை சரி தான்!" என்று டாக்டர் ராமதாஸ் திமுகவை இடித்துரைத்து 2 ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சூரப்பா துணைவேந்தராக நியமிக்கப்பட்டது முதல், மாநில அரசுக்கும், அண்ணா பல்கலைக்கழகம் இடையே உரசல் நீடித்து வருகிறது.
தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன... இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தை 2ஆக பிரிக்க தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.
பாமக
கடந்த 3 நாட்களுக்கு முன்பே இந்த விஷயத்தை திமுகவும், பாமகவும் கடுமையாக எதிர்த்தன.. "அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மாநில அரசு நிதி தேவையில்லை என கடிதம் எழுத துணைவேந்தர் சூரப்பா என்ன மாநில முதல்வரா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.. அதுபோல, "அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்புகழ் தகுதி பெறும் விஷயத்தில் மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக துணைவேந்தர் சூரப்பா செயல்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது" என்று பாமக தலைவர் ராமதாசும் கண்டனம் தெரிவித்தார்.
நடவடிக்கை
வழக்கமாக, அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக ஏதேனும் பாதிப்பு தரக்கூடிய அறிவிப்புகள், நடவடிக்கைகள் எழுந்தால், அதற்கு கண்டனம் தெரவிப்பது பாமகவும், திமுகவும்தான்.. இந்த முறையும் அப்படியே நடந்துள்ளது.. இதில் திமுக ஒருபடி மேலே போய், துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இளைஞரணி, மாணவரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
துணைவேந்தர் சூரப்பா
இந்த சமயத்தில்தான் டாக்டர் ராமதாஸ் அடுத்தடுத்து 2 ட்வீட்களை போட்டுள்ளார்.. அதில், "அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்யக் கோரி இன்று திமுக போராட்டம் நடத்துகிறது. சூரப்பா நியமிக்கப்பட்டால் அண்ணா பல்கலைக்கழகம் சீரழியும் என்பதை உணர்ந்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2018-லேயே போராட்டம் நடத்திய கட்சி பா.ம.க".
2 ட்வீட்கள்
"அப்போது அதை வேடிக்கை பார்த்த திமுக, அண்ணா பல்கலைக்கழக சீரழிவுகள் தொடங்கி விட்ட நிலையில் இப்போது தான் போராட்டம் நடத்துகிறது. அண்ணா பல்கலைக்கழக நலனில் இப்போதாவது திமுகவுக்கு அக்கறை வந்ததே... அது வரை சரி தான்!" என்று 2 ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.
கண்டன அறிக்கை
எதற்காக டாக்டர் இப்படி ஒருட்வீட் போட்டார் என்று தெரியவில்லை.. உண்மையிலேயே, 2018-ல் பாமகவை போலவே திமுகவும் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தது.. அதனால்தான் ட்விட்டர்வாசிகளும், திரண்டு வந்து 2018-ல் திமுக விடுத்த அறிக்கையை ஸ்கிரீன் ஷாட் எடுத்து டாக்டர் ராமதாசுக்கு பதிவிட்டு வருகின்றனர்..
அதிமுக கூட்டணி
மேலும், "ஐயா.. அப்போ அப்போ இங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு வந்து பேசுங்க.. உங்களுக்குதான் விசயம் தெரில. அவர் அப்பவும் எதிர்ப்பு தெரிவிச்சார்" என்றும், "போராட்டம் நடத்தினதெல்லாம் சரி தான்... 2 வருசமா அதே அதிமுக கூட்டணில தானே இருக்கிறீங்க. எடப்பாடி கிட்டே சொல்லி சூரப்பாவை மாற்றச் சொல்லியிருக்கலாம்ல்ல? ஏன் சொல்லல...? நீங்க சொல்லலயா? இல்ல நீங்க சொன்னதை அவங்க கேட்கலயா...?" என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடவடிக்கை
மேலும் பலர் "2018-ல் சூரப்பாவை எதிர்த்த போது தமிழக அரசு தங்களுக்கு என்ன (விளக்கம்) கொடுத்து போராட்டத்தை கைவிட செய்தது? தற்போது அண்ணா பல்கலைகழகத்தை காப்பாற்ற தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று கூட்டணிகளிடம் கேட்டு சொல்லுங்கள்... நடவடிக்கை எடுத்தால் பாமகவின் வெற்றி அல்லவா?" என்றும் ட்விட்டரில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
எல்லாம் சரி.. இந்த விஷயத்தில் அதிமுகவிடம் கோரிக்கை வைப்பதைவிட்டுவிட்டு, திமுகவை ஏன் பாமக சீண்டுகிறது என்றுதான் தெரியவில்லை!