அய்யா கிளம்பிட்டாருய்யா.. ஜெகனுக்கு ஷொட்டு.. அதிமுக அரசுக்கு திடீர் கொட்டு.. "அதற்கு" போடும் துண்டா!
டாக்டர் ராமதாஸ் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: "ஆந்திரத்தில் ஜெகன்ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை. செய்யவும் மறுக்கிறார்கள்!" என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.
அதிமுக - பாமகவுக்கும் எத்தகைய இணக்கமான போக்கு ஏற்பட்டு வருகிறது என்று தெரியவில்லை.. சில தினங்களாகவே அதிமுக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை அது மேற்கொண்டு வருகிறது.
இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூக மக்கள் எவ்வளவு பயனடைந்துள்ளனர் என்று மாநில அரசிடம் கேட்டு வருகிறது.. ஒருவேளை அது குறைவாக இருந்தால், போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் சில தினங்களுக்கு முன்பு சொல்லியது.
கூட்டணி
அதேசமயம், திமுகவுடன் கூட்டணிக்காக பேசி வருவதாகவும் ஒரு தகவல் கசிந்தது... இதனை திமுக - பாமக இரு கட்சிகளுமே பகிரங்கமாக எதையும் சொல்லவில்லை என்றாலும், இப்படி ஒரு தகவலை அக்கட்சிகள் மறுத்து பேசவில்லை.
பாமக
அதிக சீட் தருபவர்களுடன் கூட்டணி வைப்பது டாக்டர் ராமதாசின் வழக்கம் என்றாலும், இந்த முறையும் அதே அணுகுமுறைதான் கையில் எடுக்கப்படும் என தெரிகிறது.. அந்த வகையில், அன்புமணிக்கு துணை முதல்வர் சீட் யார் தருகிறார்களோ, அவர்களுடன்தான் பாமக கூட்டணி வைக்கும் என்ற ஒரு பேச்சும் கசிந்து வருகிறது. அதற்கேற்றார்போல், இந்த முறையும் வடமாவட்டங்களில் தன்னுடைய செல்வாக்கை பலமாக விரித்து வைத்துள்ளது பாமக!
ராமதாஸ்
இந்த மாதிரியான ஒரு சூழலில்தான் டாக்டர் ராமதாஸ் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில், "ஆந்திரத்தில் ஜெகன் ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை. செய்யவும் மறுக்கிறார்கள்!" என்று ட்வீட் பதிவிட்டுள்ளார்.
ஜெகன்மோகன்
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை, தமிழக ஆட்சியாளர்களுடன் ஒப்பிட்டு பேசியிருக்கும் சூழலில் பாமக அதிமுக கூட்டணியில் விரிசலா என்ற பரபரப்பு எழுந்து வருகிறது.. அதேசமயம், திமுகவுடன்தான் இந்த முறை கூட்டணியா என்ற எதிர்பார்ப்பும் எழுந்து வருகிறது. எதற்காக இந்த ட்வீட் என்ற குழப்பத்துடன் பலரும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதிமுக, திமுக
"உண்மைதான் அய்யா, அன்புமணி ராமதாஸ் முதல்வராக வேண்டும், ஜெகன்மோகன் ரெட்டியை விட 100 மடங்கு அறிவும் ஆற்றலும் மிக்க நலத்திட்டங்களை நிறைவேற்றுவார் என்று மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும், "அய்யா கிளம்பிட்டாருய்யா கிளம்பிட்டாருய்யா" என்றும், "அறிவாலயத்தில் துண்டு போடவா? அல்லது அதிமுகவின் சீட் பேரத்துக்கா என்றும் சந்தேகங்களையும், கருத்துக்களையும் ட்விட்டர்வாசிகள் பதிவிட்டு வருகிறார்கள்.