கோடை வெயில் நெருங்குகிறது... தேர்தலை விரைவில் நடத்துங்க... ராமதாஸ் டிவீட்
சென்னை: கோடை வெயிலைத் தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் தேர்தல்களை பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடத்த வேண்டும் என்று பட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தேர்வுகள் பாதிக்கப்படுவதை தடுக்க கல்வியாண்டு, நிதியாண்டு அனைத்தையும் காலண்டர் ஆண்டுக்கு மாற்ற வேண்டும் என்றும் இதை ஓர் யோசனையாக அரசும், தேர்தல் ஆணையமும் பரிசீலிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, கடந்த 6-ம் தேதி அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் மே மாதம் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்பதால் தேர்தலை தமிழகத்தில் முதற்கட்டமாகவே நடத்தி முடித்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், அதிமுக மக்களவை தலைவர் வேணுகோபாலும் இந்த மனுவை தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ளனர்.
குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களிலும் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் இதர பகுதிகளிலும் கடும் குடிநீர்ப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. மதுரையில் இப்போதே குடிநீர்ப் பிரச்சினை தலை தூக்க ஆரம்பித்து விட்டது. இதனால் அரசின் மீது மக்களின் கோபம் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கோபம் அதிமுக மீதான அதிருப்தியாக மாறி வாக்குகளை பாதிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.
மேலும், தேர்தல் பிரச்சாரத்தை பகல் நேரங்களில் நடத்த முடியாது என்றும், வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு மாலை நேரங்களில் மட்டுமே தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அதே நேரம், தேர்தல் விதிமுறைகளால் குறைந்த நேரம் மட்டுமே பிரச்சாரங்களில் ஈடுபடக்கூடிய நிலை ஏற்படும்.
கோடை வெயிலைத் தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் தேர்தல்களை பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடத்த வேண்டும். தேர்வுகள் பாதிக்கப்படுவதை தடுக்க கல்வியாண்டு, நிதியாண்டு அனைத்தையும் காலண்டர் ஆண்டுக்கு மாற்ற வேண்டும். இதை ஓர் யோசனையாக அரசும், தேர்தல் ஆணையமும் பரிசீலிக்க வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) February 9, 2019
தேர்தல் கோடைக்காலத்தில் நடத்தப்பட்டால், வாக்காளர்கள் வந்து வாக்களிக்கும் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விடும் என்றும் சொல்லப்படுகிறது. இதே காரணங்களுக்காக பல மாநிலங்களில் வாக்களிக்க நேரத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.