கொரோனா பாதிப்பு- தேவைப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் வீடு, வீடாக ஆய்வு நடத்தலாம்- ராமதாஸ்
சென்னை: கொரோனா பாதிப்பு தொடர்பாக தேவைப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக ஆய்வு நடத்தலாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு அடுத்த கட்ட நட வடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது 10 மாவட்டங்களில் படுதீவிரமான நடவடிக்கையை தமிழக அரசு முடுக்கிவிட்டிருக்கிறது.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
அமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் செலுத்த 3 மாத அவகாசம் வழங்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வந்த நிலையில், தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வியமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தியுள்ளார்.
கல்வி கட்டணம்
இது வரவேற்கத்தக்கது. ஆனால், கல்வியமைச்சரின் அறிவுரையை எத்தனை பள்ளிகள் பின்பற்றும் என்பது தெரியவில்லை. ஆகவே, தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணங்களை அடுத்த 3 மாதங்களுக்கு வசூலிக்கக் கூடாது என்று அரசாணை பிறப்பிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்!
|
வீடு வீடாக ஆய்வு
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள இடத்திலிருந்து 7கி.மீ சுற்றளவில் வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது. தேவைப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் வீடு, வீடாக இத்தகைய ஆய்வை நடத்த அரசு தயாராக வேண்டும்!
|
சென்னையில் ஊரடங்கு மீறல்
சென்னையில் ஊரடங்கையும் மீறி இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கட்டுப்பாடற்ற முறையில் மக்கள் கூட்டம் குவிந்தது கவலையளிக்கிறது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மீன் வணிகம் செய்த சென்னையை சேர்ந்த மீன்வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டது சரியான நடவடிக்கை ஆகும்!
இவ்வாறு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.