தீரனுக்காக உருக்கம்...வேல்முருகனுக்காக ஏக்கம்... பாமகவினரை நெகிழ வைக்கும் டாக்டர் ராமதாஸ்
Recommended Video
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது முத்துவிழாவுக்கான ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சியில் பேசிய பேச்சுகள் அக்கட்சி தொண்டர்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக தொடங்கப்பட்டதில் இருந்து வன்னியர் அல்லாத பல சமூகத்தினருக்கு கட்சிப் பதவிகள், மத்திய அமைச்சர்கள் பதவிகளை வழங்கியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். ஆனாலும் அவர்கள் ராமதாஸுடன் முரண்பட்டு தனிக் கட்சி தொடங்கி இருக்கின்றனர்.
வேறு கட்சிகளுக்கு தாவியும் இருக்கின்றனர். பலரும் அரசியலைவிட்டே ஒதுங்கியும் இருக்கின்றனர். ஜாதி, மதங்களைப் பார்க்காமல் பாமகவை அனைவருக்குமான ஒரு பொதுவான கட்சியாகத்தான் பல ஆண்டுகாலம் கட்டிக்காத்து வந்தார் ராமதாஸ்.
பாமக மீது விமர்சனம்
அதனை மேடைகளில் பேசுவதுடன் மட்டும் நிற்காமல் கட்சி கட்டமைப்பு, அரசியல் அதிகாரம் தருவதிலும் செயல்படுத்திக் காட்டினார். ஒருகட்டத்தில் பாமகவின் திசைவழிப் பயணம் வேறாக கடுமையாக விமர்சனங்களுக்குள்ளானது.
முத்து விழா வாழ்த்துகள்
அதனாலும் பாமக பிளவுகளை எதிர்கொண்டது. இந்த நிலையில் டாக்டர் ராமதாஸின் 80-வது முத்துவிழா சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அனைத்து கட்சித் தலைவர்களும் டாக்டர் ராமதாஸுக்கு வாழ்த்து தெரிவித்தது அரசியல் பண்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது.
கண்கலங்கிய தீரன்
மேலும் முத்து விழா நிகழ்ச்சியில் பேசுகையில் பேராசிரியர் தீரன் தொடர்பாக நெகிழ்ச்சியுடன் பேசினார் டாக்டர் ராமதாஸ். காலம் நம்மை பிரித்துவிட்டது என மேடையில் இருந்த தீரனை நோக்கி ராமதாஸ் குறிப்பிட அவரும் கண்கலங்கினார்.
வேல்முருகனை இணைக்க விருப்பம்
இதேபோல் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனையும் தம் பக்கம் மீண்டும் கொண்டுவந்து பாமகவை மிக வலிமையான ஒரு கட்சியாக மீண்டும் கட்டமைத்தாக வேண்டும் என்கிற விருப்பத்தை டாக்டர் ராமதாஸ் தமது சகாக்களிடம் வெளிப்படுத்தியிருக்கிறார். இருப்பினும் சிலரது எதிர்பார்ப்பால் இந்த முயற்சிகள் தடைபட்டு நிற்கின்றனவாம்.
எதிர்பார்ப்புகள் ஏராளம்
இத்தகைய தகவல்கள் பரவியதால் அண்மைக்காலமாக பாமகவினர் மீதான வேல்முருகன் கட்சியினரின் விமர்சனங்கள் சற்றே குறைந்தும் இருக்கிறது. இந்த அடுத்தடுத்த நிகழ்வுகள் வடதமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பபை ஏற்படுத்தியுள்ளது.