தமிழக மக்களின் பக்கமே பாமக.. ஒரே டிவீட்டில் பாஜகவுக்கும் சேர்த்து பதில் கொடுத்த ராமதாஸ்!
இந்தி திணிப்பு கட்டாயம் இல்லை என்ற முடிவினை ராமதாஸ் வரவேற்றுள்ளார்
Recommended Video
சென்னை: தமிழகத்துக்கு எதிரான பாஜகவின் அதிரடிகளை எதிர்க்கிறதா, ஆதரிக்கிறதா.. இல்லை பேசாமல் கம்முன்னு இருந்திடலாமா என்று குழம்பி கிடந்த டாக்டர் ராமதாஸ் வாயை திறந்து பகிரங்கமாக எதிர்க்க ஆரம்பித்துவிட்டார்.
6 மாசத்துக்கு முன்னாடி இருந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேற.. இப்ப இருக்கிற ராமதாஸ் வேற! 6 மாசத்துக்கு முன்னாடி தமிழகத்துக்கு எதிரான எந்த திட்டமாக இருந்தாலும், அதை முதலில் தட்டிக் கேட்டவர் ராமதாஸ்தான்!
அதிலும் வெளிமாநிலங்களில் தமிழக மாணவர்களுக்கு எதிராக எந்த பிரச்சனை நடந்தாலும் சரி, வெளிநாடுகளில் தமிழர்கள் ஏதாவது அவலத்துக்கு ஆளானாலும் சரி.. வெட்டு ஒன்னு துண்டு இரண்டாக கேட்டு அறிக்கை விடுவார் ராமதாஸ்! இப்போதும் இதில் அவர் உறுதியாகவே இருக்கிறார்.
முண்டாசு கவிஞனின் தலைப்பாகையில் காவி.. எதேச்சையானதா.. அல்லது??
உறுதி
இதுபோலத்தான், தமிழகத்துக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களான எட்டு வழிச்சாலையை எதிர்த்து பக்கம் பக்கமாக அறிக்கை விட்டார், போராடினார்கள், மக்களுக்காக கோர்ட் வரை சென்றார்கள்.இதற்கு நடுவில்தான் பாஜகவுடன் கூட்டணி சேரும் நிலை ஏற்பட்டது. ஆனால் அப்போது கூட, "கூட்டணியில் இருக்கிறோமே தவிர, மக்களுக்கு எதிராக எது வந்தாலும் சும்மா விடமாட்டோம்" என்று அன்புமணி ராமதாஸ் உறுதி தந்தார்.
இந்தி திணிப்பு
ஆனால், பதவி ஏற்று முழுசா ஒரு வாரம்கூட முடியல.. அதுக்குள்ள எட்டு வழிசாலை விவகாரத்தை பாஜக கையில் எடுத்தது. சும்மா கிடந்த இந்தி திணிப்பு விவகாரத்தையும் சேர்த்து கொண்டு வந்து தமிழகம் மீது திணித்தது. இதற்கு எல்லா கட்சி தலைவர்களுமே கண்டனங்களை பதிவு செய்தனர். அப்போது பாமக தரப்பில் இருந்தும் ஏதாவது எதிர்ப்புக்குரல் எழுமா என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
கூட்டணி கட்சி
இதை மற்றவர்களைவிட அதிகமாக கவனித்து சொன்னது டிடிவி தினகரன்தான், "இந்தத் திட்டத்தை எதிர்த்து வழக்குப் போட்ட டாக்டர் ராமதாஸ், அதிமுகவுடன் கூட்டணி வைத்தபோது, எதற்காகவும் எங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று சொல்லியிருந்தார். இப்போது அவரது கூட்டணிக் கட்சியான பிஜேபி ஆளும் மத்திய அரசு மேல்முறையீடு செய்திருக்கும் இந்த சூழலில் அவரது மௌனமும் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது" என்று ராமதாசின் மௌனத்தை முக்கியமாக குறிப்பிட்டிருந்தார்.
தேசிய கல்வி கொள்கை
இப்போது விஷயம் என்னவென்றால், இந்த இரு திட்டங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார் ராமதாஸ்! இது சம்பந்தமான தனது ட்வீட்டில், "தேசிய கல்வி கொள்கையில் இந்தி பாடம் கட்டாயம் என்ற பரிந்துரை திரும்ப பெறப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்த பாமகவுக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி இதுவாகும். சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று சுப்ரீம்கோர்ட்டு கூறியிருப்பது நிம்மதி அளிக்கிறது. இந்த திட்டத்தால் உழவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் கவசமும், காவலனும் பாமக தான் என்பதை மக்கள் உணர்வார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
|
பாஜக
ஒரே ட்வீட்டில் பாஜகவின் செயல்பாட்டை மறைமுகமாக சாடியதுடன், தமிழக மக்களின் பக்கமே பாமக என்றும் நிலைத்து நிற்கும் என்ற உறுதியையும் தந்துள்ளார். அது மட்டுமில்லை.. தினகரன் சொல்லி இருந்த ராமதாசின் மவுனமும் கலைக்கப்பட்டு விட்டது!