கொரோனாவை டச் பண்ணிட்டு அமைச்சர் பொய்யான அறிக்கைகளை வெளியிடுவதா? - திமுக எம்எல்ஏ கிண்டல்
சில பேருக்கு போற போக்கில் கொரோனா டச் பண்ணிவிட்டு போகிறது.
சென்னை: அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கொரோனாவை டச் பண்ணி விட்டு பொய்யான அறிக்கைகளை வெளியிடுவதாக திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ சரவணன் கிண்டலடித்துள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டு உடல்ரீதியான விளைவுகள் மறைந்து குணமடைய 3-8 வாரங்கள் ஆகும். ஆனால் கேர் சென்டரில் சிகிச்சை முடிந்து 10வது நாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருகின்றனர். அரசு தரும் மருத்துவ அறிக்கையில் கூட நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்று தான் கூறப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு அவர் சில கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் பேசும் போது, தமிழகத்தில் மதுரையில் தான் அதிகளவில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. நாளொன்றுக்கு 3500-4500 நபர்களுக்கு மேல் பரிசோதிக்கப்படுகின்றனர். தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதன் மூலமாக இதுவரை 75 சதவிகித நோயாளிகளுக்கு மேல் குணமாகி இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
மாண்புமிகு அமைச்சரிடம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். மாண்புமிகு முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சரும் சென்னையில் 10,000 முதல் 15,000 நபர்களுக்கு தினமும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது என்று கூறுவதெல்லாம் பொய்யா?
மதுரையில் உள்ள மருத்துவ கணக்கெடிப்பின்படி 1 அரசு பரிசோதனை மையமும் 5 தனியார் பரிசோதனை மையங்களும் கொரோனா பரிசோதனையில் ஈடுபடுகிறது. ஒரு PCR கருவியில் 70 பரிசோதனைகள் தான் ஒருமுறை செய்ய முடியும். ஒரு பரிசோதனைக்கு ஆறரை மணி முதல் எட்டு மணி நேரம் ஆகிறது. 1 நாளைக்கு 2 முறை செய்யலாம். எப்படிப்பார்த்தாலும் 2000 பரிசோதனைகளுக்கு மேல் செய்யகூடிய வசதி மதுரையில் இல்லை. பரிசோதனை ரிசல்ட் தருவதற்கு 5-6 நாட்கள் ஆகிறது. பாசிடிவ் ரிசல்ட் மட்டுமே சொல்லப்படுகிறது. Soft copy or Hard copy தரப்படுவது இல்லை.
புதிய உச்சம்- 24 மணிநேரத்தில் 55,079 பேருக்கு பாதிப்பு; கொரோனா மரணங்களில் உலகில் இந்தியா 5-வது இடம்
கொரோனா தொற்று ஏற்பட்டு உடல்ரீதியான விளைவுகள் மறைந்து குணமடைய 3-8 வாரங்கள் ஆகும். ஆனால் கேர் சென்டரில் சிகிச்சை முடிந்து 10வது நாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருகின்றனர். அரசு தரும் மருத்துவ அறிக்கையில் கூட நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்று தான் கூறப்பட்டுள்ளது. குணமடைந்துவிட்டார்கள் என்று கூறவில்லை. அதனால் அவர்களை அமைச்சர் கூறுவது போல் அவர்களை குணமடைந்தவர்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பெரிய பின்விளைவுகளை இது ஏற்படுத்தும். இது சமூகப்பரவலை அதிகமாக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
மேலும் ICMR பரிந்துரைப்படி நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யபட்ட உடன் வீட்டில் மேலும் 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.அதுவும் அந்த நோயாளிக்கென தனி அறை கழிப்பறை வசதியுடன் இருக்கும் பட்சத்திலும், நோய்தொற்று அல்லாத 60 வயதுக்கு மேற்பட்ட உறவினர் வீட்டில் இல்லாத பட்சத்திலும் மட்டுமே அது சாத்தியமாகும்.
சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை மதுரை மாவட்ட நிர்வாகம் கொரோனாவிற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று தாமாக முன்வந்து வழக்கு தொடந்து உள்ளது. கொரோனாவிற்கு பரிசோதனைகள் எந்த அளவில் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது? பரிசோதனை முடிவுகள் வர தாமதம் ஏன்? நோயாளிக்கு அரசு மருத்துத்துவமனைகள் மற்றும் கேர் சென்டரில் உள்ள வசதிகள் என்ன? நோயாளிகளுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும் தேவையான தடுப்பு உபகரணங்கள் (PPE) உள்ளனவா? கொரோனா தொற்றால் மரணம் அடைந்தவர்களை முறையாக அடக்கம் செய்ய போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? என நீதிமன்றமே பல கேள்விகளை அரசிடமும், மதுரை நிர்வாகத்திடமும் முன்வைக்கிறது.
இந்த வழக்கில் நானும் ஒரு பிரதிவாதியாக சேர்க்க அனுமதி கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளேன். அந்த வழக்கு வரும் ஆகஸ்டு 3ம் தேதி நடைபெற இருக்கிறது. சில பேருக்கு போற போக்கில் கொரோனா டச் பண்ணிவிட்டு போகிறது. ஆனால் அமைச்சர் அவர்களோ கொரோனாவை டச் பண்ணிவிட்டு பொய்யான அறிக்கைகளை வெளியிடுவதாகவும் கூறியுள்ளார் எம்எல்ஏ சரவணன்.