டாக்டர் சைமன் உடலை மறு அடக்கம் செய்ய கோரி வழக்கு- தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் உடலை வேலங்காடு மயானத்தில் இருந்து எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய உத்தரவிட கோரி அவரது மனைவி தொடர்ந்த வழக்கில், தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்த நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலிஸின் உடலை, ஏப்ரல் 20ம் தேதி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டம் மற்றும் வேலாங்காடு பகுதிகளில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதுடன், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் படுகாயமடைந்தனர். பின், மருத்துவர் சைமனின் உடல், வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
சைமன் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக டி.பி.சத்திரம், அண்ணா நகர் காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டு, 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட சைமனின் உடலை உடலை தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யக் கோரி அவரது மனைவி ஆனந்தி, சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.
அதை பரிசீலித்த சென்னை மாநகராட்சி ஆணையர், ஆனந்தியின் கோரிக்கையை மே 2ஆம் தேதி நிராகரித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
விழுப்புரம் மாணவி எரித்து கொலை- சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
அந்த மனுவில், கணவரின் உடலை தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய வேண்டுமென்ற தனது கோரிக்கையை நிராகரித்த சென்னை மாநகராட்சி உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும், மீண்டும் கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய உத்தரவிடவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.துரைசாமி முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 4 வார கால அவகாசம் வழங்கி, விசாரணை ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.