சளியின் அடர்த்தியை குறைக்கும் நீராவி தெரபி.. கொரோனாவை தொண்டையிலிருந்து துரத்தும்.. டாக்டர் தீபா
சென்னை: நீராவி தெரபி மூலம் சளியின் அடர்த்தியை குறைத்து தொண்டை பகுதியிலேயே கொரோனாவை துரத்தும் சிகிச்சை அரசு யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவமனை அளிப்பதாக கைநுட்ப மருத்துவத் துறை தலைவர் டாக்டர் தீபா தெரிவித்தார்.
Recommended Video
இதுகுறித்து டாக்டர் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கொரோனா தொற்றுநோயால் உலகமே மிகவும் வருத்தத்தில் இருக்கிறது. ஆரோக்கியம், அத்தியாவசிய சேவைகள் என அனைத்தும் முடக்கியே உள்ளது. இதனால் நமக்குள் மனஅழுத்தங்கள் அதிகமாகவே இருக்கின்றன. இதனால் கோபம், ஸ்ட்ரெஸ் ஆகியவை ஏற்படுகின்றன.
இதிலிருந்து வெளியே வருவதற்கும், கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாப்பதற்கும் இயற்கையான முறையிலான சிகிச்சைகள், யோகா ஆகியவற்றை நாம் வீட்டிலிருந்தபடியே எடுத்துக் கொள்ளலாம். அதுபோல் கொரோனா பாதித்தவர்களுக்கும் என்ன மாதிரியான சிகிச்சைகள் அளிக்கலாம் என்பதை பார்ப்போம்.
இந்தியாவில் அதீத உச்சம் - 24 மணிநேரத்தில் 19,459 பேருக்கு கொரோனா- 380 பேர் மரணம்
உயிரிழப்புகள்
கொரோனா தொற்று எளிதில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. இதனால் சமுதாய தொற்று ஏற்பட்டுவிட்டால் இது பலரை பாதிக்கும். உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும். இந்த நிலையை பல நாடுகள் சந்தித்து வருகிறார்கள். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்காக இயற்கை மற்றும் யோகா மருத்துவக் குழுவினரான நாங்கள், ஒவ்வொரு நோய் பாதிப்பு பகுதிகளில் உள்ள மக்களுக்கு போன் மூலமாக கவுன்சலிங் கொடுக்கிறோம்.
ஆரோக்கியம்
அது போல் ஒவ்வொரு ஏரியாவுக்கும் சென்று அவர்களுக்கு தேவையான ஆரோக்கியமான உணவுகள் என்னென்ன? என்னென்ன கசாயங்கள் அவர்கள் வீட்டிலிருந்தபடியே குடிக்கலாம் என்ற ஆலோசனைகளை வழங்குகிறோம். எங்கள் குழு சார்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கான (Immune Boosting drink) தயாரித்துள்ளோம். அது என்னவென்றால் அதிமதுரம் 5 கிராம், மஞ்சள்- கால் டீ ஸ்பூன், மிளகு கால் டீ ஸ்பூன், சிறிய இஞ்சியின் சாறு, துளசி இலைகள் 10 ஆகியவற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் நன்கு கொதிக்க விட வேண்டும்.
கசாயங்கள்
இவற்றை 2 முதல் 3 நிமிடங்களுக்கு கொதிக்க விட வேண்டும். இதை தேன் கலந்தும் வெல்லம் கலந்தும் சாப்பிடலாம். அதிமதுரம் இருப்பதால் இது இனிப்பாகவே இருக்கும். இரண்டு மூன்று மாதங்களாக கொரோனா அச்சத்தால் மக்கள் நிறைய கசாயங்களை எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் நிறைய அஜீரண பிரச்சினைகளை நாம் சந்தித்து வருகிறோம். அறுசுவை விருந்துதான் நம் இந்தியாவின் பாரம்பரிய உணவாகும்.
கொரோனா தொற்று
ஒவ்வொரு சுவைக்கும் ஒவ்வொரு மருத்துவ குணங்கள் இருக்கின்றன. எனவே இந்த சுவைகளை அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது. கொரோனா தொற்று சமயத்தில் கூட ஒரு சில விஷயங்களை நாம் பார்த்து கவனமாகத்தான் எடுத்து கொள்ள வேண்டும். அதிகமான கசப்பும் சேர்க்க கூடாது. இது ஜீரண பிரச்சினையை ஏற்படுத்தும். இதனால் உடல் வெப்பமும் அதிகரிக்கும்.
விட்டமின் சி
அதற்காக அதிகமான புளிப்பும் சேர்க்கக் கூடாது. விட்டமின் சி அதிகமாக இருக்கிறது என்பதற்காக நிறைய பேர் தினமும் எலுமிச்சை ஜூஸ் குடிக்கிறார்கள். அது குடிப்பதற்கும் அளவு இருக்கிறது. இவற்றை 100 எம்எல் எடுத்துக் கொண்டால் போதுமானது. புளிப்பு சுவையை அதிகமாக எடுத்தால் எலும்பு பிரச்சினை ஏற்படும்.
இயற்கை மருத்துவமனை
யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் மருத்துவர்கள் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகள், கோவிட் சென்டர்கள் ஆகிய இடங்களில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி கொடுத்து வருகிறார்கள். முகத்திற்கு நீராவி சிகிச்சை அளிக்கிறோம். வாயை பெரியதாக திறந்து நீராவியை இழுப்பதன் மூலம் வைரஸின் வீரியத்தை குறைக்க முடியும். இந்த முறையின் மூலம் சளியின் அடர்த்தி குறையும். இது சளியை குறைக்கும் மியூகோலைட்டிங் ஏஜென்ட்டாக உள்ளது. இதனால் சளி எளிதாக வெளியேறிவிடும் என்றார்.