கொரோனாவுக்குப் பிந்தைய உடல் உபாதைகளால் அவதியா.. பயப்படாதீங்க.. ஈஸியாக எதிர்கொள்ளலாம்.. டாக்டர் தீபா
சென்னை: கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளை போக்க அவர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு உள்ளிட்டநோய்களை தடுக்க இயற்கை மருத்துவத்தில் உள்ள வழிகளை கூறுகிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்பத் துறை மருத்துவர் டாக்டர் ஒய் தீபா.
இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் இந்த கொரோனாவால் தற்போது நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கொரோனாவிலிருந்து நாம் மீண்டாலும் ஒரு சிலர் உடல்ரீதியில் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.
குறிப்பாக வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் சில உடல்நலக் கோளாறுகளை சந்தித்து வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் கூறும் பிரச்சினைகள் உடல்வலி, மூச்சு பிரச்சினை ஆகியவையே.
செயல்பாடுகள்
உடலில் மற்ற உறுப்புகளின் செயல்பாடுகள் குறைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அண்மையில் ஆய்வு நடத்திய இத்தாலி நிறுவனம் தனது ஆய்வறிக்கையை ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷனில் சமர்ப்பித்துள்ளது. அதன்படி கொரோனாவிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆன 87.4 சதவீதம் நோயாளிகளுக்கு சில உடல் உபாதைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
ரத்தக் குழாய்
இந்தியாவை பொருத்தவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் சொல்வது உடல் அசதி மற்றும் வறட்டு இருமல் ஆகும். இது எதனால் ஏற்படுகிறது என்றால் நிமோனியா வந்து நுரையீரலை அது தாக்கும் போது மீண்டும் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும் ரத்தக் குழாயில் ரத்தம் உறைதல் ஏற்பட்டு அவர்களுக்கு ஸ்ட்ரோக் வரவும் வாய்ப்புள்ளது.
10 சதவீதம்
என்னதான் நாம் கொரோனாவிலிருந்து மீண்டாலும் ஒரு சிலருக்கு நுரையீரல் செயல்பாடும் பாதிக்கப்படுகிறது. இது மிகவும் குறைந்த அளவிலான பேருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் 5 முதல் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.
உணவுகள்
இவர்களில் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதுதான் மிகவும் பொதுவான விஷயமாக உள்ளது. கால்,கை, மூளை, ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால் அவர்களுக்கு சில பிரச்சினைகள் ஏற்படுவதாக அலோபதி மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இதிலிருந்து நாம் மீள்வது எப்படி என்பதை பார்ப்போம். இயற்கையாக நாம் சாப்பிடக் கூடிய உணவுகளை வைத்தே இதிலிருந்து வெளியே வரலாம்.
ரத்தம் உறைதலை தடுக்கும்
இயற்கை உணவின் மூலம் ரத்தம் உறையாமல் ஏற்படாமல் தவிர்க்கலாம். இதன் மூலம் ரத்த நாளங்களில் ரத்தம் உறையாமல் பார்த்துக் கொள்ள உதவும். இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால் மாரடைப்பு வரலாம். மூளையில் அடைப்பு ஏற்பட்டால் ஸ்ட்ரோக் வரலாம். கை, கால்களில் ரத்தம் அடைப்பு ஏற்பட்டால் அங்கிருக்கும் செல்கள் பாதிக்கப்படும்.
மஞ்சளில் என்னவுள்ளது
முதலில் மஞ்சளை நாம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த மஞ்சளில் ரத்தத்தை மெலிதாக்கும் தன்மை உண்டு. ரத்த நாளங்களில் ரத்தம் உறையாமல் பாதுகாக்கும். இந்த மஞ்சள் ரத்தம் உறையாமல் பாதுகாப்பதாக 2012- இல் வெளியான ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை தினமும் சமையலில் சேர்த்து கொள்ள வேண்டும்.
உடல் உபாதை
அத்துடன் ஒரு டம்ளர் நீரில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், மிளகு, இஞ்சி , அதிமதுரம், துளசி ஆகியவற்றை சேர்த்து நோய் எதிர்ப்பு சக்தி பானமாக எடுத்துக் கொள்ளலாம். இதை நாம் தினமும் எடுத்து வந்தால் கொரோனா வராமல் தடுக்கலாம். அதே நேரத்தில் கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு வரும் உடல் உபாதைகளையும் தவிர்க்கலாம்.
இயற்கை அமிலம்
இஞ்சியில் சேலிசலேட் என்ற இயற்கை அமிலம் உள்ளது. இது ஆஸ்பிரினில் உள்ள அசிடைல் சாலிசிலிக் ஆசிட், ரத்தத்தின் அடர்த்தியை குறைக்க உதவுகிறது. இது ஒரு அலோபதி மருந்து. ஆனால் இது இயற்கையாகவே இஞ்சியில் இருக்கிறது. இதன் மூலம் ரத்தம் உறையாமல் பார்த்துக் கொள்ளும். இதுகுறித்தும் 2015ஆம் ஆண்டில் ஒரு ஆய்வு நடத்தினார்கள். ரத்த உறைதலை இது கட்டுப்படுத்துவதாக தெரிவித்தார்கள்.
கொரோனா
அது போல் காய்ந்த மிளகாயிலும் சேலிசலேட் இருக்கிறது. இதை சமையலில் சேர்த்து கொள்ளலாம். ரத்த அழுத்தத்தை குறைக்கும், ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. உடல் வலியையும் இது நிவர்த்தி செய்கிறது. கொரோனாவால் நாம் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட பின்னர் இது போன்ற சிக்கலில் நாம் சிக்காமலிருக்க விட்டமின் ஈ அவசியமானதாகும். இது ரத்தம் உறைதலை தடுக்கிறது. மேலும் பெரட்டின் அளவை மெயின்டெயின் செய்யவும் இது உதவுகிறது.
விட்டமின் இ
பாதாம், சூரியகாந்தி விதைகள், பிளாக் விதைகள், பூசணி விதைகள், வேர்க்கடலை ஆகியவற்றில் விட்டமின் இ அதிகமாக காணப்படுகிறது. கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் வீட்டுக்கு போன பிறகு ஒரு நாளைக்கு 2 அல்லது 3 பல் பச்சையாக பூண்டை சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிட வேண்டும். இதை சமைக்கும் போது ஆலிசின் என்ற ஒரு சல்பர் அழிந்து விடுகிறது. இந்த பூண்டும் ரத்தம் உறைதலை தடுக்கும்.
அருமருந்து பூண்டு
இந்த பூண்டு ரத்தக் குழாய்களில் இருக்கும் அடைப்பை நீக்கக் கூடிய அருமருந்து. கொழுப்பை குறைக்கும், ரத்த கொதிப்பை குறைக்கும். ரத்தம் உறையாமல் இருக்கவும், உறைந்திருக்கும் ரத்தம் கரைவதற்கும் இந்த பூண்டு உதவுகிறது. அடுத்தது, பட்டை, இதில் கவுமேரின் என்ற ஒரு பொருள் இருக்கிறது. இதுவும் ரத்த உறைதலை தடுக்கவும், ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. இதை சமையலில் சேர்த்துக் கொள்ளலாம்.
மருத்துவ குணம்
இல்லாவிட்டால் ஒரு டம்ளர் தண்ணீரில் கால் டீஸ்பூன் பட்டை தூளை போட்டு கொதிக்க வைத்து இதை குடிக்கலாம். மருத்துவ குணம் உள்ள மஞ்சள் தூள், மிளகு, இஞ்சி உள்ளிட்டவற்றை நீரில் கலந்து குடிப்பதால் இது பெரிட்டின் அளவை பராமரிக்கும். அது போல் யோகாவில் பார்த்தோமேயானால் நாடி சுத்தி பிராணயாமம்.
நாடி சுத்தி பிராணயாமம்
நாடி சுத்தி என்றாலே நாடியை சுத்தம் செய்வதே இந்த பிரணாயாமத்தின் பயனாகும். இட நாடி, பிங்கல நாடி ஆகிய இரு நாடிகள் உள்ளன. நிமிர்ந்த படி உட்கார்ந்து கொண்டு வலது நாசியை மூடி இடது நாசி வழியாக மூச்சை இழுத்து வலது நாசி வழியாக வெளியே விட வேண்டும். மீண்டும் இடது நாசியை மூடி வலது நாசி வழியாக மூச்சை இழுத்து இடது நாசி வழியாக வெளியே விட வேண்டும். இதை தினமும் 10 முறை செய்யலாம். இதனால் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்.
ரத்தம் உறைதல்
நைட்ரிக் ஆக்ஸைடின் அளவும் அதிகரிக்கும். இந்த நைட்ரிக் ஆக்ஸைடு ரத்தம் உறைதலை தடுக்கும். கொலஸ்டிரால் அளவை கட்டுப்படுத்தும். இந்த யோகாவை நாம் செய்தால் நைட்ரிக் ஆக்ஸைடு நைட்ரேட்டாக மாறும். இது ரத்த உறைதலை தடுக்கும், ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும், கொழுப்பை கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கொரோனாவில் நாம் பாதிக்கப்பட்டுவிட்டோம் என்ற கவலையில் இருந்து வெளியே வந்து ஒரு நேர்மறையான எண்ணத்தை கொடுக்கிறது என்றார் டாக்டர் தீபா.