முதல்வர் கையில் இருந்த அக்குபிரஷர் ரோலர்.. இத்தனை பயன்களா? விளக்குகிறார் டாக்டர் தீபா
சென்னை: அக்குபிரஷர் ரோலர்களை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவமனை மற்றும் கல்லூரியின் கைநுட்பவியல் துறை தலைவர் டாக்டர் ஒய். தீபா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ஒய். தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: அக்குபிரஷர் ரோலர் நிறைய தலைவர்கள் வைத்திருப்பதை பார்த்திருக்கிறோம். அண்மையில் அடையாறில் நடைப்பயிற்சி மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் இந்த ரோலர் இருப்பதை கண்டிருப்போம்.
அது போல் மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நடத்திய சந்திப்பின்போதும், நம் பிரதமரிடம் இந்த ரோலர் இருந்ததை நாம் அறிவோம். இது என்ன என்பது குறித்து பொதுமக்கள் தங்களுக்குள்ளாகவே கேள்வி எழுப்பி வருகிறார்கள். எனவே இந்த அக்குபிரஷர் ரோலர் குறித்தும் அக்குபிரஷர் ரோலரின் பயன்கள் குறித்தும் பார்ப்போம்.
சிக்கன், மட்டன் சாப்பிடாதவர்களுக்கும் கொலஸ்டிரால் வருவது ஏன்.. ஃபேட் நல்லதா கெட்டதா? டாக்டர் பரூக்
72 ஆயிரம் புள்ளிகள்
நம் உடலில் கிட்டதட்ட 72 ஆயிரம் புள்ளிகள் இருக்கின்றன. இந்த புள்ளிகளில் குறிப்பான புள்ளிகளை தூண்டிவிட்டு உடலில் உள்ள நோய்களை நிவர்த்தி செய்வதுதான் அக்குபிரஷர். உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் நம் உறுப்புகளுக்கான புள்ளிகள் இருக்கும். இதை Reflexology என்றும் sujok என்றும் குறிப்பிடுவார்கள். இந்த புள்ளிகளை தூண்டுவதற்காக நம் கைகளில் முள்களை போன்ற ரோலர்களை பயன்படுத்த வேண்டும்.
ரத்த ஓட்டம்
இந்த ரோலரை நாம் பிரஷர் கொடுத்து அழுத்தும் போது உடல் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. நம் உடலில் ஒவ்வொன்றும் நரம்புகளுடன் இணைந்துள்ளது. நம் உள்ளுறுப்புகளுக்கான நரம்பு எதில் இருக்கிறதோ அதனுடைய முடியும் புள்ளிதான் நமது உள்ளங்கை, உள்ளம்பாதம். இந்த புள்ளிகளை தூண்டுவதன் மூலம் உறுப்புகளை அதிக செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்குத்தான் இந்த அக்குபிரஷர் ரோலரை பயன்படுத்துகிறோம். ஆற்றல் சக்தியை அதிகரிக்கும்.
புள்ளிகள் தூண்டிவிடுதல்
இந்த ரோலரை பயன்படுத்தி புள்ளிகளை தூண்டிவிடுவதன் மூலம் நம் ஆரோக்கியத்தில் பல விஷயங்களை நாம் பாதுகாக்கலாம். குறிப்பாக டென்ஷன் இல்லாமல் இருக்க உதவும். நமது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தம், மன சோர்விலிருந்து நீக்க உதவும். நாள் முழுவதும் நா்ம் புத்துணர்ச்சியுடன் இருக்க இந்த ரோலர் உதவும். இந்த ரோலர்களின் பயன்களை சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நம் உடலை ரீசார்ஜ் செய்வது போல்தான்.
கைக்கு அடக்கமான வடிவங்கள்
பென்சில், பென் போன்று கைகளுக்கு அடக்கமான வடிவங்களிலும் ரோலர் வந்துவிட்டது. இந்த ரோலர் மரக்கட்டையால் ஆனது. இந்த ரோலர் குழந்தைகளுக்கு தேர்வின் போது வரக்கூடிய டென்ஷனை குறைக்கவும் அவர்களுடைய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது பயன்படுகிறது. தேர்வு எழுதும் மாணவர்கள் டிப்ரெஷனுக்கு போகாமல் ஆக்டிவ்வாக இருப்பதற்கும் இது உதவுகிறது. இந்த ரோலரை கொண்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை நன்றாக ரோல் செய்தோம் என்றாலே போதும். கை, கால்களில் இருக்கும் புள்ளிகளுக்கு மசாஜிங் எஃபெக்ட்டை ஏற்படுத்தும்.
தசை பிடிப்பு
தசை பிடிப்பு, வாய்வு தொல்லைகளுக்கும் இந்த ரோலரை நாம் பயன்படுத்தலாம். இதன் மூலம் தேவையில்லாமல் உடலில் உள்ள கேஸை வெளியேற்றும். தசை பிடிப்பை குறைக்கிறது. தசைகளில் ஏற்படக் கூடிய இருக்கங்களை நீக்கி நன்றாக ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. பொதுவாக ஒரு உறுப்பில் ரத்த ஓட்டம் இல்லாமலோ அல்லது குறைந்திருந்தாலோ அந்த இடத்தில் கழிவுகள் தங்கி அதன் செயல்பாட்டை குறைக்கும். இந்த ரோலர் மூலம் நாம் புள்ளிகளை தூண்டிவிடுவதால் ரத்த ஓட்டத்தை நன்கு அதிகரிக்கும்.
ஃபுட் ரோலர்
வயிற்று பகுதிகளில் உள்ள லைனிங் இருக்கும் தசைகளை தூண்டிவிட்டு நமக்கு நல்லதொரு ஜீரணத்தை அதிகரிக்கும். இதன் மூலம் ஜீரண சக்தியும் அதிகரிக்கும். கால்களுக்கும் Foot roller என இருக்கிறது. கால்களில் 10 நிமிடம் ரோலரை கொண்டு தேய்க்கும் போது டென்ஷன் காணாமல் போகும். மிகவும் ரிலாக்ஸ்டாகவே நாம் உணர்வோம். நீரிழிவு நோயை குறைக்கவும் இந்த அக்குபிரஷர் ரோலர்கள் உதவுகின்றன. இன்சுலின் சுரப்பதை அதிகரித்து அவர்களுடைய ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
கணைய பகுதி
கணைய பகுதிகளில் ரோலரை கொண்டு பிரஷர் கொடுக்க வேண்டும். இந்த தெரபியை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில் நாம் மசாஜாகவே தருகிறோம். வீடுகளில் செய்ய வேண்டும் என்றால் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறையின் மருத்துவரை அணுகி செய்து கொள்ளலாம். பாதங்களில் வரக்கூடிய டயாபெடிக் அல்சர் வராமல் தடுக்க இது உதவுகிறது. ரோலர் மூலம் நீரிழிவு நோய் கட்டுக்குள் வந்து பாதஙகளில் முள் குத்துவது போன்ற வலியையும் எரிச்சலையும் போக்குகிறது. இந்த ரோலர் தெரபியுடன் உணவு கட்டுப்பாட்டையும் சேர்த்து பயன்படுத்தும்போது நாம் எளிதாக சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
தூக்கமின்மை
இந்த ரோலரை நாம் அடிக்கடி பயன்படுத்துவதால் நம் உடல் ரிலாக்ஸாகி உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும். நம்மை பாசிட்டிவ்வாக வைத்திருக்கும். இதன் மூலம் மன அழுத்தம் நீங்கும். ரோலர் நமக்கு தடையின்றி தூக்கத்தை கொடுக்கிறது. உள்ளங்கையின் நடுபகுதியை தூண்டிவிடுதல் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம். ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல் ஆகியவற்றின் கீழ்பகுதி நுரையீரல் பகுதி என்பதால் நாம் பிரஷர் கொடுக்கும் போது சளி தொந்தரவு இல்லாமல் நுரையீரல் நல்ல செயல்பாட்டில் இருக்கும். ஆஸ்துமா தொல்லை இருப்போர் இந்த ரோலரை பயன்படுத்தினால் அந்த தொல்லை படிப்படியாக குறைந்து நுரையீரலின் திறன் அதிகரிக்கும். சுண்டு விரலுக்கு கீழ் பகுதியில் உள்ள ரேகை கோட்டில் ரோலர் மூலம் பிரஷர் கொடுத்தால் தூக்கமின்மை நீங்கும். இது போல் குறிப்பான புள்ளிகள் இல்லாமல் பொதுவாக நாம் ரோலரை பயன்படுத்தினால் மன அழுத்தம் நீங்கும். இவ்வாறு டாக்டர் ஒய்.தீபா தெரிவித்தார்.