பிளஸ் 2 மாணவர்களே! Neet வேண்டாம்.. இதை படித்தால் நீங்களும் டாக்டர்தான்! சொல்கிறார் டாக்டர் தீபா
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் என்ன படிக்கலாம், எதை படிக்கலாம், இந்திய மருத்துவத் துறையில் உள்ள படிப்புகள் என்ன, அதிலும் நீட் தேர்வே இல்லாத மருத்துவ படிப்பு உள்ளிட்டவை குறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்பத் துறை தலைவர் டாக்டர் ஒய் தீபா விளக்கியுள்ளார்.
வருடந்தோறும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதும் என்ன படிக்கலாம் என்ற குழப்பத்தில் இருக்கும் மாணவர்களை அத்தை, மாமா, சித்தப்பா, பெரியப்பா, அம்மா, அப்பா, ஒன்னுவிட்ட அக்கா, அண்ணன் என ஆளுக்கு ஒரு படிப்பை கூறி அவர்களை மேலும் குழப்பதுண்டு.
ஆனால் ஒன் இந்தியா தமிழ் தளத்தை பொருத்தமட்டில் அவர்களை குழப்பதற்காக இந்த செய்தியை போடவில்லை. அவர்களுக்கு இத்தனை வழிகள் இருக்கின்றன. இதிலிருந்து ஒரு வழியை தேர்வு செய்து கொள்ளலாம் என ஆப்ஷன்களை கொடுக்கிறோம்.
கொரோனாவிலிருந்து மீண்டாலும்.. அதான் போய்டுச்சேனு அசால்ட்டா இருக்காதீங்க.. டாக்டர் ஒய் தீபா அட்வைஸ்
ஆயுஷ்
வாங்க மாணவர்களே! வழிகாட்டுகிறோம்! இதுகுறித்து ஒன் இந்தியா தமிழ் தளத்திற்கு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறை மருத்துவமனை டாக்டர் ஒய் தீபா கூறுகையில் இந்திய மருத்துவத் துறையில் ஆயுஷ் என ஒரு துறை உள்ளது. அதாவது ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகியற்றை உள்ளடக்கியது AYUSH ஆகும். தற்போது ஏராளமான மாணவர்களுக்கு மருத்துவம் படிப்பது என்பது கனவு, லட்சியமாக உள்ளது.
பிடிஎஸ் படிப்பு
முதலில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகள் மட்டுமே மருத்துவம், அதை படித்தால்தான் டாக்டர் என்று நினைப்பது தவறு. மேற்கண்ட இந்திய மருத்துவமும் ஒரு டாக்டருக்கு இணையான பாடப்பிரிவுகள்தான். இந்த படிப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து நாம் முறையாக பதிவு செய்து மக்களுக்கு சேவை செய்யலாம். மேலும் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளும் காக்கப்படும்.
எத்தனை ஆண்டுகள்
அற்புதமான மூலிகைகள், அருமையான யோகாசனங்கள், இயற்கையாக வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்தே 100 சதவீதம் பக்க விளைவுகள் இல்லாத மருத்துவம் என வெளிநாட்டினரே நம்மை பார்த்து வியக்கும் அளவுக்கு நம்மிடம் பாரம்பரிய மருத்துவங்கள் காணப்படுகின்றன. யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (BNYS- Bachelor of Naturopathy and Yogic Medicine) என்பது ஐந்தரை ஆண்டுகள் படிக்கக் கூடிய படிப்புகளாகும். இந்த படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
அடிப்படை அறிவியல்
நான்கரை ஆண்டுகள் தியரியாக படிக்க வேண்டும். ஒரு ஆண்டு இன்டர்ன்ஷிப் எனப்படும் பயிற்சியை ஏதேனும் மருத்துவமனைகளில் மேற்கொள்ள வேண்டும். இந்த மருத்துவமனைகளில் மூத்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நாம் மருத்துவம் பார்க்கலாம். இந்த நான்கரை ஆண்டுகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கு இணையாக இருக்கும் அடிப்படை அறிவியல் அனைத்து கற்பிக்கப்படும்.
இயற்கை மருத்துவம்
குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அனடோமி, பிசியாலஜி, பயோகெமிஸ்டிரி, பத்தாலஜி, சோசியல் மற்றும் பிரிவென்டிவ் மருத்துவம், பாரன்சிக் மெடிசின், எமர்ஜென்சி மெடிசின், மைனர் சர்ஜரி, பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவம், அடிப்படை பார்மக்காலஜி ஆகியவை கற்பிக்கப்படும். இவற்றுடன் இயற்கை மருத்துவம், யோகா உள்ளிட்டவையும் அதற்கான சிகிச்சை முறைகளையும் அறிவியல் ரீதியாக எந்தெந்த நோய்களுக்கு எந்தெந்த சிகிச்சை செய்யலாம் என்பது குறித்தும் தியரியாக நான்கரை ஆண்டுகளில் கற்பிக்கப்படும்.
பட்டப்படிப்பு
ஒரு வருட இன்டர்ன்ஷிப்பில் செயல்முறை விளக்கத்தை மருத்துவ நிபுணரின் மேற்பார்வையில் நாம் எடுத்துக் கொள்ளலாம். சரி இது எங்கு படிக்கலாம்? தமிழகத்தில் 13 முதல் 15 தனியார் நடத்தும் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அரசு கல்லூரி என்றால் அது சென்னை அரும்பாக்கத்தில் அண்ணா அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இந்த கல்லூரிகளில் சேர்ந்து ஐந்தரை ஆண்டுகள் படிப்பை முடித்தவுடன், எம்டி எனப்படும் முதுகலை பட்டப்படிப்பையும் நாம் படிக்கலாம்.
சேவை
இதில் MD Acupunture Energy Medicine, MD Naturopathy, MD Yoga படிப்புகள் உள்ளன. இதையும் மாணவர்கள் படிக்கலாம். இதை முடித்தால் ஆய்வுகளில் பல விஷயங்களை மாணவர்களால் சாதிக்க முடியும். இந்த மருத்துவ படிப்புகளை படித்தால் தமிழகத்தில் மட்டும்தான் பணியாற்ற முடியும், சேவை செய்திட முடியும் என்பதில்லை. இந்த படிப்புகளை நாம் ஆங்கில வழிக் கல்வியாக படித்து வருவதால் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் சேவை செய்யலாம்.
மறுப்பதற்கில்லை
இந்தியா மட்டுமல்ல, உலகில் பல்வேறு பகுதிகளிலும் இந்த படிப்புகளுக்கும் இந்த துறைகளுக்கும் மவுசு உண்டு. ஏராளமான மாணவர்கள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்கள். இதற்கு வருங்காலத்தில் பணி வாய்ப்புகள் இருக்கிறதா என்ற கவலையே வேண்டாம். இதற்கு உதாரணமாக கொரோனா தொற்றுநோயை எடுத்துக் கொள்ளலாம். என்னதான் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டாலும் பல இடங்களில் யோகா, இயற்கை மருத்துவம் பெரும் பங்காற்றி வருகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
இயற்கை
இந்த சிகிச்சை முறைகளில் மிகவும் அபாய கட்டத்தில் இருப்போரும் கூட மறுபிறவி எடுக்கும் அளவுக்கு நம் பாரம்பரிய மருத்துவங்கள் கைகொடுக்கின்றன. இயற்கையோடு ஒன்றிணைந்தால் எந்த நோயையும் விரட்டலாம் என்பதற்கு இந்த கொரோனா மிகப் பெரிய உதாரணமாகும். எனவே மாணவர்களே இயற்கையோடு இணைந்து வாழ்வோம்! வாழ்க்கையின் வளைவு சுளிவுகளை வசந்தமாக்குவோம்! என்றார் டாக்டர் ஒய் தீபா.
விவரங்கள்
படிப்பின் பெயர்- பிஎன்ஒய்எஸ் -Bachelor of Naturopathy and Yogic science
ஆண்டுகள்- மொத்தம் 5.5 ஆண்டுகள் (நான்கரை ஆண்டுகள் வகுப்பு+ ஓராண்டு பயிற்சி)
விண்ணப்பங்கள்- ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் அளிக்கப்படுகின்றன.
தகுதிகள்- பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும், இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்திருக்க வேண்டும். 50 சதவீத மதிப்பெண்கள் போதுமானது.
நீட் தேர்வு தேவையில்லை