நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இத்தனை மருந்துகளா?.. சொந்த காசில் சூனியமா?.. டாக்டர் தீபா அட்வைஸ்
சென்னை: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அளவுக்கு அதிகமான மாத்திரைகளையும் துணை உணவுகளையும் (சப்ளிமென்ட்ஸ்) எடுத்துக் கொள்வது ஆபத்தில் போய் முடியும் என்றும் இயற்கையான உணவு மூலம் இவற்றை அதிகரிப்பது எப்படி என்பது குறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்ப மருத்துவத்தின் மருத்துவர் ஒய் தீபா தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா, தமிழ் ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் இந்த கொரோனா காலத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்கிறோம். நிறைய பேர் இந்த கொரோனா பயத்தால் ஜிங்க், விட்டமின் சி மருந்து உள்ளிட்டவற்றை எடுத்து வருகிறார்கள்.
இவையெல்லாம் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவிலான நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதை மீறினால் அது எல்லாம் நமக்கு விஷமாக மாறிவிடுகிறது.
கொரோனாவால் இறந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு பிரேத பரிசோதனைக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவு
நம்பிக்கை
எதிர்ப்பு சக்தியை அதிகமாக எடுத்துக் கொள்கிறோம் என்ற நம்பிக்கையில் சாப்பிடும் மருந்துகளும் நமக்கு விஷமாகிறது. விட்டமின் சி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 1000 எம்ஜி எடுத்துக் கொள்ளலாம். 2000 மில்லிகிராமுக்கு மேல் போகும் போது நம் உடலுக்கு கெடுதல் உண்டாகிறது. இது போன்ற மருந்துகளை நீண்ட காலம் எடுக்கும் போது நிறைய பிரச்சினைகளை கொடுக்கிறது.
தூக்கமின்மை
குறிப்பாக ஜீரண சக்தியில் கோளாறு ஏற்படுதல், தூக்கமின்மை ஏற்படுதல், அசிடிட்டி பிரச்சினை உள்ளிட்டவை ஏற்படும். இதற்கு தீர்வு என பார்த்தால் நிச்சயமாக இருக்கிறது. விட்டமின் சி அதிகமாக இருக்கக் கூடிய இயற்கை உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதும். தினமும் இயற்கை பானத்தை எடுத்துக் கொள்ளலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
இந்த பானம் செய்ய 5 கிராம் அளவிற்கு பெரிய நெல்லிக்காயின் சாறு எடுத்துக் கொள்ளலாம். 5 மில்லி எலுமிச்சை சாறுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். இவற்றுடன் இஞ்சி 5 கிராம் அளவிற்கு ஜூஸ் செய்து எடுத்துக் கொள்ளலாம். இந்த மூன்று பொருளையும் ஒரு டம்ளர் தண்ணீரில் 20 துளசி இலைகளின் சாறு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவை எடுத்து கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
எலும்பு குறைபாடு
இதை நாம் எடுக்கும் போது எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. நம் உடலுக்கு தேவையான அளவு மட்டுமே எடுத்துக் கொண்டு மற்றவை கழிவுகள் மூலம் வெளியேறும். இதே போல்தான் விட்டமின் டியும். கொரோனாவால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் எலும்பு குறைப்பாட்டுக்காகவும் இதை நிறைய பேர் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த மருந்தை நாம் அதிகமாக எடுத்தோமேயானால் அது எலும்பில் இருக்கும் மஜ்ஜையும் வலிமையும் போய்விடும்.
விட்டமின் டி
அத்துடன் சிறுநீரகத்தையும் பாதிக்கிறது. விட்டமின் டியை நாம் இயற்கையாக சூரிய ஒளியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 10 முதல் 15 நிமிடங்கள் நாம் வெயிலில் நின்றாலே போதுமானது. இந்த விட்டமின் டியினால் நம் உடலில் கேட்டலிட்டிக் என்ற பாலிபெப்டைடும் கிடைக்கிறது. இதனால் ஆன்டி வைரல் எஃபெக்ட்டும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
ரத்தம் உறைதல்
ஒரு நாளைக்கு மஞ்சள் 1.8 கிராம் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மஞ்சள் ஆன்டி வைரலாகவும் கொரோனாவிலிருந்து குணமடைந்த பின்னர் ஏற்படக் கூடிய பிரச்சினைகளையும் தீர்க்கிறது. இந்த மஞ்சளில் உள்ள குர்குமின் ,ரத்தம் உறைதலை சரி செய்யும். அதே நேரத்தில் அதிகமான இரும்பு சத்து எடுத்துக் கொள்வதிலிருந்தும் பாதுகாக்கிறது.
ஜிங்க் சல்பேட்
அடுத்தது ஜிங்க், நிறைய பேர் நோய் எதிர்ப்பு சக்திக்காக ஜிங்க் சல்பேட் எடுத்துக் கொள்கிறார்கள். இதை அதிகமாக எடுத்துக் கொண்டால் ஜீரண மண்டலத்தை பாதிக்கிறது. தூக்கமின்மை ஏற்படுகிறது. மன அழுத்தமும் அதிகமாகிறது. இந்த ஜிங்க்கை கீரை வகைகளிலிருந்து இயற்கையாகவே எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக பருத்திக் கீரையை நாம் எடுத்துக் கொள்ளலாம். பீன்ஸ், பசலை கீரை, சூரிய காந்தி விதைகள், ஃபிளாக் சீட்ஸ், பாதாம், முந்திரி, வால்நெட் ஆகியவை எடுத்துக் கொள்ளலாம்.
பச்சை
இந்த உலர் கொட்டைகள் நாம் எடுத்துக் கொள்ளும் போது கோலின் மற்றும் செலனியம் கிடைக்கிறது. வேகவைத்த முட்டையை எடுத்துக் கொள்வதால் நமக்கு ஜின்ங்கும் கோலினும் அதிகமாக கிடைக்கிறது. இந்த இரண்டும் நமது மன அழுத்தத்தை குறைக்கும். இயற்கையாகவே எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும். ஒரு நாளைக்கு 2 பல் பூண்டை பச்சையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இயற்கை
பூண்டில் உள்ள ஆலிசின் எனக் கூடிய சல்பர் பொருள் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. கொழுப்பை குறைக்கிறது. இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்திக்காகவும் ஆன்டி வைரல் எஃபெக்ட்டிற்காகவும் நாம் சப்ளிமென்டுகளையும் மருந்துகளையும் எடுப்பதற்கு பதிலாக இயற்கையாக கிடைக்கும் பொருள்களிலிருந்து கிடைப்பதை எடுத்துக் கொள்ளலாம் என்றார்.