திராவிட மாடல்..அவருக்கு அனைவரும் சமம் - சேக்கிழார் விழாவில் சேகர் பாபு சொன்னதை கவனிச்சீங்களா?
ஆத்திகர்களும், நாத்திகர்களும் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல் ஆட்சி' என குன்றத்தூரில் நடைபெற்ற தெய்வ சேக்கிழார் விழாவில் அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
சென்னை: நமது முதல்வரை பொறுத்தவரையில் நாத்திகர்கள், ஆத்திகர்கள் என்ற பிரிவு இல்லை அவருக்கு அனைவரும் சமம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். ஆத்திகர்களும், நாத்திகர்களும் ஒரு சேர உருவாக்கியதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தெய்வப் புலவர் சேக்கிழார் பிறந்த ஊரான குன்றத்தூரில் அவருக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குன்றத்தூரில் தெய்வ சேக்கிழார் விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டும் 3 நாட்கள் நடைபெற்ற விழாவில் இறுதி நாளான நேற்று பெரிய புராணம் போற்றும் பெண் நாயன்மார்கள் என்ற தலைப்பில் வில்லுப்பாட்டு நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் புத்தகங்களை வழங்கினார்கள்.
தமிழ்தாய் வாழ்த்து ஏன் பாடல? அறநிலையத்துறை விழாவில் கடுகடுத்த துரைமுருகன்.. சேகர் பாபு அப்சட்
அனைவரும் சமம்
விழாவில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ''நமது முதல்வரை பொறுத்தவரையில் நாத்திகர்கள், ஆத்திகர்கள் என்ற பிரிவு இல்லை. அவருக்கு அனைவரும் சமம். ஆத்திகர்களும், நாத்திகர்களும் ஒருசேர உருவாக்கிய ஆட்சிதான் இந்த திராவிட மாடல் ஆட்சி என்பதில் எள்ளளவும் கருத்து வேறுபாடு இல்லாதவர்.
பொற்காலம்
5 ஆண்டுகள் நிறைவுபெறும்போது பார்த்தால், இந்துசமய அறநிலையத்துறை 1959 ம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும், இதுவரை இல்லாத அளவிற்கு இந்துசமய அறநிலையத்துறைக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிதான் பொற்காலம் என்று வரலாற்றில் பதியப்படுகின்ற அளவிற்கு திட்டங்களை தீட்டி தருகிறார் என்று அவர் கூறினார்.
பக்திமானாக மாறிய தா.மோ. அன்பரசன்
ஆண்டுதோறும் சேக்கிழாருக்கு ஒருநாள் மட்டுமே அரசு விழா நடைபெறும். இந்த ஆண்டு முதல் மூன்று நாட்கள் நடைபெற வேண்டுமென முதல்வர் அறிவுறுத்தியதின் பேரில் மூன்று நாட்கள் விழா நடைபெற்றது. அமைச்சர் தா.மோ. அன்பரசன் பக்திமானாக காட்சியளிக்கிறார் எனவும் தெரிவித்தார்.
திராவிட மாடல் ஆட்சி
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை நடத்துவோம் எனச் சூளுரைத்து வருகிறார். ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் திராவிட மாடல் கோஷத்தை முன்வைத்து வருகிறார். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக வேண்டும். வேலை வாய்ப்புகள் அதிகமாக வேண்டும். தனிநபர் வருமானம் அதிகமாக வேண்டும். மக்களின் சமூக மரியாதை உயர வேண்டும். இதைத்தான் திராவிட மாடல் ஆட்சி உருவாக்க நினைக்கிறது எனப் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.