சிம்பு எதையும் தனித்தன்மையோடு எதிர்கொள்ளும் ஆற்றல் உள்ளவர்.. வீரமணி புகழாரம்
Recommended Video
சென்னை: 'பெரியார் குத்து' பாடலை சமீபத்தில் நடிகர் சிம்பு, பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் வெளியிட்டு யூடியூப்பில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற திராவிடர் திருநாள் விழாவில் இருவரும் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி பேசியதாவது: எங்கள் சிங்கக்குட்டி, பேரக்குட்டியாக சிம்பு வளர்ந்துள்ளார். பெரியார் எப்படி தலைமுறை தாண்டியும், தலைமுறை இடைவெளி இன்றியும் வாழ்ந்து வருகிறார் என்பதற்கு இளைஞர்கள் உதாரணம்.
இந்த இளைஞர்கள் பெரியாரை பார்த்தது இல்லை, படித்து வளர்ந்துள்ளனர். இயற்கையாக விளைந்த அறுவடை இவர்கள். தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சி தலைவராக இருந்தாலும், பெரியார் புகழின் சிதறல்கள். பெரியார் விதைத்த விதை, விளைந்து கொண்டே உள்ளது.
எதிர்ப்பால் வளர்ந்தார்
பெரியார் சிலையை உடைப்போம் என்று ஒருவர் கூறினார். அதற்கு நான் சொன்னேன், உடைக்கட்டும், அதற்கான பலனை அவர்கள் பெறத் தயாராக இருக்கட்டும் என்று கூறினேன். ஏனெனில் பெரியார் எதிர்ப்பால் வளர்ந்தவர். குத்துப்பாட்டை எனக்கு போட்டுக் காட்டியதும், அதை பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது. நாங்கள் யாரும் சொல்லாமலே, இளைஞர்கள் இப்படி உணர்வுப்பூர்வமாக பாட்டு போட்டுள்ளனர்.
எதையும் எதிர்கொள்வார்
சிம்புவிற்கு சில சிக்கல்கள் வந்தபோது, கூர்ந்து கவனித்தது உண்டு. எம் இனத்து பிள்ளைகள் எங்கேயே இருந்தாலும் அவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உண்டு என்பதால் கூர்ந்து கவனிப்பது உண்டு. எதையும் தனித்தன்மையோடு எதிர்கொள்ளும் ஆற்றல் சிம்புவிற்கு உள்ளதை உணர முடிந்தது. சிறு வயதில் இருந்தே இந்த தன்மையை அவர் வளர்ந்துள்ளார்.
தத்துவம், லட்சியம்
இளைஞர்கள் மத்தியில் பெரியார் பாதுகாப்பாக போய்விட்டார். பெரியார் மறைந்து 45 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதே. இப்போதும் எப்படி இளைஞர்களால் ஈர்க்கப்படுகிறார் என்று, எதிரிகள் யோசிக்கிறார்கள். பெரியார் என்பது தனிமனிதன் என்றால்தான் மறைந்திருப்பார். பெரியார் என்பது ஒரு தத்துவம், லட்சியம், பெரியார் என்பது கொள்கைப் பயணம்.
செய்ய வேண்டுமா
ஒரு விஷயத்தை துவங்க முடிவு செய்துவிட்டால், அது வெற்றி பெறுமா இல்லையா என்று யோசிக்க கூடாது. செய்ய வேண்டுமா, செய்ய வேண்டிய அவசியம் இல்லையா என்பதை மட்டும் பார்த்து இறங்கிவிட வேண்டும் என்பார் பெரியார். 100 வருடங்களுக்கு பிறகு ராமசாமி என்று ஒரு பிற்போக்குவாதி இருந்தார் என்று மக்கள் கூறும் அளவுக்கு, முற்போக்குவாதிகளாக மாறினால் நான் மகிழ்ச்சியடைவேன் என்று பெரியார் கூறுவார்.
இளைஞர்கள் உணர்வு
நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறார்கள். அதற்கேற்ப ஆயுதங்கள் தாமாக உருவாகிக்கொண்டுள்ளது. ஆயுதக் கிடங்கு எங்கேயும் உள்ளது என்பதற்குத்தான், இன்றைய இளைஞர்கள் சான்றாக மாறியுள்ளனர். பெரியார் உணர்வு இளைஞர்களிடம் வளர்ந்துள்ளது. தனி மனிதர்கள் எங்களுக்கு எதிரிகள் இல்லை. கொள்கை எதிரிகளை பார்த்து சொல்கிறோம், பெரியாரை இன்னும் எதிர்த்து பேசுங்கள். நீங்கள் பேசப்பேசத்தான், பெரியார் இன்னும் பெரிய தலைவராக வருவார்.
எரிமலை
ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இமயமலை மீது ஏறிவிடலாம். அது பெரிய மலைதான். ஆனால், இமயமலை மீது ஏறிவிட்டோம் என்பதற்காக யாரும் எரிமலை மீது ஏற முயன்றுவிடாதீர்கள். பெரியார் எரிமலை, நெருங்காதீர்கள். பெரியார் எல்லாருக்கும் உரியார். இதை தெரியார் நரியார்கள் மட்டும்தான். இவ்வாறு வீரமணி தெரிவித்தார்.