பெரியார் கொள்கையே இன்றும் எனது சுவாசப்பை.. 90வது பிறந்தநாளில் கி.வீரமணி நெகிழ்ச்சி!
சென்னை : புத்தருக்கு ஓர் ஆனந்தன் போல தந்தை பெரியாரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பதே எனது குறிக்கோள் என தனது 90வது பிறந்தநாளில் சூளுரைத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
திராவிட இயக்கங்களின் தாய்க்கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி இன்று தனது 90வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சித்தாந்த ரீதியிலான தமிழக அரசியல் முன்னோடிகளில் ஒருவரான கி.வீரமணி 90 வயதிலும், நாள்தோறும் திராவிடக் கொள்கைகளைப் பரப்பி வருகிறார்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி என தமிழக அரசியல் தளகர்த்தகர்கள் அனைவருடனும் நெருங்கிப் பழகிய கி.வீரமணி, இன்றும் திராவிடத்திற்கு எதிராகப் பேசும் சனாதனிகளுடன் சமர் செய்து வருகிறார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 90-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி இன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கும் விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவை பிளவுபடுத்தி எதிர்க்கட்சி இடத்துக்கு பாஜக.. கே.என்.நேரு கருத்துக்கு வீரமணி புல் சப்போர்ட்!
10 வயதில்
கி.வீரமணி, 10 வயதாக இருக்கும் போது, 1944 ஆம் ஆண்டு நடைபெற்ற திராவிடர் கழகத்தின் கடலூர் மாநாட்டில் பேசினார். அவருடைய பேச்சால் மேடையில் இருந்த பெரியாரும் அண்ணாவும் ஈர்க்கப்பட்டனர். பின்னர், திராவிட இயக்கக் கொள்கைப் பேச்சாளராகவே மாறினார் வீரமணி. அந்தக் காலகட்டத்தில் 'கடலூர் மாநாட்டில் பேசிய குழந்தை' இந்தக் கூட்டத்திலே பேசுகிறார் என்றே நோட்டீஸ்களில் அச்சடித்து கொடுக்கும் அளவுக்கு சிறு வயதிலேயே திராவிடக் கொள்கையை மேடைகளில் முழங்கியவர் கி.வீரமணி.
சாரங்கபாணி வீரமணி ஆனார்
தனது சாரங்கபாணி என்ற பெயரை, இந்து மத அடையாளங்களில் இருந்து விலக்கிக்கொள்ள வீரமணி என மாற்றிக்கொண்டார். நீதிக்கட்சி திராவிடர் கழகம் என்றான பிறகு, வீரமணி, தி.கவின் திராவிட மாணவர் கூட்டமைப்புக்கு தலைமை வகித்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற வீரமணி, சில காலம் ஆசிரியராக இருந்தார். பின்னர், சட்டப் படிப்புக்காக சென்னை சென்றார். பெரியாரின் மறைவுக்குப் பிறகு, திராவிடர் கழகத்தையும், அவர்தம் அறிவுசார் உடைமைகளையும் முன்னின்று நடத்தி வருகிறார் கி.வீரமணி.
உண்மையான வயது
திராவிடர் கழகத் தலைவர் கி .வீரமணி தனது 90வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "நான் 90 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பினை பெரும் நாள் டிசம்பர் 2. வயது ஆவதும் முதுமையும் இயல்பான ஒன்றுதான். முதுமையில் பலர் முடங்கிப் போய்விடுவார்கள். வயதில் கூட பிறந்த நாள் கணக்கை ஒட்டிய வயது ஒரு புறம் என்றாலும் உண்மையான செயல் திறனுக்குரிய வயது என்பது அவர்கள் உணர்வை பொருத்தது.
பெரியார் கொள்கையே சுவாசப்பை
தந்தை பெரியார் என்ற மாபெரும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவரை எனது மாணவப் பருவத்தில் பற்றிக் கொள்ளும் வாய்ப்பை என்னை தொடக்கத்தில் ஈடுபடுத்திய எனது கல்வி ஆசான் திராவிட மணி எனக்கு ஏற்படுத்தித் தந்தார். அன்று முதல் இறுதி வரை ஒரே தலைவர் தந்தை பெரியார் என்ற அந்த அறிவு பேராசான் தான். அவரின் கொள்கையே இன்றும் எனது சுவாசப்பை.
பகுத்தறிவு சிறுவனாக
சிறு கல்லாய் கடலூரில் இருந்த இந்த சிறுவனை பகுத்தறிவு சிறுவனாக்கி கொள்கையால் செதுக்கி ஒரு சிற்பமாக்கியவர் ஒப்பற்ற சிற்பியான நமது சுய சிந்தனையாளர் தந்தை பெரியார். அவருக்கு தொண்டு செய்து அவருக்கு பின் அன்னையார் அவர்களுக்கும் பின் இயக்கத்திற்கு தொடர் பணி போன்றவை எனக்கு கிடைத்த வாய்ப்பு எதிர் நீச்சலே இயக்கப் பணியாயிற்று.
புத்தருக்கு ஓர் ஆனந்தன் போல
ஏளனத்தை எதிர்கொள்ள வாய்ப்பை கொடுத்தது பல பாடங்களை கற்றுக் கொடுத்து பக்குவப்படுத்தி இருக்கிறது. நமது இயக்கத்தையும் என்னையும் வளர்த்தெடுத்தவர்கள் ஐயா, அம்மா, கூட்டுப் பணி தோழர்கள். புத்தருக்கு ஓர் ஆனந்தன் போல தந்தை பெரியாரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பது எனது குறிக்கோள் எனத் தெரிவித்துள்ளார் ஆசிரியர் கி.வீரமணி.