ஆன்லைன் சூதாட்ட தடுப்புச் சட்டம்- ஒப்புதல் தராத ஆளுநரைக் கண்டித்து டிச.1-ல் போராட்டம் - கி.வீரமணி
சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடுப்புச் சட்டத்துக்கு ஒப்புதல் தராத ஆளுநரைக் கண்டித்து டிசம்பர் 1-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் 'ஆன்லைன் ரம்மி' போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குப் பலரும் அடிமையாகி பணத்தை இழந்ததுடன், தொடர் தற்கொலை செய்துகொண்ட - கொள்ளும் நிகழ்வுகள் இடையறாமல் நடந்துவருகிற கொடுமை - மனிதநேயர் எவரது உள்ளத்தையும் உலுக்கவே செய்யும் என்பது உறுதி!
இதைத் தடுக்க 'ஆன்லைன் சூதாட்ட'ங்களைத் தடை செய்ய வேண்டுமென்று திராவிடர் கழகமும் மற்ற பல அரசியல் கட்சிகளும், மனிதநேய சமூக அமைப்புகளும் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததினால், இதற்கு ஓர் அவசரச் சட்டம் (Ordinance) தமிழ்நாடு அரசு (தி.மு.க.) இயற்றி, கடந்த மாதம் ஒன்றாம் தேதி ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து, அவரது ஒப்புதல் பெற்று நிறைவேற்றியது. இது 'ஆன்லைன் சூதாட்ட' எதிர்ப்பாளர்களுக்கு ஒரு வகையான ஆறுதலைத் தந்தது!
ஒப்புதல் தராத ஆளுநர்
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில், அமைச்சரவை செய்த முடிவுக்கேற்ப, சட்டமன்றத்தைக் கூட்டி, நிரந்தர தடைச் சட்டத்தைக் கொண்டுவர ''தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா'' சட்டமன்றத்தில் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த அக்டோபர் மாதம் 28 ஆம் தேதியே தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது. அதற்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் தராமல் உள்ளது வருந்தத்தக்கது. (ஒரு மாதமாகக் கிடப்பில் உள்ளது).
கடமையாற்றாத ஆளுநர்
ஏற்கெனவே அமலில் உள்ள அவசர தடைச் சட்டம் காலாவதியாகி விட்டது! அவசரச் சட்டத்தின் அதே அம்சங்கள்தான் மசோதாவிலும் இடம்பெறுவது வழமையான முறை என்பது பலரும் அறிந்த உண்மை.அதற்கு ஒப்புதல் தந்த ஆளுநர், இந்தத் தடைச் சட்டம் நிரந்தரமாவதற்கு ஏன் இப்படி காலந்தாழ்த்த வேண்டும்? இது தீயணைப்புபோல, உயிர்ப் பலிகளைத் தடுக்கும் மனித உயிர்கள் பாதுகாப்புச் சட்டம் அல்லவா! ஆளுநர் கேட்ட விளக்கமும் - கடும் நோயோடு போராடும் நோயாளிகளுக்கு எப்படி தீவிர சிகிச்சை முக்கியமோ அதுபோன்ற அவசரம் காட்டவேண்டிய மனிதநேயப் பிரச்சினையில் ஆளுநர், இதில் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பிய நிலையில், தமிழ்நாடு அரசு 24 மணிநேரத்திற்குள், அதற்கு விளக்கம் அளித்தது. சட்ட அமைச்சர் திரு.ரகுபதி அவர்கள் நேரில் ஆளுநர் மாளிகைக்குச் சென்று சந்திக்க நேரம் கேட்டும், அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. தற்கொலைகள் தடுப்புக்கான உயிர்ப் பலிகளைத் தடுக்கும் மனிதநேயச் சட்டம் என்பதால், இதற்கு முதன்மையான முன்னுரிமை (Top Priority) கொடுத்து, கையெழுத்திட்டுக் கடமையாற்றி இருக்கவேண்டாமா ஆளுநர்?
32 பேர் தற்கொலை
அவசரச் சட்டம் காலாவதியான வாய்ப்புகளை, சூதாடிகள் பயன்படுத்தி, மக்களின் உயிரோடு விளையாடக் கூடிய ஆபத்து ஒவ்வொரு நாளும் உள்ளது என்பதை எவரே மறுக்க முடியும்? கடந்த சில நாள்களில் 32 பேர் தற்கொலை என்பது நெஞ்சைப் பிழியும் செய்தி அல்லவா? அதற்குப் பொறுப்பேற்கவேண்டியது யார்? எனவே, ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் பதவியேற்கும்போது, அரசமைப்புச் சட்ட விதி 159-இன்படி எடுத்த உறுதிமொழியில், ''மக்களுக்குத் தொண்டு செய்து, தமிழ்நாட்டு மக்கள் நல்வாழ்வைப் பாதுகாப்பேன்'' (''I will devote myself to the service and well being of the people of Tamil Nadu'' - Article 159) என்பதற்கு மாறாக, இப்படி காலங்கடத்தலாமா? அது கடமை தவறும் செயல் ஆகாதா?
டிசம்பர் 1-ல் போராட்டம்
எனவே, இரண்டொரு நாளில் அவர் ஒப்புதல் தந்து மசோதாவை அனுப்பிடவேண்டும். இன்றேல், வருகிற டிசம்பர் முதல் தேதி (1.12.2022) காலை 11 மணியளவில், ஆளுநர் அலுவலகமான ராஜ்பவன் அருகே கண்டன ஆர்ப்பாட்டப் போராட்டம் - இதனை வலியுறுத்தி - எனது தலைமையில் அறவழியில் நடைபெறுவது உறுதி! திராவிடர் கழகத் தோழர்கள், இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் மட்டுமல்லாது, இந்த உணர்வு படைத்தவர்கள், இது நியாயமான அறப்போராட்டம் என்று உணரும் எல்லோரும் இதில் தாராளமாகக் கலந்து, ஜனநாயக உரிமைகளைக் காக்கவும், சூதாட்ட தற்கொலைகளைத் தடுக்கவும், அரசமைப்புச் சட்ட உரிமைகள் பறிபோவதை அகற்றவுமான நிர்ப்பந்திக்கப்பட்ட இந்த அறப்போரில், அணி அணியாகக் கலந்துகொள்ள வாரீர்! வாரீர்!! என்று அன்புடன் அழைக்கிறோம்!