அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு... வேஷ்டி, சேலைக்கு தடை இல்லை... தமிழக அரசு
சென்னை: அரசு ஊழியர்கள் வேஷ்டி, சேலை உள்ளிட்ட பாரம்பரிய உடைகள் அணிவதற்கு எந்த ஒரு தடையும் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக அரசு அலுவலங்களில் பணி புரியும் ஆண், பெண் ஊழியர்கள் நாகரீக உடை என சில ஆடைகளை அணிந்து வருவது தேவையில்லாத பிரச்சனைகளையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுக்கு பல புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
புகாரை தொடர்ந்து ஆடை விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில், அரசு அலுவலங்களில் பணி புரிந்து வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் தூய்மையான ஆடைகளை அணிந்து வர வேண்டும். மேலும், ஆண்கள் சாதாரண பேண்ட், சட்டை அணிந்து பணிக்கு வரலாம்.
நீதிமன்ற விசாரணைக்கு செல்லும் ஆண்கள் கோட் அணிந்து செல்ல வேண்டும். பெண்கள் சேலை, சுடிதார் அணிந்து செல்லலாம். ஆனால் சுடிதார் மற்றும் சல்வார்கமிஷ் அணிந்து வரும் போது துப்பட்டா கண்டிப்பாக அணிந்து இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிச்சன் கேபினட் மூலம் ராஜ்யசபா எம்.பியாக துடிக்கும் திமுக வக்கீல்
அரசு ஊழியர்கள் வேஷ்டி, சேலை உள்ளிட்ட பாரம்பரிய உடைகள் அணிவதற்கு எந்த ஒரு தடையும் கிடையாது. தமிழ் கலாசாரம் மற்றும் இந்திய பாரம்பரிய உடைகளான வேஷ்டி, சேலை போன்ற நேர்த்தியான, சுத்தமான ஆடைகளாகவும், அலுவலகத்தின் நன்மதிப்பை பராமரிக்கும் வகையிலான ஆடைகளை அணிந்து வரலாம்.
டீ சர்ட், ஜீன்ஸ் உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஆண் ஊழியர்கள், ஃபார்மல் வகையிலான பேன்ட், சட்டைகளையே அணிதல் வேண்டும் என்றும், அலுவல் ரீதியாக நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வோர் தங்களின் ஆடை நிறம் மற்றும் ஆடையின் வடிவமைப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
முழுக்கையுடன் கூடிய கோட், திறந்த வகையிலான கோட்டை அணிய விரும்பினால் "டை" கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவு தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.