கொஞ்சமாக மது குடிங்க.. உடல்நலம் கெட்டுப்போகாது... அமைச்சர் தங்கமணி அட்வைஸ்
சென்னை: மதுபானம் அருந்துவோர் அளவாக குடித்தால் உடல்நலம் கெட்டுப்போகாது என்று அமைச்சர் தங்கமணி அட்வைஸ் செய்துள்ளார்.
அமைச்சரின் இந்த பேச்சால், இனிமேல், மதுபாட்டில்களில் 'மது நாட்டுக்கு, வீட்டுக்கு உயிருக்கு கேடு ' என்று அச்சிடுவதற்கு பதிலாக, 'அளவாக குடிங்க, உடலுக்கு நல்லது' என்று அச்சிட வேண்டியது தான் என்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் பேசி சிரித்தனர்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரின்ஸ், மதுபானங்களின் தரம் குறைவாக உள்ளது. அதைக் குடிப்பதால், சிறுநீரக கோளாறுகள் வருவதாகவும், உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, உடனடியாக, அனைத்து மதுக்கடைகளையும் மூடினால், கள்ளச்சாராயம் புகுந்துவிடும் என்பதாலேயே, படிப்படியாக, மதுக்கடைகள் குறைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில், 6 ஆயிரத்து 132 ஆக இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 152 கடைகளாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
மதுபானம் அருந்துவோர் அளவாக குடித்தால், பிரச்சினை இல்லை. அளவுக்கு அதிகமாக குடித்தால் உடல்நலம் கெட்டுப்போகத் தான் செய்யும். தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றார். மேலும், டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு தொகுப்பூதியம் ரூ. 2,000 அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கமணி கூறினார்.
எதிர்கால தமிழக மின்தேவையை கருத்தில் கொண்டு உயர்மின் கோபுர திட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் வகையில் உயர் மின்கோபுரங்களை அமைக்க வேண்டும் என்று அரசிற்கு எண்ணம் இல்லை என்றும் அவர் கூறினார்.